Search This Blog

வெள்ளி, 20 மே, 2011

இந்த ஆட்சியில் தமிழக முதல்வருக்கு ஏழாம் நம்பர் ராசியாமே...

 மனித முயற்சிகளுக்கு முன்னால் நாளும் கோளும் என்ன செய்யும் அப்படின்னு உள்மனசு சொன்னாலும் எனக்கு ஏற்படும் தொடர்தோல்விகளின் போது இதைப் பற்றி மனசு நினைக்காமல் இருப்பதில்லை.

ஒரு நாளிதழில் வெளிவந்த முதல்வரின் தற்போதைய ஏழாம் எண் செண்டிமெண்ட் இங்கே.

தேசிய தமிழ் நாளிதழ் வரைக்கும் வேலைக்குப்போய் பார்த்துட்டு அங்க கிடைச்ச சம்பளம் என்னுடைய குடும்ப பொருளாதார சூழ்நிலைக்கு ஒத்து வராததால சொந்த தொழில்னு இறங்கிட்டேன்.

இதுல ஏழாம் எண் செண்டிமெண்ட் எங்க வருதுன்னுதானே கேட்குறீங்க. நான் பிறந்த தேதி ஏழு. என்னோட பேரும் இன்ஷியலோட ஏழாம் எண்ணுல அமைந்துட்டதால மற்றவங்க லிப்ட்-ல ஏறி பத்தாவது மாடியில அலட்டிக்காம போய் இறங்குவாங்க. ஆனா நீங்க சுவத்துல இருக்குற பைப்பை பிடிச்சு சிரமப்பட்டு மூஞ்சி கை கால் எல்லாம் காயமாகித்தான் அந்த மாடிக்கே போவீங்க. அப்படின்னு சொன்னார்.

இதை மேலோட்டமா பார்த்தா மூட நம்பிக்கையா தெரியும். ஆனா சிலர், எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு புலம்புற அளவுக்கு செய்யுற முயற்சிகள் எல்லாத்துலயும் சறுக்கி விழுந்துகிட்டே இருப்பாங்க.

ஒரு கலையரங்கத்துல ஆயிரம் நாற்காலி இருக்கும். அதுல தொள்ளாயிரத்து ஐம்பது காலியாவும் இருக்கும். ஆனா என்னை மாதிரி சறுக்கு மர ஆசாமி போய் உட்காருற நாற்காலி மட்டும் உடைஞ்சு இருக்கும்.

சிலர் போக வேண்டிய ஊருக்கு எதிர்திசையில போற பஸ் மட்டும் தொடர்ந்து ரெண்டு மணி நேரத்துக்கு வந்து எரிச்சலடையச்செய்யுற மாதிரி.

இந்த கருத்தை மையமா வெச்சு ஒரு ஆங்கிலப் படம் வந்துச்சாம். அதைப் பற்றிய விமர்சனம் கூட நெட்ல எதுலயோ படிச்ச நினைவு.

நீங்க பத்து முயற்சி செய்யுறதுல ஒன்பது தோல்வி அடையுதா. வேற வழியே இல்லை. பத்து வெற்றி கிடைக்கணும்னா நூறு முயற்சி செய்துதான் ஆகணும்-இதுவும் நான் ஒரு புத்தகத்துல படிச்சதுதான்.

கடந்த சில வருஷங்களா மின்வெட்டுக்கு நாம பழகிட்டோம். அதனால வி.ஐ.பி வருகை அன்னைக்கு, இன்னும் சில காரணங்களால என்னைக்காவது ஒருநாள் பவர் கட் ஆகலைன்னா, ஏன் இன்னும் கரண்ட் போகலைன்னு தவிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க.

