Search This Blog

சனி, 29 டிசம்பர், 2012

டெல்லி துயரம் தொடராமல் இருக்க என்ன செய்யப் போகிறோம்?

பேருந்து நிறுத்தத்துக்கும் மரத்துக்கும் என்ன சம்மந்தம்? ... விடை இந்த பதிவிற்குள் இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனில்லாமல் இன்று சிங்கப்பூரில் உயிரிழந்து விட்டார் என்றதும் நீதி கேட்டு கடுமையாக பொதுமக்கள் போராட்டம் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று அரசு கவனமுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கிறது.

தினம் தினம் இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு இப்போது மட்டும் ஏன் இந்த ஆவேசம் என்று சிலர் சில ஊடகங்களில் கேள்விகளை எழுப்பினார்கள்.

எல்லா சம்பவங்களையும் பார்த்து மனம் கொதித்துப்போய் இருந்தவர்கள் ஒரேடியாக பொங்கிவிட்டார்கள் என்று சிலரும் சில ஊடகங்களும் கருத்து சொன்னதாக அறிகிறேன். இது உண்மையாக கூட இருக்கலாம்.

இதுபோன்று தவறு செய்பவர்களுக்கு தண்டனை தேவைதான். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் பெண்ணை சக மனுஷியாக பார்க்காமல் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய பொருளாக சில கயவர்கள் நினைத்து இப்படிப்பட்ட கொடூரங்களை அரங்கேற்றச் செய்யும் மனநிலை எவ்வாறு உருவாகிறது. அந்த மனதை எப்படி சரிசெய்யப்போகிறோம் என்பதில்தான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதும் கிடைக்காததும் இருக்கிறது.

பலர் பல நூறு காரணங்கள் சொன்னாலும் மதுதான் இது போன்ற குற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. சிலர், மதுப்பழக்கம் இல்லாதவர்கள் கூட பெண்களையும், குழந்தைகளையும் சிதைக்கும் கொடூர காரியங்களை செய்கிறார்களே என்று கேட்கிறார்கள்.

அதுவும் உண்மைதான். சும்மா இருக்கும் மனம் சாத்தானின் குடியிருப்பு என்று சொல்வார்கள். வேலையில்லாதவன்தான் இப்படியயல்லாம் தவறு செய்கிறானா? நல்ல பணியில் இருப்பவர்கள் இப்படி தவறு செய்யாமலா இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

மனிதனின் மனம் ஓய்வை நாடும்போது அது நல்ல திசையில் திருப்பப்படாமல் வக்கிர திசையை நோக்கி செலுத்தப்படும்போதுதான் இப்படிப்பட்ட விபரீதங்கள் நடக்கின்றன.

நான் சிறுவனாக இருக்கும்போது பாடப்புத்தகங்கள் தவிர்த்து எனக்கு பொழுதுபோக்க கிடைத்த முக்கிய பொருள் புத்தகங்கள்தான். தெனாலிராமன், மரியாதை ராமன், பீர்பால், ஈசாப் நீதிக்கதைகள், விக்கிரமாதித்தன் என்று பலதரப்பட்ட நல்ல கருத்துக்களை சொல்லும் கதைகளுடன் தினசரி நாளிதழ்கள் கூட சிறுவருக்கான இணைப்புகளை புத்திக்கூர்மையை பலப்படுத்தக்கூடிய, நல்ல எண்ணங்களை விதைக்கக்கூடிய உள்ளடக்கங்களுடன்தான் வெளியிட்டார்கள்.

எனக்கு 25 வயதில் சாத்தியப்பட்ட செல்போன் இன்று 3 வயதுக்குழந்தைக்கு கிடைக்கிறது. அவர்கள் வெளியில் போய் விளையாட வழி இருப்பதில்லை. வீடியோ கேம்ஸ் உள்ளிட்ட பல்வேறு வடிவில் ரத்தவெறியைத் தூண்டும் கார்ட்டூன், விளையாட்டுக்கள் என்று பலவும் மனித மனத்தை வக்கிரபுத்தியுடன் கொடூரமான திசையை நோக்கி செலுத்திக்கொண்டிருக்கின்றன. இந்த போக்கு நல்ல வசதி படைத்த குடும்பங்கள் மற்றும் ஓரளவு நடுத்தர வசதியுடன் கூடிய குடும்பங்களில் வளரக்கூடிய குழந்தைளைப் பற்றி.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத குடும்பங்களில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்களின் சுற்றுப்புறத்தில் சாக்கடை கூட சரியாக இருப்பதில்லை. அவர்கள் படிக்கும் பள்ளியில் போதுமான அளவு ஆசிரியர்கள் இருப்பதில்லை. பிறகு அவர்களுக்கு எப்படி நூலக அனுபவம் கிடைக்கும்?

அப்படி வசதி இல்லாதவர்கள் தங்கள் சக்திக்கு மீறி படிக்க வைத்தாலும் அந்த பள்ளிகள் பாடப்புத்தகங்களை துரத்துவதற்கு மட்டுமே பழக்கப்படுகிறார்கள். சகிப்புத்தன்மை, நற்பண்புகள் இது போன்று எந்த ஒரு விசயமும் சில இடங்களில் கட்டாயத்தின்பேரில் அவர்கள் பின்பற்றுகிறார்களே தவிர, கூட்டம் சேர்ந்தால், யாரும் கவனிக்கவில்லை என்று உணர்ந்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி எவ்வளவு கொடூரமான செயல்களையும் கண நேரத்தில் தெரிந்து வேண்டுமென்றோ அல்லது அவர்களை மீறியோ செய்து விடுகிறார்கள்.

பெரும்பாலும் அவர்கள் செய்யும் செயல் தவறு என்று அவர்கள் புத்தி எச்சரித்தாலும், அதை செய்து பார்க்க வேண்டும் என்று அவர்கள் மனதில் குடியிருக்கும் சாத்தான் சொல்வதையே செய்து விடுகிறார்கள்.

இது போன்ற தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் கடுமையான கண்காணிப்பு அவசியம். எல்.கே.ஜி மாணவர்கள் கூட வகுப்பில் ஆசிரியை இல்லை என்றால் சளசளவென்று பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படி இருக்கும் போது குரங்கு என்று வர்ணிக்கப்படும் மனித மனம் சும்மாவா இருக்கும்?

சில வெளிநாடுகளில் துண்டுக்காகிதத்தை குப்பைத்தொட்டியை விட்டு வெளியில் போட்டால் கூட அடுத்த 5வது நிமிடம் போலீஸ் வீடு தேடி வரும் என்ற சூழ்நிலை இருப்பதால் வாலை சுருட்டிக்கொண்டு இருக்கும் நபர், நம் நாட்டில் பத்து வீடுகள் கொண்ட குடியிருப்புக்குள் நுழையும் 4 அடி அகல வாசலின் குறுக்கே யாரும் நுழைய முடியாதபடி அதே நாலடி நீள இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்லும் பழக்கத்துடன் இருப்பதை என்னவென்று சொல்வது?

