Search This Blog

சனி, 24 மார்ச், 2012

என்ன கொடுமை சரவணன் ?-6

எனக்கு மட்டும் ஏன் இப்படி? - இந்த கேள்வி உங்களில் பலருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளில் உங்கள் மனதில் எழுந்திருக்கும்,

ஆயிரம் மர்பி விதிகள் இருக்கின்றன. இதில் 600வது தேறும். அந்த விதிகளை படித்தால் இதை எல்லாம் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொண்டு நம் பி.பி. ஏறாமல் ஆரோக்கியம் கெடாமல் இருக்க பழகிக்கொள்ளலாம்.

இதை படிச்சுட்டு இதான் எனக்கு தெரியுமே. புதுசா சொல்ல வந்துட்டியாக்கும் அப்படின்னு சண்டை போடப்பிடாது. இந்த விதிகள் எல்லாம் நெட்டுல இருந்து ஒரு புண்ணியவான் எனக்கு அனுப்பினது. உண்மையை சொல்லி நான் முதல்லேயே சரண்டர் ஆயிட்டேன்.


மர்பி விதிகள்

26. யார் தயங்குகிறார்களா அவர்கள கடைசி.
27. பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழி அதை இழக்காமல் இருப்பதில் இருக்கிறது.
28. ஆலோசகர் என்பவர் உங்களிடமே தகவல்கள வாங்கி உங்களுக்கே திருப்பித் தருபவர் ஆவார்.
29.பணம் சாணத்தைப் போன்றது. அதை கலந்து தெளித்துவிட்டால் நல்ல மருந்தாகும். ஆனால் ஒரே இடத்தில் தேக்கி வைத்துவிட்டால் இடமே நாசமாகி விடும்.
30. ஒன்று சிகரத்தில் இருக்க வேண்டும். அல்லது அதல பாதாளத்தில் இருக்க வேண்டும். பாதியில் இருந்தால் கஷ்டம்தான் எப்போதும்.

-விதிகள் தொடரும்...

வெள்ளி, 23 மார்ச், 2012

திருவாரூர் பாபு இயக்கிய கந்தா படத்துக்கு திருவாரூர் சரவணனின் வாழ்த்துக்கள்!

நூற்றுக்கணக்கான சிறுகதைகள், பல குறு நாவல்கள் எழுதிய எழுத்தாளர் திருவாரூர் பாபு. இவரது தந்தை வைத்திருந்த தட்டச்சுப் பயிலகத்தில் அப்போதே கதைகளை தட்டச்சு செய்து தான் அனுப்புவாராம். இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகைகளுக்கு தட்டச்சு செய்து அனுப்புவது எல்லாம் எல்லோராலும் முடியாத காரியம்.


தட்டச்சு செய்வதில் ஒரு சௌகர்யம். கையால் எழுதினால் 15 பக்கம் வரும் சிறுகதை தட்டச்சில் 3 பக்கத்தை தாண்டினால் அதிகம். அப்போது படிப்பவருக்கும் மலைப்பு தெரியாது. அந்த மூன்று பக்க சிறுகதையையும் அலுப்பு தட்டாமல் சொல்லும் உத்தி தெரிய வேண்டும்.

இதை எல்லாம் சரியாகச் செய்ததால்தான் திருவாரூர் பாபுவால் நூற்றுக்கணக்கில் சிறுகதைகளை எழுத முடிந்தது. தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்த இவர் பின்பு இயக்குனர் கே.வி.சரவணன் - அதாங்க அஜீத்தின் அமர்க்களம், அட்டகாசம் ஆகிய படங்களை இயக்கிய சரணிடம் ஜே.ஜே.,வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார் திருவாரூர் பாபு.

இன்று அவர் இயக்கிய "கந்தா" திரைப்படம் ரிலீசாகிறது. ஒரே ஊர்க்காரர் என்ற பாசத்தினால் மட்டும் இந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கவில்லை. அவரது சிறுகதைகளிலேயே நிறைய சமூக அக்கறை காணப்படும். படத்தின் கருவும் ஒரு நல்ல ஆசிரியரும், மாணவனும் சம்மந்தப்பட்ட கதை என்று கூறி இருக்கிறார். அந்த நம்பிக்கையுடன் படத்துக்காக காத்திருக்கிறேன்.

என்ன கொடுமை சரவணன் ?-5

மர்பி விதிகள்

21.மேலாளரைப் பொறுத்தவரை சாத்தியமில்லாதது என்று  எதுவுமே கிடையாது அவர் செய்து பார்க்கும் வரை.
22. நீங்கள் உங்கள் வாகனத்தை கழுவி முடித்ததும் மழை வந்து இன்னும் நன்றாக கழுவி விடும்.
23. மக்களை ஒரு விஷயத்தை நம்ப வைக்க வேண்டும் என்றால் அதை கிசுகிசுப்பாக சொன்னால் போதும்.
24.பொதுமக்கள் யாரென்றால் செய்தித்தாள்களில் பெயர் இடம்பெறாதவர்களே ஆவார்கள்.
25.நீங்கள் ஒரு வேலையை சரியாக செய்து கொண்டிருந்தால் அது யார் கண்ணிலும் படாது.
விதிகள் தொடரும்...

