Search This Blog

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

தை பிறந்தால் வழி பிறக்கும் சரி...சைக்கிள் பிறக்குமா?

திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் சுகி.சிவம்

இந்த பதிவில் சாதாரண புலம்பல்கள்தான் அதிகம் இருக்கும். சாரி பார் த டிஸ்டபன்ஸ்.

கல்கி பத்திரிகைக்கு 12 ஆண்டுகளாக சிறுகதைப்போட்டிக்கு கதைகள அனுப்பி வருகிறேன். அதில் என்னுடைய ஒருசில வாசகர்கடிதங்கள் பிரசுரமானதோடு சரி. கல்கியில் 2011ஆம் ஆண்டு தீபாவளி தமாக்கா என்று தலைப்பிட்டு பல்சுவை போட்டிகளை நடத்தினார்கள்.

போட்டி பற்றிய அறிவிப்புகளப் படித்ததும் முதலில் மலைப்பாகத்தான் இருந்தது. பிறகு கம்ப்யூட்டர் பரிசு, சைக்கிள் பரிசு ஆகிய இரண்டில் மட்டும் கலந்து கொள்வது என்று முடிவு செய்து அதற்கான தயாரிப்பில் இறங்கினேன். கம்ப்யூட்டருக்கான பரிசுப்போட்டிதான் சற்று சவாலாக இருந்தது. அதில் விமர்சனம், கருத்துக்கள பவர்பாயிண்ட் பிரசன்டேஷனாக கேட்டிருந்தார்கள். எனக்கு அது வரை பவர்பாயிண்ட் பற்றி எதுவுமே தெரியாது.

அதைப்பற்றி அறிந்து கொள்வதில் கவனம் செலுத்தியதால் அதற்கான படைப்புகளில் கவனம் செலுத்த இயலவில்லை. தனியாக ஜாப் டைப்பிங் சென்டர் வைத்திருப்பதால் அந்த வேலைப்பளு, ஒரு நாளைக்கு மின்சாரம் இருக்கும் 18 மணி நேரத்தில் தூக்கம், சாப்பாடு, குளியல், கோயிலில் சாமி தரிசனம், அலுவலகப்பணி என்று போனது போக மீதம் உள்ள நேரத்தில் அவசரமாக தயார் செய்து அனுப்பிய படைப்புக்களில் எங்கள் தெருவில் உள்ள கோயில் பற்றிய எனது அனுபவத்தை மிகவும் சிம்பிளாக உள்ளது உள்ளபடி எழுதியது எனக்கு சைக்கிள் பரிசை வாங்கித்தந்துள்ளது.

அந்த சைக்கிள் பரிசு கிடைத்த விவரம் தெரிந்ததும் புது சைக்கிளை ஒரு நாள், பழைய சைக்கிள் ஒரு நாள் என்று மாற்றி மாற்றி ஓட்ட வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். என்னுடைய காலாக எனக்கு உழைத்த சைக்கிளின் (அந்த சைக்கிளின் பிறந்த தேதி: 08.09.1995) கைப்பிடி துருப்பிடித்து முறிந்து விட்டது.

அந்த கட்டுரை 22.01.2012 தேதியிட்ட கல்கியில் பிரசுரம் ஆகியுள்ளது. எங்கள் தெருவில் உள்ள பிள்ளையார் கோவிலின் மடப்பள்ளியை ஒருவர் ஆக்கிரமித்து இருந்ததால் திருப்பணி தடைபட்டிருந்தது. அந்த ஆக்கிரமிப்பு சட்ட விதிகளின்படி நகராட்சி அதிகாரிகளால் விரைவில் அகற்றப்பட்டு சீக்கிரத்தில் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை என்று கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருந்தேன். அந்த கட்டுரை பிரசுரமான இதழ் கடைக்கு வந்த தேதி 14.1.2012 போகிப்பண்டிகை. ஆனால் 12.1.2012 விவேகானந்தர் பிறந்த நாள் அன்று ஆக்கிரமிப்பாளரே கடையை காலி செய்து கொண்டுவிட்டார்.