வெயில் தாங்க முடியவில்லை. போகும் வழியில் ஆங்காங்கே நிழலில் இளைப்பாறிச் செல்லலாம் என்று (காரில் சென்றால் கூட) நினைப்போம். அப்படி நிழல் தருவதற்காக சிமெண்ட், மணல், ஜல்லி கொண்டு நிழற்குடையை கட்டி வைப்போம். தமிழகத்தில் ஏதாவது ஒரு தேசிய நெடுஞ்சாலையில் மே மாதம் கத்திரி வெயிலில் இப்படி ஒரு நிழற்குடையில் அரை மணி நேரம் நீங்கள் ஓய்வெடுப்பதற்கும், குளு குளு என்று இயற்கை காற்றுடன் நிழல் தரும் பெரிய மரத்தடியில் நின்று ஓய்வெடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா? (அந்த மரம் தரும் நன்மைகளை பட்டியலிட்டால் மிகப்பெரியதாக நீளும். நமக்கு ஆக்சிஜன், மழை தருவதிலிருந்து கரியமில வாயுவை கிரஹித்துக்கொள்வது வரை எவ்வளவோ நன்மைகள்.)

பேருந்து நிறுத்தமும் கட்டிடங்களும் தேவைதான். நான் இல்லை என்று சொல்ல வில்லை. நம் நாட்டில் டெக்னாலஜி டெவலப்மெண்ட் என்று வெறும் நிழற்குடைகளைத்தான் கட்டிக்கொண்டிருக்கிறோமே தவிர, மரங்களை அழித்துக்கொண்டிருக்கிறோம்.

இப்போது மனித மனங்களும் இப்படித்தான், ஏதோ ஒரு இயந்திரம் தயாரிக்கும் பொருள் போல ஆகிக்கொண்டிருக்கிறது. அதன் விளைவுகள் தான் இதுபோன்ற கொடூரமான குற்றங்கள். 50 வருசத்துக்கு முன்னால இப்படி எல்லாம் இல்லையா என்று கேட்காதீர்கள். அப்போது குற்றம் செய்பவர்களை விரல் விட்டு எண்ண வேண்டியிருந்தது. இப்போது குற்றம் செய்யாதவர்களை விரல் விட்டு எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

ஒருவன் வேலையை முடித்து விட்டு ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதை விட நல்ல நூல்களை படித்தால் அவன் மனதில் எவ்வளவு மாற்றங்கள் இருக்கும் தெரியுமா?

அதெல்லாம் சரி...நல்ல புத்தகங்கள் எங்கே வருகிறது என்றும் நீங்கள் கேட்கலாம். நிறைய எழுத்துக்களில் நேர்மை இருப்பதில்லை என்பதும் உண்மைதான். நிறைய படிக்கும்போது சரடு விட்டு மக்களை முட்டாளாக்குபவர்களையும் அந்த மாதிரியான எழுத்துக்களையும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அப்படி புரிந்து கொண்டுவிட்ட மக்கள் தொகை அதிகரித்தால் யாருக்கெல்லாம் ஆபத்து வருமோ அவர்கள் என் மீது எதாவது பொய்ப்புகார் கொடுக்க முயற்சிக்கலாம்.

.............அதனால இத்தோட இந்த பதிவை நிறுத்திக்கிறேன்.

புதன், 12 டிசம்பர், 2012

விஸ்வரூபம் - கமலின் வியாபார உத்தி சரியா?


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த அளவு வீடுகளில் தொ(ல்)லைக்காட்சிகளும் கிடையாது. டிவிடி பிளேயரும் கிடையாது. மக்களுக்கு பொழுது போக்கு என்றால் பெரும்பாலும் சினிமா தியேட்டராகத்தான் இருந்தது. அதை விட முக்கியமான விசயம், அதிகாலையில் இருந்து இரவு வரை மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் ஓய்வு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் போக்கு அப்போது இந்த அளவுக்கு இல்லை.

ஆனால் இன்று நிலைமை தலைகீழ். வேலை செய்யும் இடம், பணி செய்யும் இடத்திற்கும் குடியிருக்கும் இடத்திற்கும் உள்ள தூரம் போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் ஆற அமர தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் அளவுக்கு நேரம் ஒதுங்குவது இல்லை.

பெரும்பாலும் காதலர்களையும் மாணவர் உலகத்தை மட்டுமே தியேட்டர்கள் நம்பும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. இப்படிப்பட்ட காலகட்டத்தில் தனது படத்தை பார்க்கும் நபர்களிடம் ஓரளவுக்காவது சிந்தாமல் சிதறாமல் பணத்தை வசூல் செய்ய வேண்டுமே என்ற நோக்கத்தில்தான் விஸ்வரூபம் படத்தை தொலைக்காட்சியிலும் ரிலீஸ் செய்ய கமல் முடிவு செய்துள்ளார்.

எந்த ஒரு செயலை செய்தாலும் அதனால் நன்மை, தீமை கலந்துதான் இருக்கும். அதில் உள்ள தீமைகளின் பாதிப்பை எந்த அளவுக்கு குறைக்க வேண்டும் என்றுதான் சிந்திக்க வேண்டுமே தவிர அந்த முறை ஒத்துவராது என்று மறுத்துவிடுவது பிற்காலத்தில் கிடைக்கும் நன்மைகளையும் புறந்தள்ளியதற்கு சமமாகும்.

நான்குவழிச்சாலைகளை அமைத்துவிட்டு டோல் கேட் அமைத்து வசூலிப்பவர்களிடம் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதில் ஒன்று, சுங்கம் வசூலிக்கும் இடத்தில் அவர்கள் அனுமதி இன்றி ஒரு சைக்கிள் கூட கடந்து செல்ல முடியாத அளவுக்கு கட்டமைப்பு இருக்கும். அதாவது அந்த சாலையில் செல்பவர்களிடம் சிந்தாமல் சிதறாமல் பணம் வசூலிக்கும் முறையை அப்படியே படம் பார்ப்பவர்களிடம் செயல்படுத்த முடியாது. ஆனால் பல தியேட்டர்களில் இருக்கும் பகல் கொள்ளை கட்டணம் ( பார்க்கிங் முதல் கேண்டீன் வரை), நேரமின்மை போன்ற காரணங்களால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாதவர்கள் ஏதோ ஒரு ரூபத்தில் வீட்டிலேயே அந்த படத்தை பார்த்துவிடுகிறார்கள். அவர்களிடம் ஓரளவாவது கட்டணம் பெற்று படம் பார்க்க வைப்பதை வருங்காலத்தில் முறைப்படுத்தி செய்தால்தான் சினிமா தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும்.

பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்கள் ஒரு சில சிரமங்களை அனுபவித்தாலும் அவர்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் எந்த சிரமமும் இருப்பதில்லை. ஆனால் நல்ல கதையுடன் சின்ன பட்ஜெட் படங்களை எடுத்து 10 தியேட்டர் கூட கிடைக்காமல் அதில் 20 காட்சிகள் திரையிடுவதற்குள் அடுத்த படத்திற்காக தூக்கப்பட்டுவிடும். படம் பார்க்கலாம் என்று நினைத்து தியேட்டருக்கு சாமானிய ரசிகன் கிளம்பும் வரை படம் காத்திருப்பதில்லை. அதற்கெல்லாம் டிவியில் திரையிட்டு ரசிகர்களிடம் நேரடியாக வசூலிக்கும் முறை ஓரளவாவது தீர்வு தரும் என்று நினைக்கிறேன்.

