Search This Blog

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

திருவாரூர் பாபுவின் தேரடிவீதி திருக்கண்ணபுரம்

ஒளிப்பதிவாளர் கோபிநாத் தயாரிப்பில் தேரடிவீதி திருக்கண்ணபுரம் என்ற படம் ஆடி முடிந்து அமைதியாக தொடங்குகிறது என்ற குறிப்புடன் இன்று (2-8-2012) பிரபல நாளிதழ்களில் விளம்பரம் வெளியாகியிருக்கிறது.

 இந்த படத்தின் இயக்குனர் பாபு K விஸ்வநாத் தமிழ் பத்திரிகைகள் படிப்பவர்களுக்கு திருவாரூர் பாபு என்ற பெயரில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானவர்.

திருவாரூர் பாபு பல வெகுஜன இதழ்களில் நூற்றுக்கணக்கில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். சரண் இயக்கிய ஜே.ஜே.,வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.,அட்டகாசம் போன்ற படங்களில் உதவி இயக்குனர். கரண், ராஜேஷ் ஆகியோரை வைத்து மாணவர் - ஆசிரியர் என்ற கதையுடன் பாபு K.விஸ்வநாத் என்ற பெயருடன் கந்தா என்ற படத்தை இயக்கினார். படத்தின் பர்ஸ்ட் காப்பி தயாராகி பைனான்ஸ் பிரச்சனையால் இன்னும் ரிலீசாகவில்லை.

கந்தாவில் நடித்த ஹீரோயின் மித்ரா காவலனில் விஜய்க்கு ஜோடியாக 2வது ஹீரோயினாக நடித்து தெரிந்த முகமாகி விட்டார். வாக்கிங் போய்க்கொண்டு இருக்கும்போது, பாத்ரூமில் இருக்கும்போது இந்த கதைக்கான கரு கிடைத்தது என்று கயிறு திரித்துக்கொண்டு டிவிடிக்கள் மூலமாக உலகசினிமாவில் (ஹாலிவுட்?) மூழ்கி முத்தெடுத்து படம் எடுத்து தள்ளும் சிலர் கூட தங்கள் படத்தை ரிலீஸ் செய்து விடுகிறார்கள். ஆனால் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைகளில் சமூக அக்கறையுடன் நிறைய சிறுகதைகள் எழுதிய திருவாரூர் பாபு எவ்வளவோ கஷ்டங்களைத்தாண்டி இயக்குனராகிவிட்டார்.  மக்களை ரசிக்க செய்வதுடன் அவர்களுக்கும் நல்ல சேதியை சொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் நம் மண்ணில் நம்மைச் சுற்றி உள்ள மனிதர்களை வைத்து தஞ்சாவூரை கதைக்களமாக எடுத்துக்கொண்டு கந்தா படத்தை இயக்கி உள்ளார். இப்போது இயக்குனராவதைக் காட்டிலும் அதை மார்க்கெட்டிங் செய்வதற்கும் படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் பிடிப்பதற்கும் மிகவும் போராட வேண்டியிருப்பது சினிமாவுக்கு நல்லதா கெட்டதா என்று என்னால் சொல்லத்தெரியவில்லை.

**********************************************
திருவாரூர் பாபுவின் காத்திருக்கிறார்கள் என்ற சிறுகதைத்தொகுப்பை பத்து ஆண்டுகளுக்கு முன்பு நூலகத்தில் வாசித்தேன். அதில் ஒரு கதையின் கருவை உங்கள் பார்வைக்காக தந்திருக்கிறேன். கதைச்சுருக்கத்தில் நான் தந்திருக்கும் சம்பவங்கள் என் நினைவில் இல்லை. அதனால் குத்து மதிப்பாகத்தான் எழுதியிருக்கிறேன். அதை வைத்து என்னை திட்ட வேண்டாம். ஆனால் கதையின் அடி நாதம் என் நினைவில் இன்னும் இருக்கிறது.

இரண்டாம் உலகப்போரா அல்லது முதல் உலகப்போரா என்று சரியாக நினைவில் இல்லை. ஆனால் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ராணுவம் போரிட்டுக்கொண்டிருந்த சமயம். நல்ல மழை. நிறைமாத கர்ப்பிணியின் பிரசவம் சிக்கலாகிவிட வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் மாட்டு வண்டியில் கிளம்புகிறார்கள். வழியில் பலமான இடி இடித்ததும் வண்டியில் பூட்டியிருந்த மாடுகள் அறுத்துக்கொண்டு திசைக்கொன்றாக ஓடிவிடுகின்றன.

கர்ப்பிணிப்பெண்ணும் உறவினர்களும் செய்வதறியாமல் திகத்து நிறக, கலெக்டர் ரேஞ்சில் உள்ள ஆங்கிலேய அதிகாரி ஒருவர் அந்த வழியாக வரும்போது நடுவழியில் இவர்கள் தவித்து நிற்பதை பார்க்கிறார். உடன் இருப்பவர் மொழிபெயர்த்துக்கூற, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்டு விடுகிறார் அந்த ஆங்கிலேய அதிகாரி.