போகும்போது கோவில் பராமரிப்பு செலவைக் குறைக்க நினைத்தாரோ என்னவோ. சங்கடஹர சதுர்த்தி அன்று கோவிலில் விளக்கு எரியக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மீட்டர் போர்டில் ப்யூஸ் கேரியரைப் பிடுங்கி எடுத்துச் சென்றதுடன், மெயின் பாக்ஸ்ஐ சிதைத்து தொங்கவிட்டுவிட்டார்.

ஆனால் 10 நிமிடத்தில் வேறு ஒரு மாற்று ஏற்பாடு மூலம் ஆலயத்தில் மின் விளக்கை எரியச் செய்யும் வேலையை பிள்ளையார் என் மூலமாக நிறைவேற்றிக்கொண்டது போல் தெரிகிறது.

ஏற்கனவே 2009ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதியும் சங்கடஹர சதுர்த்திதான். அன்றுதான் கோவில் மண்டபத்திற்கான பில்லர் போட இடம் போதவில்லை என்று காவல்நிலையத்தில் நாங்கள் புகார் செய்தோம். அப்போது காவல்துறை ஆய்வாளரின் அறிவுரையின் பேரில் ஆக்கிரமிப்பாளரே பாதி கடையை இடித்துக்கொண்டார்.

இப்போது 2012லும் ஒரு சங்கடஹர சதுர்த்தி நாள் அன்றே அவரது முழு ஆக்கிரமிப்பையும் அகற்றிக் கொண்டார். எல்லாம் பிள்ளையார் செயல் என்றே நம்புகிறோம்.

இந்த கட்டுரை வெளிவந்த கல்கி இதழின் அட்டைப்படத்தில் நண்பன் படத்தின் ஸ்டில் இடம்பெற்றிருந்தது. நான் 7ஆம் வகுப்பு படிக்கும்போது வெளியான ஜென்டில்மேன் படத்தைப் பார்த்ததுமே இயக்குனர் ஷங்கரை எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. அவர் ரீமேக்கிய நண்பன் படத்தின் கலர் ஃபுல் (ராமராஜன் கலர்?) ஸ்டில்லுடன் கல்கி இதழ் வெளிவந்தது மனதுக்கு கூடுதல் சந்தோஷத்தைக் கொடுத்தது என்று சொல்லலாம்.

நண்பன் படம் திருவாரூரில் இரண்டு தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. திருவாரூரில் ஒரு தியேட்டருக்கே சரியாக கூட்டம் வருவதில்லை. நண்பன் படத்தை வெளியிடுபவர்கள் ஒன்றில் மட்டும் வெளியிட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தால் கொள்ளைக்காரன் திருவாரூரில் ரிலீசாக வாய்ப்பு கிடைத்திருக்கும். இந்த மூன்று நாட்கள் விடுமுறையின்போது ஒரு சிறிய பட்ஜெட் படம் (நண்பனுடன் ஒப்பிடும் போது சிறிய பட்ஜெட் என்று தாராளமாக சொல்லலாம்.) ஓரளவு வசூல் செய்யும் உரிமையை தடுத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

சினிமாக்காரர்கள சிறிய பட்ஜெட் சினிமாக்கள காலி செய்துவிட்டு திருட்டு விசிடி, கேளிக்கை வரியால் அழிந்து கொண்டிருக்கிறது என்று கூப்பாடு போடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். தைலம்மை தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் நண்பன் பட பிளக்ஸ் போர்டை பார்த்ததும் என் நினைவுகள் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது.