16 ஆண்டுகளுக்கு முன்பு தியேட்டரில் பணியாற்றிய அனுபவத்தில் என் மனதில் தோன்றிய சில விசயங்கள்:

1. அப்போதெல்லாம் எந்த படம் திரையிடப்பட்டாலும் சுமாரான படங்கள் கூட 10 நாளைக் கடந்துவிடும். தோல்வி அடைந்த படங்கள் கூட 14 நாட்கள் ஓடி தியேட்டர்களுக்கு கொஞ்சமாவது லாபம் சம்பாதித்து கொடுத்துக்கொண்டிருந்தன.

2. இதில் நான் கவனித்த இன்னொரு விசயம், மூன்று வாரங்கள் வரை படம் ஓடும்போது, கடைத்தெரு, மார்க்கெட், சுமைதூக்கும் தொழிலாளர்கள் போன்றவர்கள் திரும்ப திரும்ப இரவுக்காட்சிகளுக்கு வருவதை பார்த்திருக்கிறேன். ஒன்றிரண்டு பாடல்கள், சில நகைச்சுவைக்காட்சிகளுக்காக இதுபோன்ற ரிப்பீட் ஆடியன்ஸ் வருவார்கள். இப்போது அதற்கெல்லாம் வேலையில்லை. ஏனென்றால் இசையருவி, சிரிப்பொலி போன்ற சேனல்களும், உள்ளூர் சேனல்களும் பாடல்கள், நகைச்சுவையை மக்களுக்கு கொடுக்கும் வேலையை பார்த்துக்கொள்கின்றன.

3. அப்படி ரிப்பீட் ஆடியன்ஸ் வருவதற்கு மற்றொரு முக்கிய காரணம், கட்டணம். அப்போது எட்டு ரூபாய், பத்து ரூபாய், அதிகபட்சம் 15 ரூபாய் என்றுதான் கட்டணம் இருந்தது. ஆனால் சிறு நகரங்களிலேயே இப்போது குறைந்தபட்சம் 60 ரூபாய். படம் ரிலீசாகும் நாட்களில் 100 முதல் 150 ரூபாய் வரை. கட்டண உயர்வைப் போலவே தியேட்டர்களில் மூட்டைப்பூச்சி, கொசுக்கடி என்று ரசிகர்களை இம்சைப்படுத்தும் விசயங்களும் அதிகரித்துவிட்டன. (கொசுக்கடியே தேவலாம் என்று நினைக்கும் அளவுக்கு சில படங்கள் இருக்கும்.அதைப் பற்றி பிறகு பேசுவோம்)

4. இப்போதும் 30 ரூபாய் என்ற அளவில் கட்டணம் இருந்தால் சாதாரண படங்களுக்கு கூட கூட்டம் வர வாய்ப்பு உண்டு. அதெல்லாம் வர மாட்டாங்க. எப்படி இருந்தாலும் வீட்டில் டிவிடி போட்டுதான் பார்ப்பாங்க என்று சிலர் சொல்லக்கூடும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் திருட்டு டிவிடி விற்கும் இடத்தில் ஒரிஜினல் டிவிடியை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கும் வேலையை செய்யவில்லை என்றால் நஷ்டம் படம் பார்க்கும் மக்களுக்கு இல்லை.

5. திருட்டு டிவிடியை சுத்தமாக ஒழித்து விட்டாலும், அதனால் தியேட்டருக்கு கூட்டம் திருவிழா போல் வந்து விடுமா என்று கேட்டால் அதற்கும் உத்திரவாதம் கொடுக்க முடியாது. ஏனென்றால் மக்களின் சாப்பாட்டுக்கு தேவையான அரிசி, குடிநீர் போல் சினிமா இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை எல்லாம் இல்லை.

6. டிவிடி கிடைக்கவில்லை என்றால் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நாளில் பார்த்துக்கொள்ளலாம் என்று (என்ன, 2 மணி நேரப்படம் விளம்பரங்களுடன் 5 மணி நேரம் ஒளிபரப்பாகும்) மற்ற வேலைகளைப் பார்க்க போய்விடுவார்கள். ஏனென்றால் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி வேலை முடித்து வந்து மாலைக்காட்சி பார்க்கும் அளவுக்கு மக்களின் வேலைநேரமோ, சூழ்நிலையோ அமையவில்லை.

7. இன்னொரு காரணம், பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் இந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளரவில்லை, கதையில் லாஜிக் இல்லை என்று ஏகப்பட்ட இல்லைகள் சொன்னாலும் அப்போதைய படங்களை இப்போது பார்த்தாலும் படம் முடியும் போது ஒரு மனநிறைவு, படம் பார்த்து முடித்த சந்தோசம் கிடைக்கும். ஆனால் இன்றைய படங்களைப் பார்க்கும்போது இவையயல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறையும் தொலைக்காட்சியில் சற்றே பழைய படங்களைப் பார்க்கும் போது உணர்வார்கள்.

8. அவ்வளவு ஏன், என்னுடைய மன நிலையை சொல்லட்டுமா? சேது, நந்தா, பிதாமகன், காசி, காதல் இது போன்று முடிவுகள் சோகமாக உள்ள படங்கள் எவ்வளவுதான் நேர்த்தியாக படமாக்கப்பட்டிருந்தாலும் தொலைக்காட்சிகளில் மீண்டும் பார்க்க நேரும்போது, நடுவிலேயே வேறு சேனல்களுக்கு மாறிவிடுகிறேன். காரணம், வாழ்க்கையில்தான் இவ்வளவு சிரமப்படுகிறோம், படத்தைப்பார்த்தும் மனம் கலங்க வேண்டுமா என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொள்வதுண்டு.

9. படத்தை படமாத்தான் பார்க்கணும். பெண்கள் மெகாசீரியல்களைப் பார்த்து ஒப்பாரி வைப்பது போல் நீயும் படத்தைப் பார்த்து அழுதால் அதற்கு நாங்களா பொறுப்பு என்று சிலர் கேட்கக்கூடும். நான் சொல்ல வந்த விசயம் அது இல்லை. இது போன்ற படங்கள் நல்ல படங்கள்தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்தப் படங்களும் ரசிக்கத்தக்கவைதான். ஆனால் சாமானிய ரசிகன், அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து விட்டு சற்று நேரம் இளைப்பாறலாம் என்று படம் பார்க்க வந்தால் இது போன்ற படங்கள் மன நிறைவை அளிக்காது. அவர்களுக்கு இரவு வாட்ச்மேன் தூக்கம் வராமல் இருக்க டீ குடித்து தூக்கத்தைப் போக்கி உற்சாகப்படுத்திக்கொள்வது போல் நிமிர்ந்து உட்காரச்செய்யும் படங்களும் தேவை என்றுதான் சொல்கிறேன்.