உடனே சற்றும் யோசிக்காமல் தான் காரை விட்டு இறங்கிக்கொண்டு, கர்ப்பிணிப்பெண்ணையும், அவள் உறவினர்களையும் தன் காரில் ஏற்றி வழியில் போலீசாரால் பிரச்சனை வரக்கூடாது என்று தன் பாதுகாப்பு அதிகாரியையும் கர்ப்பிணிப்பெண்ணுக்கு துணையாக மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு அந்த கார் திரும்பி வரும் வரை நடுவழியில் நிற்கிறார். அந்த வெள்ளைக்கார அதிகாரி நினைவாகத்தான் எனக்கு அவர் பேரை வெச்சாங்க. என்று தாத்தா சொல்வதை கேட்கும்போது அந்த இளைஞனுக்கு பிரமிப்பாக இருக்கும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த இளைஞனின் மனைவி நிறைமாதம். அவளை இவர்களது சொந்தக்காரில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்கிறார்கள். வழியில் கார் ரிப்பேர். கனமழை பெய்துகொண்டிருக்கிறது. ஊரெங்கும் நிசப்தம். மதத்தொடர்பான பிரச்சனை ஒன்றின் துக்க நாள் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படும் நாள் அன்று. அதிகம் பிரச்சனை வரும் என்று வீதியெங்கும் போலீசார் ரோந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

அப்போது இவர்கள் அருகே ஒரு ரோந்து வாகனம் வருகிறது. அதிலிருந்து ஒரு போலீஸ் அதிகாரி வெளியே இறங்காமலேயே,''ஏன் இங்கே நிக்கிறீங்க?''என்று அதட்டுகிறார்.

''பிரசவ வலி சார். எங்க கார் ரிப்பேராயிடுச்சு. வேற வண்டி எதாவது வருதான்னு பார்க்குறோம்'' என்று பயந்து கொண்டே சொல்கிறார்கள்.

''சரி...ரொம்ப நேரம் இங்க நிற்காதீங்க...அப்புறம் எல்லாரையும் கைதுபண்ண வேண்டியிருக்கும். சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு போற வழியப்பாருங்க.''என்று அந்த போலீஸ் அதிகாரி அதட்டியவுடன் ரோந்து வாகனம் சென்றுவிடுகிறது.

இவர்கள் வேறு வாகனத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கதை முடியும்.


(ஏன் வேற வாகனத்துக்கு காத்திருக்கணும். ஆம்புலன்சுக்கு போன் பண்ணக்கூடாதா என்று குதர்க்கமான கேள்வி உங்களில் சிலருக்கு எழலாம். கதாசிரியர் சொல்ல வந்த விஷயம், பொதுவாக போர்க்காலங்களில் கூட பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு பாதுக்காப்பு அளிக்க வேண்டும் என்ற நியாயமான கோட்பாடு உண்டு. ஆனால் சுதந்திர இந்தியாவில் உள் நாட்டுப்பிரச்சனையில் கூட சாதாரண மக்களுக்கு அரசு எந்த அளவுக்கு உதவுகிறது என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புவதுதான்.)

செவ்வாய், 24 ஜூலை, 2012

கேப்டன் இலட்சுமி சேகல் காலமானார்

இந்திய சுதந்திரப்போரில் ஜான்சிராணி லெட்சுமிபாய், இராணி சென்னம்மா, இராணி மங்கம்மாள், வேலுநாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, சிட்டகாங் ஆயுதக்கிடங்கு கொள்ளை கல்பனா ஆகியோர் காட்டிய வீரத்திற்கு இணையாக வீரதீர செயல்புரிந்தவர்தான் கேப்டன் இலட்சுமி சேகல்.

2002ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதி தேர்தலில் கலாம் அவர்களை எதிர்த்து போட்டியிட்டார். இவர் வாழ்க்கை வரலாற்றின் சிறு தொகுப்பு சில தினங்களுக்கு முன்பு திருவாரூரில் உள்ளூர் இதழ் ஒன்றில் பிரசுரமானது. அந்த பிரதியை தரவிறக்கம் செய்ய...

சனி, 7 ஜூலை, 2012

தேர்வில் சொதப்புவது எப்படி?

மாணவர்களை தேர்வு எழுத விடாமல் தடுத்த டி என் பி எஸ் சி.

தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இன்று (7 ஜூலை 2012) தொகுதி 4 மற்றும் 8க்கான தேர்வுகளை நடத்துகிறது. இப்போது ஐபிஎஸ் அதிகாரி நட்ராஜ் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது எல்லாம் பாராட்டத்தக்கதுதான். ஆனால் அந்த நல்ல விஷயங்களை நினைத்து சந்தோஷப்படுவதை தாண்டி ஒரு கசப்பான சம்பவம் நடந்து விட்டது. கடைசி நேரத்தில் ஒரு சில தேர்வுமையங்கள் மாற்றப்பட்ட விஷயம் கசிந்து நேற்று பலர் மீண்டும் ஹால் டிக்கட் பதிவிறக்கம் செய்து பார்த்தவர்களுக்கு தேர்வு மையம் மாறியிருப்பது தெரிந்து விட்டது.