அப்போதெல்லாம் பெரிய ஹீரோக்கள் நடித்தபடம் அல்லது பொங்கல், தீபாவளிக்கு ரிலீசாகும் படங்களுக்கு மட்டுமே துணி பேனர்கள் வரும். தியேட்டர் வாசலில் அதைப் பார்க்கும் போதே என்னால் ஆச்சர்யம் தாங்க முடியாது. உருவம் அப்படியே அசலாக போஸ்டரில் இருந்தாலும் துணி பேனரில் ரஜினி மாதிரியோ, மீனா மாதிரியோ இருக்கும் உருவத்தை பார்த்து இதை வரைய எவ்வளவு கஷ்டப்படுறாங்களா என்று நினைப்பேன். மேலும் திருச்சி ஏரியாவில் 10 தியேட்டரில் படம் ரிலீசாகிறதே. அத்தனை ஊருக்கும் பேனர் வரைஞ்சு அனுப்புறதுன்னா எத்தனை நாளைக்கு முன்னாலயே வரைய ஆரப்பாங்க என்றெல்லாம் என்னை நானே கேட்டுக்கொண்டதுண்டு. அந்த பேனர்களில் போஸ்டருடன் ஒட்டும் தியேட்டர்பெயர் கொண்ட ஸ்லிப்புகள ஒட்டி வைப்பார்கள். தீபாவளி, பொங்கல் சமயங்களில் 30 இன்ச் உயரம், 40 இன்ச் அகலத்தில் லித்தோ போஸ்டர்கள் திடீரென முளைக்கும்.

ஆனால் இப்போது ஒரே நாள் இரவில் 100 அல்லது 200 அடி நீளமுள்ள பிளக்ஸ் போர்டுகளக்கூட மெஷின்கள் அலட்சியமாக பிரிண்ட் செய்து தள்ளி விடுகின்றன. அதுதான் படத்தின் ஸ்டில்லுடனே தைலம்மையின் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று பிளக்ஸ் போர்டு வைக்க முடிகிறது. டெக்னாலஜி வளர்ச்சி நல்ல விஷயம்தான். ஆனால் துணி பேனரில் வரைந்து கொண்டிருந்தவர்களில் எத்தனை பேர் கம்ப்யூட்டர் டிசைன் கற்றுக்கொண்டு வளர்ச்சியடைந்திருப்பார்கள்?

விவசாயம், ஓவியம் என்று பல துறைகளிலும் தொழில்நுட்பப் புரட்சி வந்து பலரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. உயர்த்தியும் விட்டிருக்கிறது. ஆனால் எவ்வளவு பேரை முகவரி இல்லாமல் ஆக்கியிருக்கும் என்று யாருக்கும் தெரியாது.

காலத்தின் வேகத்தில் பலர் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேகமான இந்த உலகத்தில் தடுக்கி விழுந்தவனை தூக்க ஒருவன் முயற்சித்தால் அவனையும் சேர்த்து சமாதியாக்கிவிட்டு ஓடத்தான் பின்னால் வருபவர்கள் முயற்சிக்கிறார்கள். அதையும் சமாளித்து கீழே விழுந்தவனையும் காப்பாற்றி, தானும் சேர்ந்து ஓடுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.


திருவாரூரில் சில தொழில்அதிபர்கள் சேர்ந்து ஆன்மீகம் ஆனந்தம் என்ற குழுவாக செயல்பட்டு வருகிறார்கள். திருவாரூர் நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சில கோயில்களில் வழிபாடு, சொற்பொழிவு நிகழ்ச்சி என்று பல காரியங்கள செய்து வருகிறார்கள். இந்த பொங்கலுடன் ஓராண்டு நிறைவு பெறும் நேரத்தில் இன்று 15.1.2012 அன்று திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் சுகி.சிவம் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

மாலை 6.01 என்று நேரம் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி குறித்து திருவாரூர் நகர் முழுவதும் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

2012ல விலைவாசி உயர்வை சமாளிப்பது எப்படி?

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நீ ஒருவர் மீது குற்றம் சொல்லி விரலை நீட்டும்போது மற்ற நான்கு விரல்கள் உன்னைத்தான் நோக்கும் என்று சொல்வார்கள். அது போல் விலைவாசி நம்மை கசக்கிப்பிழியும் நேரத்தில் அரசையும் சமூகத்தையும் குறை சொல்லும் முன்பு சுயக்கட்டுப்பாட்டுடன் சில விஷ­யங்களை கவனிக்க வேண்டும்.