10. இப்போதும் இப்படி மசாலா படங்கள் வந்தாலும், ஆளாளுக்கு பஞ்ச் டயலாக் பேசி காதுகளை பஞ்சராக்கி அது போன்ற படங்களையும் பிடிக்காமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

11. முன்பு பிலிம் சுருள் மூலம் தியேட்டரில் படம் திரையிடும்போது, ஆப்ரேட்டர் பணி செய்யும் முறையை வைத்தே படத்தின் தன்மையை கணித்துவிடலாம். ஒரு படம் என்பது 2000 அடி நீளம் உள்ள பிலிம் சுருள் கொண்ட ஏழு பகுதி அல்லது எட்டு பகுதியாக வரும். இடைவேளைக்கு முன்பு நாலு சுருள். பிறகு மூன்று அல்லது நான்கு.

18 முதல் 22 நிமிடங்கள் வரை ஒரு சுருள் ஓடும். ஒரு புரொஜக்டரில் 20 நிமிடம் ஓடி முடிந்த உடன் அடுத்த புரொஜக்டரை ஸ்டார்ட் செய்த ஆப்ரேட்டர் ஓடி முடிந்த பிலிம் சுருளை ரீவைண்ட் செய்வது, மூன்றாவது சுருளை அடுத்த புரொஜக்டரில் பொருத்தி, கார்பனை சரிபார்ப்பது போன்ற பணிகளை 4 முதல் ஆறு நிமிடங்களுக்குள் செய்து விட்டு அவரும் படம் பார்த்துக்கொண்டே கார்பனை நெருக்கி சரியாக எரியூட்டினால் படம் ஆப்ரேட்டருக்கு பிடித்து விட்டது என்று பொருள். எல்லா நாளும் அப்படி பார்க்க வில்லை என்றாலும் குறைந்தது 4 நாட்களாவது இப்படி இருக்க வேண்டும். (பல தியேட்டர்களில் பிலிமை ரீவைண்ட் செய்யவும், கார்பனை ஒழுங்காக எரிக்கவும் உதவியாளர்கள் இருப்பார்கள். நான் சொல்வது ஆப்ரேட்டர் மட்டுமே எல்லா வேலைகளையும் செய்யும் தியேட்டர்களைப் பற்றி)

அதைவிட்டுவிட்டு ஒரு சுருள் (2 ரீல் ) படம் ஓடும் 20 நிமிடங்களும் ஏற்கனவே ஓடிய பிலிமை ரீவைண்ட் செய்தல், அடுத்து ஓட வேண்டிய பிலிமை மற்றொரு புரொஜக்டரில் பொருத்துதல் ஆகிய வேலைகளை 10 முதல் 13 நிமிடம் வரை செய்து விட்டு படத்தை பார்க்காமல் ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு கார்பனை நெருக்கிக்கொண்டிருந்தால் படம் அவர் மனதைக் கவரவில்லை என்று சொல்லலாம்.

13. அந்த காலகட்டத்தில் நான் பார்த்த பல படங்களில் இப்போதும் தொலைக்காட்சியில் பார்க்க விரும்புவது என்றால் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, பூவே உனக்காக, காலம் மாறிப்போச்சு, முத்து, அவ்வை சண்முகி, ஜென்டில்மேன், என்று பல படங்களை சொல்லலாம். இவற்றில் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் நகைச்சுவைக் காட்சிகள் அதிகம் உள்ள படங்களைத்தான் நாம் விரும்புவோம். எல்லா நேரங்களிலும் அழ நாம் விரும்புவதில்லை. இந்த உண்மையை படமெடுப்பவர்கள் புரிந்து கொண்டால் நல்லது. அதற்காக மொக்கை ஜோக்குகளை வைத்து ரம்பம் போட்டுடாதீங்கப்பா.

14. விஸ்வரூபம் படத்தை கமல் தொலைக்காட்சியில் முதலில் ரிலீஸ் செய்வது சரியா தவறான்னு பதிவுக்கு தலைப்பு வெச்சுட்டு என்னென்னமோ எழுதிட்டு போறேன்னு எனக்கும் புரியுது.

என்னைப் பொறுத்தவரை கமல் மட்டுமில்லை. படம் எடுக்கும் எல்லோருமே மக்கள் தியேட்டர்களில் மட்டுமே வந்து (சிலர் பொருளாதார நிலைக்கு ஒரு வாரத்து சம்பளமா இருக்கும்) பணத்தை கொட்டி அழுதுட்டு படம் பார்க்கணும்னு நினைக்காம, அவர்கள் இடத்துக்கே டோர் டெலிவரி மாதிரி ஏதாவது செஞ்சு காசு வசூல் பண்றதுக்கு நேர்த்தியான வழியை முயற்சிக்கணும். இதை சொல்ல வந்துதான் மெகாசீரியல் மாதிரி என்னென்னவோ எழுதுறேன்.

என்ன பண்றது. பல நேரங்கள்ல படம் எடுக்குறவங்களும் இப்படித்தான். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் சொல்லாம, ஹீரோவைப் பத்தி பில்ட் அப் கொடுக்கவும், மிட்நைட் மசாலாவுல போடுறதுக்காக எடுத்து வச்ச பாட்டை செருகுறதுக்கும் ஏத்த மாதிரி கதையை சின்னாபின்னமாக்கி நான் இப்ப எழுதுன பதிவு மாதிரி ஆடியன்சுக்கு எதையும் புரிய விடாம பண்ணிடுறாங்க.

வியாழன், 6 டிசம்பர், 2012

நண்பன்





12-12-2012 தேதியிட்ட தேவி வார இதழில் பிரசுரமான சிறுகதை



1996ஆம் ஆண்டு கோடை விடுமுறை தொடங்கிய நேரம்:



திருவாரூர் அய்யனார் கோவில் தெருவில் இருந்த முடிதிருத்தகத்தின் வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்ச்சில் இரண்டு சிறுவர்களின் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள்.



"டேய்...வர்ற 9ஆம் தேதி இந்தியன் படம் ரிலீசாகுதுடா...­ஷங்கர் டைரக்சன். படம் சூப்பரா இருக்கும். கமல் ஹீரோ.கேட்கவா வேணும்...தைலம்மை தியேட்டர்ல வரப்போகுது. நான் முதல்நாளே போய்டுவேம்பா...'' என்றான் வடிவேல்.



"ச்சே...நம்ம ஊர்ல ஏ/சி தியேட்டர் இல்லடா. இருக்குற தியேட்டர்லயும் ஏசி மிசின் ரிப்பேராயிடுச்சாம். இங்க பாரேன். தஞ்சாவூர் விஜயா ஏ/சி, குடந்தை விஜயா ஏ/சி, மாயவரம் விஜயான்னு போட்டிருக்கு. மூணு ஊர்லயும் ஒரே தியேட்டரா பார்த்து படத்தை குடுத்துருக்காங்க.''என்ற மற்றொரு சிறுவனான பிரசாத்தின் பேச்சில் வியப்பு தெரிந்தது.



"அது வேற ஒண்ணும் இல்லடா...இந்த விஜயா தியேட்டர் எல்லாம் படத்தை திருச்சி ஏரியாவுல டிஸ்ட்ரிபியூட் பண்ற முருகன் பிக்சர்ஸ் காரங்களோடதுதான் . அதுனாலதான் அவங்க தியேட்டர்லயே ரிலீஸ் பண்றாங்க.''



"இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்?'' என்று பிரசாத் கேட்கவும்,



வடிவேல் முகம் நிறைய பெருமையுடன், ""சோழா தியேட்டர்ல ஆப்ரேட்டரா இருக்குறவர் என் பிரண்டு வீட்டு மாடியிலதான் குடியிருக்கார். அவருதான் இந்த செய்தியெல்லாம் சொல்லுவாரு. ம்ப்ச். என்ன...இந்தியன் படம் தைலம்மையில வராம சோழா தியேட்டர்ல வந்துருந்தா நான் க்யூல நின்னு டிக்கட் வாங்காம அவரோடயே நேரே உள்ள போயி....'' என்று பேசி முடிக்கும் முன்பே முதுகில் அடி விழுந்தது.



வடிவேல் கையில் இருந்த பேப்பரை பிடுங்கி கடைக்குள் வீசிவிட்டு அவன் முதுகில் கிருஷ்ணமூர்த்தி மத்தளம் வாசித்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜெயராமன், பதறிப்போய் சைக்கிளை விட்டு இறங்கினார். வடிவேலுடன்  நின்றுகொண்டிருந்த பிரசாத் திரும்பிப்பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்தான்.



"அப்பா...அடிக்காதீங்கப்பா...பேப்பர் படிச்சா என்னப்பா தப்பு...'' என்று அலறியதை பொருட்படுத்தாமல் கிருஷ்ணமூர்த்தி தன் மகனை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார்.



"யோவ் கிருஷ்ணமூர்த்தி, அவன் உடம்பு என்ன இரும்பா...இந்த அடி குடுத்து புரட்டி எடுக்குற?'' என்று ஜெயராமன் அடிவாங்கிக்கொண்டிருந்த வடிவேலுவுக்கு ஆதரவாக பேசவும், அவன் வந்து இவர் பின்னால் ஒளிந்தான்.



"உனக்கு விஷ­யம் தெரியாது கிருஷ்ணமூர்த்தி. ஒரு வீட்டுல எல்லா புள்ளையும் ஒரே மாதிரி இருக்காதுன்றது சரியாப்போச்சு. இவனுக்கு மூத்த பிள்ளைங்கள்ல  ஒருத்தன் பதினொன்னாவது படிக்கிறான். இன்னொருத்தன் ஒன்பதாவது படிக்கிறான். அவனுங்க பாடப்புத்தகத்தை தவிர வேற எதையும் புரட்டிக்கூட பார்க்க மாட்டானுங்க. ஆனா இவன் எந்த நேரத்துல பொறந்தான்னே தெரியலை.



யார் வீட்டுல கதைப்புத்தகத்தைப் பார்த்தாலும் எடுத்து வெச்சுகிட்டு உட்கார்ந்துடுறான். இப்ப புதுசா பேப்பர் படிக்க எங்க போய் பழகுனான்னு தெரியலை. ஏழாவது படிக்கிறதுக்குள்ள எந்த தியேட்டர்ல என்ன படம்...அந்த தியேட்டருக்கு யார் முதலாளின்னு ஆராய்ச்சி பண்றது உருப்புடுறதுக்கா...



அப்புறம் என்னை மாதிரி ஏதாவது துணிக்கடையிலேயோ, மளிகைக்கடையிலேயோ கூலி வேலை பார்க்குறதுலேயே ஆயுசு போயிடும். இதை இவனுக்கு எப்படி புரிய வெக்கிறது?'' என்று தலையில் அடித்துக்கொண்டார் கிருஷ்ணமூர்த்தி.



"சின்ன பையனுக்கு என்னய்யா தெரியும்...கொஞ்ச நாளானா சரியாயிடுவான். பள்ளிக்கூடத்துல சரியா படிக்காம இப்படி கண்டதையும் படிச்சா தப்பு. ஆனா கிளாஸ்லேயே நானூறு மார்க் எடுக்குற  ஒரே ஆள் உன் புள்ளை தான்னு நீயே சொல்லியிருக்க.''என்று ஆறுதலாக பேசினார் ஜெயராமன்.



"பாடப்புத்தகத்தை ஒழுங்கா படிச்சா நானூத்தம்பதுக்கு மேல எடுக்கலாம்னுதானே இந்த கருமத்தையயல்லாம் படிக்காதேன்னு சொல்றேன்.''



அவ்வளவு அடி வாங்கியும் வடிவேல், "படிச்சா என்ன தப்பு' என்றுதான் சொன்னானே ஒழிய இனிமே இப்படி செய்யமாட்டேன் என்ற வார்த்தை அவன் வாயில் இருந்து வரவே இல்லை.



இந்த பிரச்சனை இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உணர்ந்த ஜெயராமன்,  "ரொம்ப அடிக்காதய்யா...பயந்துடப்போறான்'' என்று கிருஷ்ணமூர்த்தியை சமாதானப்படுத்த பார்த்தார்.



"எது...இதுவா பயப்படப்போகுது'' என்று சொன்னவாறே வடிவேலை எட்டி உதைக்க கிருஷ்ணமூர்த்தி முயற்சித்தபோது, சட்டென்று வடிவேல் நகர்ந்துவிட்டான். இதை எதிர்பார்க்காமல் கீழே விழப்போன கிருஷ்ணமூர்த்தியை ஜெயராமன் தாங்கிப்பிடித்தார்.



"எதுவா இருந்தாலும் வீட்டுல வெச்சுக்க...இப்போ உன் மானம்தான் போகுது. கெளம்புப்பா...'' என்று ஜெயராமன் கிருஷ்ணமூர்த்தியை ஒருவழியாக புறப்பட வைத்தார்.



"வீட்டுல, வெளியில, கடையிலன்னு என்கிட்ட இவன் எங்கதான் உதை வாங்கல...ஆனாலும் திருந்த மாட்டெங்குறான். மூணுல ஒண்ணை கோயிலுக்கு நேர்ந்து விட்டதா நினைச்சுக்க வேண்டியதுதான். எல்லாம் தலைவிதி. அப்புடி இந்த பேப்பர்ல என்னதான் இருக்கு? ஒண்ணு கொலையைப் பத்தி போடுறாங்க. இல்ல கொள்ளை. அதை விட்டா சினிமா. இதைப் படிச்சுகிட்டே இருந்தா சோறு போடுமா? நான் படிக்கும்போதும் சரி. இப்பவும் சரி. பேப்பரை பார்த்தாலே பத்திகிட்டு வருது.'' என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு கிருஷ்ணமூர்த்தி சென்றுவிட்டார்.



ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரியும் ஜெயராமன் சில காலம் கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு அருகில் குடியிருந்தபோது பழக்கம்.



"நாளைக்கே உடம்பு முடியாம படுத்துட்டா அந்த ஜவுளிக்கடையில இருந்து மொத்தமா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. இவனுங்களை கடன் வாங்கி பெரிய படிப்பு வைக்க முடியுமா? நல்ல மார்க் எடுத்துட்டா பணம் குறைவா இருக்குற காலேஜ்ல சேர்த்துடலாம். மூத்தவனுங்க ரெண்டு பேரும் என் பேச்சை கேட்டு ஒழுங்கா படிக்கிறாங்க. சின்னதுதான் தறுதலையா நிக்கிது' என்று அடிக்கடி ஜெயராமனிடம் கிருஷ்ணமூர்த்தி புலம்புவார்.