கடைசி நேரத்தில் கூட்டத்தில் போய் ஹால் டிக்கட் எடுக்க கூடாது என்று பல மாணவர்கள் அரசு அறிவித்த நாள் முதலே நுழைவுச்சீட்டை பெற்று வந்தனர். அப்படி செய்யாமல் தேர்வாணையம் இப்படி சொதப்பும் என்று தேர்வுக்கு முதல் நாள் வரை ஹால் டிக்கட் பெறாமல் காத்திருக்க முடியுமா.

திருவாரூரில் தேர்வெழுத வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த சிலர் (சுமார் 900 பேர் இருக்கும்) அம்மையப்பன், கொரடாச்சேரி என்று வெவ்வேறு ஊர்களுக்கு சென்று தேர்வு எழுத மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். என்னதான் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் தேர்வு மையத்துக்கு போனாலும், மாறி செல்ல வேண்டிய மையம் உள்ளூரிலேயே இருந்தால் கூட பதட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் கொரடாச்சேரி 19 கிலோமீட்டர். அங்கே பஸ் பிடித்து சென்று மெயின் ரோட்டிலேயே இறங்கி அரசுப்பள்ளியை தேடிச் சென்று...இதுபோல் தமிழகம் முழுவதும் எவ்வளவு இடத்தில் பிரச்சனையோ?

நிச்சயம் பலர் தேர்வு எழுத முடிந்திருக்காது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக கிராமப்புற மாணவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். கிராமம் முதல் நகரம் வரை அனைவரிடமும் செல்போன் வந்து விட்டது. ஆனால் இணைய இணைப்பு அப்படி இல்லை. தேர்வு மையம் மாற்றப்பட்டவர்களுக்கு அப்போதே அவர்கள் செல்போனுக்கு குறுஞ்செய்தி செல்ல வழி செய்வது தேர்வாணையத்துக்கு பெரிய காரியம் இல்லை. வரும் காலத்தில் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

போட்டித்தேர்வு எழுதுபவர்கள் தினமும் நாட்டுல என்ன நடக்குது என்று பேப்பரை பார்க்க வேண்டும் என்று சிலர் சொல்லலாம். இந்த செய்தி எதாவது ஒரு உள்பக்கத்தில் ஒரு கால செய்தியாகத்தான் வந்திருக்கும். எல்லாருடைய கண்களிலும் பட்டிருக்கும் என்று சொல்ல முடியாது. இப்படி தேர்வு மையங்கள் மாற்றப்படுவது ஒவ்வொரு மாணவருக்கும் முன் கூட்டியே தெரிவிப்பது மிகவும் எளிதான காரியம்தான். ஆனால் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் இன்று பலர் விரக்தியின் எல்லைக்கே சென்றிருப்பார்கள் என்று சொல்லலாம்.

திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இரண்டு பெண்கள் கொரடாச்சேரி தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டுமே என்று அழுது கொண்டு நின்றிருக்கிறார்கள். நண்பர் ஒருவர் நகர்மன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் அந்த இரண்டு மாணவிகளையும் தன் டூவீலரில் ஏற்றிக்கொண்டு அரை மணி நேரத்தில் கொரடாச்சேரிக்கு கொண்டு சென்று தேர்வெழுத வேண்டிய பள்ளியில் விட்டிருக்கிறார். இப்படி கடைசி நேரத்தில் எவ்வளவு பேர் சென்றிருக்க முடியும்? நண்பரால் உதவ முடிந்தது 2 பேருக்குதான்.

இந்த மாதிரி அடிக்கடி நடந்தால், இனி வரும் தேர்வுகளில், எல்லாரும் தேர்வுக்கு முதல் நாள் போய் ஹால் டிக்கட் எடுக்க முயற்சிப்பார்கள் சர்வர் படுத்து தூங்கிவிடும். அதிகாரிகளுக்கு என்ன கவலை. இந்த தேர்வுகள்தான் வாழ்க்கை என்று நினைப்பவன் தான் நொந்துபோவான்.

நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போதே எந்த அரசுப்பணிக்கும் முயற்சி செய்யப்போவதில்லை என்று முடிவு செய்தேன். இப்போது சொந்த தொழில்தான் செய்து வருகிறேன். என் கவலை எல்லாம், அரசுப்பணியை வாழ்க்கையாக நினைத்து கடுமையாக படித்து தயாரானவர்களுக்கு தேர்வு எழுதும் வாய்ப்பே பறிபோகக்கூடாது என்பதுதான்.