தமிழகத்தின் மின் தேவையில் கிட்டத்தட்ட இருபத்தைந்து சதவீத மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது என்று சொல்கிறார்கள். குளிர்காலத்திலேயே இந்த கதி. ஏப்ரல், 'மே'யிலே என்ன கதியோ. வளர்ந்த சில நாடுகளில் 5 முதல் 7 சதவீதம் வரை மட்டுமே மின்சாரத்தை விநியோகத்துக்காக கம்பி வழியே கொண்டு செல்லும்போது இழப்பு ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் சொல்லப்படும் கணக்கு 40 சதவீதம் வரை. திருட்டு மின்சாரமும் உள்ளடக்கிய கணக்காக இது இருக்கலாம்.

இந்த இழப்பை 20 சதவீதம் என்ற அளவிற்கு குறைத்தாலே பாதி பற்றாக்குறை பறந்தோடிவிடுமே. அடுத்து தெருவிளக்கு, அரசு அலுவலக வளாகம் என்று எந்த அளவு சாத்தியமோ அந்த அளவிற்கு சோலார் சக்தியில் இயங்கும் விளக்குகளை அமைத்தால் எவ்வளவோ மின்சாரம் மிச்சம். எது எதையோ இலவசமாக கொடுப்பவர்கள் ஆண்டுக்கு 4 சிஎப்எல் பல்ப் - களை இலவசமாக கொடுக்கலாம். அல்லது சலுகை விலையில் கொடுக்கலாம். அடுத்து தொகுப்பு வீடுகளுக்கு இலவச மின்சாரம். இது நடுத்தர வர்க்க மக்களை வஞ்சிக்கும் செயல். உண்மையில் மின் கட்டணம் செலுத்த வசதியே இல்லாதவர்களுக்கு இப்படி இலவச மின்சாரம் கொடுத்தால் நியாயமாக ஒரு நாளைக்கு ஒரு யூனிட் போதும். அதற்கு மேல் நுகர்பவர்கள் நிச்சயமாக ஏழைகளாக இருக்கப்போவதில்லை. இப்படி ஒரு விளக்குக்காக கொடுக்கப்படும் வீடுகளில் ஏ/சியைத்தவிர அனைத்தும் இருக்கின்றன. ஆனால் ஓட்டுக்காக இப்படி இலவச மின்சாரத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள்மீதே அனைத்து சுமைகளையும் ஏற்றுகிறார்கள்.

இப்போது இருக்கும் அனைத்து அரசுப்பள்ளிகளையும் போதிய கட்டமைப்பு வசதிகளுடன் சரியான எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்து இயங்கச் செய்தால் பஸ் பாஸ் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகத்தான் இருக்கும்.

நான்குவழிச்சாலைகளுக்கு லட்சக்கணக்கான மக்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தும் அரசால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதைகளுக்கு ஏற்பாடு செய்வதில் என்ன கஷ்டமோ தெரியவில்லை. அது சரி. 4 வழிப்பாதை என்று சொல்லி ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் கூட சுங்கம் வசூலிக்கலாம். ஆயிரக்கணக்கில் ஆம்னி பஸ்களை இயக்கி மக்களை சுரண்டலாம். இரட்டை ரயில் பாதை அமைந்து விட்டால் இதற்கெல்லாம் வழி இருக்காதே. (இதனால் பலர் வேலையிழக்கக்கூடும் என்று சொல்லாதீர்கள். சில பெரு முதலைகள் அதாவது அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலர் மட்டுமே இன்னும் 10 தலைமுறைக்கு சொத்து சேர்க்க இந்த 4 வழிப்பாதைகள் அதிகம் உதவி செய்கின்றன.)