"வடிவேலு நல்லாத்தான் படிக்கிறான். அது போதாதுன்னு அவனை கரிச்சு கொட்டிகிட்டே இருக்காரு...' என்று கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கனகவள்ளி  மகனை விட்டுக்கொடுக்காமல் பேசுவாள்.



ஆனால் யாருடைய சமாதானமும் கிருஷ்ணமூர்த்தியிடம் எடுபடாது.



+++



ஜெயராமன் பணிபுரிந்த நிறுவன முதலாளிக்கு காரைக்குடியில் ஒரு கிளை இருந்தது. அங்கே பொறுப்பான ஆள் தேவைப்படவே, ஜெயராமன் காரைக்குடிக்கு ஜாகையை மாற்றினார். ஆண்டுகள் ஓடியதே தெரியவில்லை.



வேலையை விட்டு ஓய்வு பெற்ற பிறகு, மருமகளுக்கு அவரை தங்களுடன் வைத்திருக்க விருப்பமில்லாமல் போய்விடவே, ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருந்தாள். அவர் மகனும் தன் மனைவியை கண்டிக்கவே இல்லை.



இவருக்குதான் ரோ­ம் அதிகம் ஆயிற்றே. மனைவியை அழைத்துக்கொண்டு திருவாரூருக்கு வந்துவிட்டார்.



+++



2011ஆம் ஆண்டு மார்கழி மாதம் அதிகாலையில் பனிபொழியும் நேரம்:



டீக்கடை, சலூன் என்று எங்காவது வடிவேலு பேப்பர் படிப்பதை பார்த்தால் விரட்டி விரட்டி அடித்து துரத்திய கிருஷ்ணமூர்த்தியை 16 ஆண்டுகளுக்குப்பிறகு அந்த நிலையில் ஜெயராமன் எதிர்பார்க்கவே இல்லை.



திருவாரூர் பெரிய கோவிலில் மார்கழி மாதம் திருப்பள்ளியெழுச்சி பூஜை முடிந்ததும் தியாகராஜர் சன்னதியை விட்டு பக்தர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். உள் பிரகார வாசலில் வழக்கம்போல் வெண்பொங்கல் பிரசாதம் வினியோகம் நடந்துகொண்டிருந்தது. ஜெயராமன் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் பிரசாதத்தை வாங்கிக்கொண்டார். வெறும் கையில் பொங்கலை வாங்கிய சிலர்  சூடு தாங்காத காரணத்தால் உள்ளங்கையில் அந்த பொங்கலை பந்து போல் உருட்டி சமாளித்துக்கொண்டிருந்தனர்.



இதே மாதிரி நடக்கும்னு எதிர்பார்த்துதானே நான் வீட்டுல இருந்து பிளாஸ்டிக் பை எடுத்துட்டு வந்தேன் என்று நினைத்தபடி இரண்டாம்பிரகாரத்தில் வலம் வந்த ஜெயராமனின் முகத்தில் சில்லென்று ஊசி குத்துவது போல் பனிச்சாரல் அடித்தது. நான்கு அடி தூரத்துக்கு அப்பால் வந்தவர்களின் முகம் தெரியவில்லை. காதுக்குள் காற்று நுழையாதவாறு மப்ளரை சுற்றியிருந்தாலும் அதை மீறி  குளிர் தாக்கியதால் மீதமிருந்த ஒன்றிரண்டு பற்கள் மோதிக்கொண்டன.



கொஞ்ச நேரம் பேப்பர் படிச்சுட்டு கிளம்பினா ஓரளவுக்கு பனிமூட்டம் விலகிடும் என்று நினைத்தவாறே கோயில் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள நூலக அறைக்குள் நுழைந்த ஜெயராமன் அங்கே அமர்ந்து நாளிதழ் படித்துக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்ததும் வியப்பில் வாய்பிளந்துவிட்டார். "அய்யா...கிருஷ்ணமூர்த்தி...என்னைத்தெரியுதா?''என்று கேட்டவாறு அருகில் வந்த ஜெயராமனை அவர் ஏறிட்டு பார்த்தார்.



"அடடே...என்னப்பா ஜெயராமா...ரொம்ப வரு­மா ஆளையே காணோம்...நான் தினமும் கோயிலுக்கு வர்றேன் உன்னைப் பார்க்கவே இல்லையே...''என்று கிருஷ்ணமூர்த்தியின் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.



அருகில் இருந்து நாளிதழ்கள் படித்துக்கொண்டிருந்த மற்ற வாசகர்கள் சட்டென்று இவர்களைப் பார்த்தார்கள்.



"சாரிங்க...''என்று கிருஷ்ணமூர்த்தி அந்த நூலகத்திலிருந்தவர்களைப் பார்த்து சொல்லி விட்டு, கமலாம்பாள் சன்னதிக்கு செல்லும் வழியில் கோயில் அலுவலகத்தின் பக்கவாட்டில் இருக்கை போன்ற அமைப்பில் வசதியாக ஜெயராமனுடன் அமர்ந்தார். இப்போதும் பனி மெல்லிய சாரல் மழையாக பெய்துகொண்டே இருந்தது.



"என்ன ஜெயராமா...காரைக்குடிக்கு போனதுக்கு அப்புறம் ரெண்டு வரு­ம் கடிதம்  போட்ட. அப்புறம் சுத்தமா தொடர்பே இல்லையே...என்னாச்சு.'' என்ற கிருஷ்ணமூர்த்தியின் குரலில் பழைய சிநேகிதனை மீண்டும் பார்த்த ஆர்வம் தெரிந்தது.



"ம்ப்ச்...அதை ஏம்பா கேட்குற...மருமகளுக்கு நாங்க இருக்குறது புடிக்கலை போலிருக்கு. நடந்தா தப்பு. உட்கார்ந்தா தப்புன்னு ஒரே இம்சை. டாய்லட்ல தண்ணி ஊத்தலைன்னு மகன் கிட்ட புகார் செய்யுறா. இதுக்கு மேல அவமானம் தேவையான்னு இங்கேயே வீடு பார்த்து பொண்டாட்டியோட வந்துட்டேன்.



ஆர்டிஆர் கம்பெனியில வேலைக்கும் சேர்ந்துட்டேன். மார்கழி மாசத்துல ஒரு நாள் காலையில மரகதலிங்க தரிசனம் பார்க்கணும்னு ஆசை. வந்துட்டேன். நாளைக்கெல்லாம் எழுந்து வர முடியாது போலிருக்கு. ஏழு மணிக்கு வேலை முடிஞ்சிடும். வீடு எங்க அதே இடம்தானே. முடிஞ்சா வர்றேன். இனி எங்க உயிர் போறது இந்த ஊர்லதானே'' என்று பேசிய ஜெயராமனின் குரலில் விரக்தி தெரிந்தது.



"பொழுது விடிஞ்ச நேரத்துல இது என்ன பேச்சு. நாங்க இருந்த வீட்டு மாடியை வாடகைக்கு விட்டுட்டு கீழே நாங்க வந்தா போனா தங்குறதுக்கு வச்சிருக்கோம். இன்னும் ஒரு வாரம் இங்கதான் இருப்பேன். வர்றதுன்னா, போன் பண்ணிட்டு வா.''என்று ஒரு துண்டு சீட்டில் நம்பரை எழுதிக் கொடுத்தார் கிருஷ்ணமூர்த்தி.