வியாழன், 22 மார்ச், 2012

எழுத்தாளர் திருவாரூர் பாபு இயக்கிய படம் நாளை ரிலீஸ்

ஜே.ஜே., வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட படங்களில் இயக்குனர் சரண் உதவி இயக்குனராக பணியாற்றியவர் திருவாரூர் பாபு.

திருவாரூர் பாபுவின் இயற்பெயர் பாபு காமராஜ்.  இவர் பாபு K.விசுவநாத் என்ற பெயரில் கரண் நடித்த கந்தா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். நாயகி மித்ரா. இந்த படத்திற்குப் பிறகு இவர் விஜய் படமான காவலனில் இரண்டாவது நாயகியாக நடித்தவர்.

பள்ளியிலும், கல்லூரியிலும் எனக்கு படிப்பில் உதவியவர்கள் மூன்று ஆசிரியர்களே. இன்னும் எத்தனையோ சிறப்பான ஆசிரியர்களையும் பார்த்திருக்கிறேன்.

ஆனால் சமீப காலமாக பெற்றோர், ஆசிரியர், மாணவர் என்று அனைவருமே ஒரு ஒழுங்கற்ற தன்மையை நோக்கி போய்க்கொண்டு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. (இங்கு நான் அனைவரையும் குறிப்பிடவில்லை.)

இந்த சூழ்நிலையில் ஆசிரியர், மாணவன் உறவை மையமாக வைத்து திருவாரூர் பாபு "கந்தா" படத்தை இயக்கியிருக்கிறார். காமெடிக்கு விவேக் கால்ஷீட் வாங்கியிருக்கிறார்கள். தஞ்சாவூர் பகுதிகளில் பெருமளவு படப்பிடிப்பு நடந்திருக்கிறது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. மணிரத்னம் தயாரித்து அழகம்பெருமாள் இயக்கிய "டும்...டும்...டும்..." படத்தில் தேசிங்கு ராஜா என்ற பாடல் மாதவன்-ஜோதிகா டூயட் தஞ்சை பெரியகோவில், அரண்மனை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டிருந்தது பெரும்பாலானவர்களுக்கு தெரியும்.

இந்தப்படம் நாளை (மார்ச் 23) ரிலீஸ். இப்படத்தின் இயக்குனரை நான் நேரில் பார்த்தது இல்லை என்றாலும் அவரது தந்தை, அண்ணன், தம்பி ஆகியோருடன் எனக்கு ஓரளவு பழக்கம் உண்டு. நானும் அவ்வப்போது சிறுகதை எழுதி வருகிறேன். இந்த ஆர்வம் எனக்குள் சற்று ஆழமாக வேரூன்றியதற்கு திருவாரூர் பாபுவும் ஒரு காரணம்.

1994ஆம் ஆண்டு வாக்கில் ராணி வார இதழில் ஒரு பக்க கதை ஒன்றை படித்தேன். அந்த கதையும் கதையும் தலைப்பும் நினைவில் இல்லை. ஆனால் அதை எழுதிய திருவாரூர் பாபு என்ற பெயர் மட்டும் என் மனதில் நிலைத்து விட்டது. அப்போதே, திருவாரூர் சரவணன் என்ற பெயருடன் கதைகள் பிரசுரமானால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்தேன். அந்த கனவு நனவாகி விட்டது. ஒரு வகையில் நான் எழுத்துப்பணியில் மானசீக குருவாக நினைக்கும் திருவாரூர் பாபுவின் கந்தா திரைப்படம் திருவாரூரில் நடேஷ் தியேட்டரில் ரிலீசாகிறது. அதன் எதிரில் தான் நான் Graphics Design Centre வைத்திருக்கிறேன். இந்த இடுகையில் இணைத்திருக்கும் தியேட்டரின் முகப்பு தோற்றம் என் அலுவலகத்தில் இருந்து எடுத்ததுதான்.

இந்த தியேட்டரை இயக்குனர் ஷங்கர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். (எந்திரன் படம் அந்த தியேட்டரிலும் ரிலீசானது) இப்போதும் அவர்தான் நடத்தி வருகிறாரா என்று தெரியாது. எது எப்படியோ, படம் அனைத்து தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசை.

அனைத்து தரப்பினர் என்று நான் சொல்வது ரசிகர்களையும்தான். காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகர்களும் ஓரளவாவது மன நிறைவு அடையும் வகையில் இருந்தால் படம் வெற்றிதான்.