திருட்டு விசிடி டாட் காம் என்று இணையதளமே இருக்கிறது. அந்த அளவுக்கு இணைய தளங்களால் சினிமா சீரழிந்து வருகிறது என்று சொல்கிறார்கள். அது ஒரு புறம் இருந்தாலும் முக்கியமாக ஒரு எதிரி சினிமாவுக்குள்ளேயே இருப்பதாகத்தான் எனக்கு தோன்றுகிறது. ஏற்கனவே இருக்கும் இரண்டு கதாநாயகிகள் போதாது என்று இன்னும் இரண்டு பேரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று பல லட்சம் செலவு செய்து பாடலை படமாக்கி அதை எண்ட் டைட்டிலுக்காக சேர்க்கும் அளவுக்கு சிக்கன சிகாமணிகள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். இவர்கள் போதாதா சினிமாவை அழிப்பதற்கு.

பெரிய ஹீரோக்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் என்று சொல்கிறார்கள். ஆனால் சாதாரண டெக்னீஷியனுக்கு ஷூட்டிங் நாட்களில் சாப்பாடு கிடைத்தால் பெரிய வி­ஷயம். அந்த அளவுக்கு கொடுமைப்படுத்துவதும் நடக்கிறது. இது நமக்கு தேவையில்லை. ஆனால் பொதுமக்கள் கொஞ்சம் உஷாராகி விட்டதன் அடையாளம்தான் எந்த படமும் ஒரு வாரத்துக்கு மேல் தியேட்டரில் தங்காமல் எஸ்கேப்பாகிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இன்னும் பல கோடிப்பேருக்கு மாத வருமானமே 3 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் ரூபாய்வரைதான் என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள் போலிருக்கிறது. அதனால்தான் திருவாரூர் போன்ற சின்ன ஊர்களிலேயே ஒரு டிக்கட் 100 ரூபாய்க்கு விற்கிறது. 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றால் 500 ரூபாய் காலி. ஆத்தாடி...அந்த காசு இருந்தா ஒரு 4 நாளைக்கு குழம்பு வைக்கலாம் என்று நிறைய மக்கள் நினைக்கிறார்கள்.

இருசக்கர வாகனத்தை பயன்படுத்துதல், கேஸ் பயன்பாடு, மின்சாதனங்களை பயன்படுத்துவதில் ஒழுங்குமுறை என்று நாம் சிக்கனமாக இருந்தாலே பாதி கஷ்டத்திலிருந்து தப்பி விடலாம்.

பாத்திரம் ஓட்டையாக இருந்தால் இமயமலை முழுவதும் உருகி ஓடினால் கூட அது நிறையாது என்பதை புரிந்து கொண்டால் சரி.

பற்றாக்குறை என்றால் வருமானத்தை பெருக்கு அல்லது செலவை சுருக்கு என்பதுதான் தாரகமந்திரம். வருமானத்தை பெருக்குவது என்பது மிகவும் திட்டமிட்டு அதிக உழைப்பை கொடுத்தால் மட்டுமே சாத்தியம். ஆனால் சிக்கனம் என்பது சற்று முயற்சி செய்தாலே போதும்.

மேலே நான் சொன்ன சில சிக்கன நடவடிக்கைகளில் முக்கியமாக வீணாவதை தவிர்க்கும் நடவடிக்கைகளில் ஏற்கனவே இறங்கியவர்கள் அப்போதும் பற்றாக்குறை என்றால் வருமானத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளில்தான் இறங்க வேண்டும்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு: இதில் அரசியல் வியாதிகளைப்பற்றி அதிகம் சொல்லவில்லையே என்று தானே நினைக்கிறீர்கள். அவர்கள் செய்வது அவ்வளவும் அக்கப்போர்தான். அவர்கள் செலவழிப்பதில் 95 சதவீதம் தெண்டம்தான். அப்புறம் எதைச் சொல்ல...எதை விட...