"நீங்களும் இந்த ஊர்ல இல்லையா. அது கெட்டுச்சு போ. எங்க சென்னையா?''



"எப்படிப்பா கரெக்டா சொல்ற?''



"நம்ம ஊர்ல இருந்து சென்னைக்கு போனது போக மிச்சம்தானே வேற ஊர்களுக்கு போறது. அது சரி...நீ மட்டும்தான் வந்துருக்கியா. மனைவி, பிள்ளைங்க எல்லாம்?''



"மனைவி தவறி ஆறு வரு­ம் ஆயிடுச்சு. பையன் மனைவியோட பத்து நாள் டூர் போயிருக்கான். நான் இங்க வந்துட்டேன்.''



"அடடா...கனகவள்ளி இறந்த வி­ஷயம் எனக்கு தெரியலையே. பத்து நாள் டூர் போற புள்ள உன் ஒரு ஆளை இப்படியா மார்கழி மாச குளிர்ல தவிக்க விட்டுட்டு போறது? அது சரி...உனக்கு மூணு புள்ளைங்களாச்சே. ஒருத்தன் டூர் போயிருக்கான்னா மத்தவங்க? மூணு பேரும் நல்லாத்தானே இருக்காங்க. சின்னவன் உருப்படியா எதாவது வேலைக்கு போறானா?''



"அது பெரிய கதை. மூணு பசங்களுமே இஞ்சினியரிங் தான் படிச்சாங்க. பெரிய பசங்க ரெண்டுபேருமே குடும்பத்தோட அமெரிக்காவுல இருக்காங்க. சின்னவனும் சென்னை டிசிஎஸ் கம்பெனியில  மாசம் நாப்பதாயிரம் ரூபா சம்பளம் வாங்குறான். நாலு மாசத்துக்கு முன்னாலதான் கல்யாணமாச்சு. அவன் மனைவி வேலை பார்க்குறதும் அதே கம்பெனிதான். புதுசா கல்யாணம் ஆனவங்க. இதுல நான் வேற எக்ஸ்ட்ரா லக்கேஜா கூட போகணுமா?



ஒரு குழந்தை பிறக்குறதுக்குள்ள இப்படி டூர் போய் ஜாலியா இருந்தாதான். அப்புறம் குழந்தை, பணிச்சுமைன்னு ஆயிட்டா எங்கேயும் போக முடியாது. அதே வீடு, அதே கம்பெனி, அதே முகங்கள், ஏன் டிவியில கூட அதே மெகா சீரியல்னு இருந்தா குடும்பத்துக்குள்ள ஏன் உரசல் வராது?



ஆனா, முதல்ல நீங்க ஆசைப்பட்ட கோயில்கள் சிலதுக்கு போயிட்டு வந்துடலாம்னு என் புள்ளையும் மருமகளும் கூப்பிட்டாங்க. நான்தான், இப்ப நீங்க விருப்பப்பட்ட இடத்துக்கு போங்க. பேரனோ, பேத்தியோ பிறந்த பிறகு நானும் வர்றேன்னு சொல்லிட்டேன்.



சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத...நாம தூக்கி வளர்த்த புள்ள நம்மள கண்டிச்சுட்டான்னு கோபப்படுறோமே...அறுபது வயசைத் தாண்டி நமக்கே இவ்வளவு ஈகோ இருக்குன்னா முப்பது வயசுல இருக்குற புள்ளைக்கும் மருமகளுக்கும் எவ்வளவு இருக்கும்.



நாம பெத்து வளர்த்த புள்ளை நம்ம நடவடிக்கையை குத்தம் சொல்றானேன்னு கோபப்படுறோம். அதுவே நெருங்கிய நண்பன் சொன்னா தப்பா எடுத்துப்போமா? அந்த மாதிரி புள்ளையையும் நண்பனா நினைச்சா ஏன் கோபம் வரப்போகுது?'' என்று பேசிய கிருஷ்ணமூர்த்தியின் பேச்சில் மட்டுமல்ல. முகத்திலும் அமைதி தெரிந்தது.



"நீ சொல்றதை நான் ஒத்துக்க மாட்டேன். அவன் வயசைத் தாண்டிதானே நாமளும் வந்துருக்கோம். நமக்கு தெரியாத நாகரிகமா?'' என்ற ஜெயராமனின் குரலில் லேசான காரம்.








"இந்த ஈகோதான்யா நிறைய குடும்பத்தை குலைச்சுப் போட்டுடுது. நம்ம காலத்துல பொண்ணுங்களுக்கு வேற வருமானம் கிடையாது. வேற வழியில்லாம புரு­னையும், மாமனார் மாமியாரையும் அவங்க இம்சைகளோட சகிச்சுகிட்டு இருந்தாங்க. இப்ப காலம் மாறிப்போச்சு.



புரு­னோட அஞ்சு நிமிஷ­ம் தனியா உட்கார்ந்து பேசிகிட்டு இருக்குறதைக் கூட குற்றம் சொல்ற மாமனார், மாமியார் அதிகம். அவங்க மனசு விட்டு பேச சந்தர்ப்பம் கிடைச்சா, மனசுல இருக்குற தேடல் குறைஞ்சுடும். எதையும் எரிச்சலோட பார்க்குற மனோபாவம் மாறிடும்.



இந்த மாதிரி சின்ன சின்ன விஷ­யங்கள்ல கிடைக்கிற சின்னப்புள்ளைத்தனமான ஏமாற்றம்தான் குடும்பத்துல பெரிய பிரச்சனையை உருவாக்குது. புள்ளை தன் பொண்டாட்டியோட சினிமாவுகோ கோயிலுக்கோ கிளம்பி போனதுக்கப்புறம், அக்கம்பக்கத்து வீடுகள்ல, நான் இங்க ஒருத்தி சமையலறையில கிடந்து அல்லாடிகிட்டு இருக்கேன். அவ எதைப்பத்தியும் கவலைப்படாம புருஷ­னோட ஜோடி போட்டு கிளம்பிட்டான்னு பேசுற மாமியார்கள் எவ்வளவு பேர் இருக்காங்கன்னு தெரியுமா?



இந்த வி­ஷயம் இன்னும் பல மோசமான வார்த்தைகளோட மகன் மருமகள் காதுக்கு போகும்போது விரிசல் ஆரம்பமாகுது.



ஜோடியா சந்தோஷ­மா இருக்கணும்னுதானே கல்யாணம் பண்ணி வெச்சோம். இப்ப பெரியவங்களே அதைப்பார்த்து எரிச்சலடைஞ்சா என்ன அர்த்தம்.'' என்ற கிருஷ்ணமூர்த்தி ஜெயராமனைப் பார்த்தார்.



"வெளில போய்ட்டு நல்லா சுத்திப்பார்த்துட்டு வாங்கன்னு அனுப்புனா மட்டும் மாமனார் மாமியார் மேல மருமகளுக்கு பாசம் வந்துடுமா?''என்று ஜெயராமன் எரிச்சலுடன் கேட்டார்.



"பாசம் வருதோ இல்லையோ, மாமனார் மாமியார் நம்மளுக்கு இடைஞ்சலா இருக்காங்கன்னு ஒரு எண்ணம் வராது. பையன் ஆபீஸ்லேர்ந்து சீக்கிரம் வந்துட்டான்னா, டிபன் நான் பண்ணி வைக்கிறேன். ரெண்டு பேரும் வெளில போயிட்டு வாங்கன்னு சொல்லிப்பாருங்க. அது புள்ளைக்கும் மருமகளுக்கும் எவ்வளவு சந்தோஷ­த்தை கொடுக்கும் தெரியுமா?
























ரெண்டு தடவை அப்படி நடந்தா, மூணாவது தடவை கிளம்பும்போது உங்களுக்கும் சேர்த்து டிபன் செஞ்சு வெச்சுட்டு கிளம்புவா. இல்லன்னா, நீங்க சிரமப்படவேண்டாம். "நாங்க ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு உங்களுக்கும் வாங்கிட்டு வந்துடுறோம் அத்தை.' அப்படின்னு சொல்லுவா. தொண்ணூறு சதவீதம் இப்படித்தான் நடக்கும்.



அதை விட்டுட்டு, எங்க காலத்துல அப்படி செஞ்சோம். இப்படி இருந்தோம் அப்படின்னு குறை சொல்லிகிட்டே இருந்தா நம்மளை எப்படா அடிச்சு முதியோர் இல்லத்துக்கு துரத்தலாம்னுதான் யோசிப்பாங்க.



அந்த காலத்துல நடந்து போனாம். ஏதாவது முக்கிய செய்தின்னா தந்தி அடிப்போம். இல்ல டிரங்கால் புக் பண்ணி பேசுவோம். இப்ப அப்படியா? எவ்வளவு வசதிகளை அனுபவிக்கிறோம். அந்த மாதிரி புள்ளைங்க விஷ­யத்துலயும் நம்ம அணுகுமுறையை மாத்திக்கணும்.'' என்று கிருஷ்ணமூர்த்தி தெளிவாகவே பேசினார்.



"அதுசரி...உனக்கு எப்படிய்யா இவ்வளவு பக்குவம் வந்துச்சு? நல்ல மருமக கிடைச்சதுனால இப்படி பேசுறியா? எல்லாத்துக்கும் குடுப்பினை வேணும். எனக்கு வந்து வாய்ச்ச மருமக ராட்சசியால்ல இருக்கா.'' ஜெயராமனின் குரலில் விரக்தி தெரிந்தது.



"நான் இந்த மாதிரி பக்குவப்பட காரணமே என் சின்னப் புள்ளைதான். மூத்தவனுங்க ரெண்டுபேரும் படிப்பு படிப்புன்னு இருந்தாங்க. வேலை கிடைச்சதும் அம்மா அப்பாவை வெச்சு பார்த்துக்கணும்னு நினைக்கவே இல்லை.



ஆனா வடிவேல், நீங்க காலம் பூராவும் என் கூடவே இருந்துடுங்கன்னு சொல்லிட்டான். மருமகளும் கல்யாணமாகி வந்த புதுசுல, உங்க அப்பா மூணு புள்ளைங்ககிட்டயும் ஆளுக்கு ஒருமாசம்னு இருந்து சாப்பிடுறதுதானே நியாயம்னு கேட்டா. ஆனா இவன், அப்பா அம்மாவை வெச்சு பார்த்துக்க லாப நஷ்ட கணக்கு பார்க்க கூடாது. ஆயிரக்கணக்கான ஏழைங்களுக்கு அன்னதானம் செய்யுறது, கோவில் உண்டியல்ல லட்ச லட்சமா பணம் போடுறதைக் காட்டிலும் பெத்தவங்களை வெச்சு காப்பாத்துறது உயர்ந்த விஷ­யம்.



அதை செய்ய நமக்கு வாய்ப்பு கொடுத்த அண்ணன்களுக்கு நன்றி சொல்லணும். அவருக்கு நான் ஒரே புள்ளையா பிறந்ததா நினைச்சு என் கூடவேதான் வெச்சுப்பேன். உன்னால முடியலைன்னா விடு. எங்க அப்பாவை நான் பார்த்துக்குவேன்னு சொன்னான். அதுக்கு  அவன் மனைவி, என் அம்மா அப்பாவை நான் இந்த மாதிரி கூட வெச்சுக்க அனுமதிப்பீங்கிளான்னு கேட்டா.



இதுக்கு என் அனுமதி எதுக்கு. தாராளமா வந்து இருக்கலாம். ஆனா அவங்க சம்மந்தி வீட்டுல போய் தங்குறதான்னு யோசிப்பாங்க. அப்படி நினைச்சா, தனி வீட்டுல இருக்கட்டும். வேணுன்னா தனியா வீடு புடிச்சு கொடுத்து மாசத்துல பாதி நாள் நாம அவங்க கூட போய் தங்குவோம். அப்படின்னு சொன்னான். அவன் மனைவி மறு பேச்சு பேசலை. உங்க குணத்தை இப்பதான் முழுசா புரிஞ்சுகிட்டேன்னு சொல்லி அழுறா.



வடிவேலுக்கு இந்த பக்குவத்தை கொடுத்தது, புத்தகங்கள்தான். பேப்பரை கூட படிக்க கூடாதுன்னு அவனை எத்தனையோ நாள் அடிச்சு துவைச்சிருக்கேன். ஆனா அந்த வாசிப்பு பழக்கம்தான், என்னைய நடுத்தெருவுல நிறுத்தாம அவன் கூட வெச்சு பராமரிக்கிற குணத்தை கொடுத்திருக்கு. ஒருத்தனுக்கு நல்ல புத்தகத்தை விட சிறந்த நண்பன் வேற யாரும் இருக்க முடியாதுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க.



கடைசியா ஒண்ணு சொல்றேன். பெத்தவங்க, நம்ம புள்ளை நம்மளை வெச்சு பராமரிக்கணும்னு நினைச்சா சந்தோஷ­ம். ஆனா ஒவ்வொரு விஷயத்தையும் நம்மளை கேட்டுதான் முடிவெடுத்து நடக்கணும்னு நினைச்சா வருத்தம்தான் மிஞ்சும்.



காலம் மாறிப்போச்சுன்னு பேசிகிட்டு இருந்தா மட்டும் போதாது. நாமளும் பல விஷ­யங்கள்ல நம்மளை மாத்திக்கணும். மாதா, பிதா, குரு, தெய்வம்னு சும்மா மனப்பாடம் செஞ்சு எழுத வெச்சா ஒரு மனு­ஷன் மாறிட மாட்டான். அதை உணர வைக்கணும். என் புள்ளையை புத்தகங்கள் உணர வெச்சிருக்கு.'' என்று கிருஷ்ணமூர்த்தி சொல்லி முடித்தபோது, புத்தகங்கள் ஒரு மனுஷ­னை இந்த அளவு பக்குவப்படுத்துமா என்று நினைத்த போது, அவர் மகனும் மருமகளும் அவர் நினைவில் வந்து போனார்கள்.



+++