வியாழன், 17 நவம்பர், 2011

பஸ் கட்டணம், பால் கட்டணம் உயர்வு - ஆப்பு ஆரம்பம்.

 எந்த ஒரு விலை உயர்வு அறிவித்தாலும் ஒரு கூட்டம் ஆர்ப்பாட்டம், பேரணி அப்படின்னு அமர்க்களப்படுத்தும். உண்மையில் இந்த விலை வாசி உயர்வை சுமக்கப்போறவன் கத்த கூட தெம்பில்லாம நசுங்கிப்போய் கிடப்பான்.

அரசாங்க பதிவேடுகளை பேப்பர்ல மட்டுமே பராமரிச்சுகிட்டு இருந்த காலத்துல தொட்டதுக்கும் சென்னைக்கே மொத்த தமிழகமும் ஓடி வரவேண்டி இருந்துச்சு. இப்போ ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன் அப்படி இப்படின்னு ஓரளவு நிலைமை பரவாயில்லை.

ஒரு மாணவன் அதிகபட்சம் 5 முதல் 15 நிமிஷத்துக்குள்ள நடந்தே அவனோட பள்ளிக்கூடத்துக்கு போற மாதிரி அருகாமையில இருக்குற பள்ளிகளோட தரத்தை உயர்த்தி ஆசிரியர்களை போதுமான எண்ணிக்கையில நியமிக்கிற வேலையை எந்த அரசு வந்தாலும் செய்யப்போறதே இல்லைன்னுதான் தோணுது.

இப்படி ஒவ்வொரு விஷயத்துலயும் பார்த்து பார்த்து எரிபொருள் சேமிப்புக்கான நீண்ட கால திட்டத்தை அமல்படுத்துறதை விட்டுட்டு நடுத்தர மக்களை சுரண்டக்கூடிய நடவடிக்கைகளை மட்டும் அயல் நாடுகள் கிட்ட இருந்து நம்ம அரசுகள் எப்படித்தான் கத்துக்குதோ தெரியலை.

ஐநூறு ரூபாய்க்கு கூட வேலை பார்க்காம அம்பதாயிரம் சம்பாதிக்கிற அல்லது சம்பளம் வாங்குறவங்களைப் பத்தி கவலை இல்லை. கட்டிடத் தொழிலாளி மாதிரி சில வகை தொழில் செய்யுற லேபர்களும் விலைவாசி உயர்வைக்காரணம் காட்டி கூலியை உயர்த்திடுவாங்க.

இதுல வீணாப்போய் நசுங்குறது வறட்டு கவுரவம் பார்த்து வாழ வேண்டியிருக்குற நடுத்தர வர்க்க அப்பாவிகள்தான். அவங்க ஏன் கவுரவம் பார்க்கணும்னு சிலர் கேட்கக்கூடும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படிச்சதா ஒரு சர்டிபிகேட்டோட இருக்குறவங்கதான் வெடிச்சுகிட்டு வர்ற விலைவாசியோட வேகத்துக்கு சம்பளம் அதிகரிக்காத இடத்துல மாட்டிகிட்டு அவதிப்படுறாங்க.

இதையெல்லாம் பார்த்தா முடியுமா?...விலைவாசி உயர்வுக்கு தகுந்த மாதிரி சம்பாதிக்க கத்துக்கணும்னு அறிவுரைக்கெல்லாம் பஞ்சமே இருக்காது.

இப்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களை வறுமையான சூழ்நிலையிலேயே வெச்சிருக்குறதன் வெளிப்பாடுதான் அரசுப்பள்ளிகள் நிறைய தடுமாறுவதும், கல்வித்தந்தைகள் நிறைய உருவாவதும்.

அரசு ஊழியர்களில் சில பணியிடங்களுக்கு ஆட்சியாளர்கள் மிக அதிக அளவு சம்பளத்தை ஏற்றி விட்டதே அந்த பணி நியமனத்திற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதற்காகத்தான் என்று ஒருவர் சொன்னார். இது உண்மையாங்க?