தினமும் சொன்ன நேரத்துக்கு கரண்ட் கட் ஆகிடுச்சுன்னா மற்ற நேரங்கள்ல மின்வெட்டு இருக்க வாய்ப்பு கொஞ்சம் குறைவு. ஆனா வழக்கமான நேரத்துல மட்டும் கரண்ட் கட் ஆகலை, அந்த நாள் பூரா அல்லது மறுநாள் இஷ்டத்துக்கு வெட்டு கொடுத்து நம்மளை கதற அடிச்சுடுறாங்க. அதனால இப்ப எல்லாம் வழக்கமான நேரத்துக்கு கரண்ட் கட் ஆகாம கொஞ்சம் தாமதமானா கூட எல்லார் மனசுலயும் தவிப்பு.

நானும் இதே மாதிரி, செய்யுற காரியங்கள்ல ஒண்ணு ரெண்டு சமயம் கொஞ்சம் சுலபமா முடிஞ்சுட்டா ஏன் இப்படின்னு ஒரே கவலையா ஆயிடுது.

"என்ன பாஸ் போன வாரம் அடிக்க வர்றேன்னு சொன்னீங்க...வரவே இல்லை..."-இந்த ரேஞ்சுக்கு எனக்கும் தோல்விகள் பழகிடுச்சு.(நான் சொல்றது என்னுடைய வாழ்க்கை முறைகள்ல செய்யுற முயற்சிகளின் தோல்வியைப் பத்தி...அது புரியாம, அரசியல் வியாதிகள்ல இருந்து சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம மாநில அளவுல சூப்பர் மார்க் எடுத்தவங்கன்னு எல்லாரோட கஷ்டத்தோடயும் ஒப்பிட்டு இதுக்கெல்லாம் புலம்பலான்னு என்னைத் திட்டக் கூடாது.)

அவனவன் லட்சக்கணக்கான கோடி ரூபாயை கொள்ளை அடிச்சுட்டு அதுல ஒரு சதவீத்தை எடுத்து பிரச்சனைகளை சமாளிக்கிறாங்க.

ஆனா மத்தவன் ஒரு வேலைக்கு ஆயிரம் ரூபாய் வாங்குற இடத்துல எனக்கு நானூறு ரூபாய் கிடைக்குறதுக்குள்ள நாக்கு தள்ளிடுது. என்ன கொடுமை சார் இது.?

வழக்கமான டிசைன் வேலைகளோட, இப்பதான் நாளிதழ் விளம்பரங்கள் ஒண்ணு ரெண்டு செய்ய சின்னசின்னதா செய்ய ஆர்டர் வருது.

சரி...சரி...நியூமராலஜி பற்றிய புலம்பலை விட்டுட்டு போய் பிழைப்பைப் பாருன்னுதானே சொல்றீங்க...இதோ கிளம்பிட்டேங்க...


அரைப்பக்கத்துக்கும் சற்று அதிகமான உயரத்தில் தினகரன் 19.5.2011 திருவாரூர், நாகை பதிப்பில் வந்த விளம்பரம்.(பேப்பர் பிரிண்ட் ஆகுற கடைசி நேரத்துல அவசர அவசரமா பவர் கட் ஆன நேரத்துல செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டர் வெளிச்சத்துல முடிச்சு அனுப்பிய விளம்பரம்.)

மதிய உச்சி வெயில்ல பவர் கட் ஆன நேரத்துல வியர்வை கீ-போர்டுல விழுந்துடுமோன்னு பயந்து கிட்டே தயார் செய்த விளம்பரம்.

 *****

முன் குறிப்பு:
பிளாக்கர்ஸ்ல பலர் தேர்தல் முடிவு அன்னைக்கு இஷ்டத்துக்கு நாட்டாமை பண்ண ஆரம்பிச்சுடுவாங்கன்னு சர்வீசை நிறுத்தி வெச்சது நல்லதுதான்னு நினைக்குறேன். நாம காசு குடுத்து வாங்குன டொமைன்னா இப்படி நிறுத்தி வெச்சுருப்பாங்களா...இப்பவாச்சும் இலவசத்தால என்னென்ன மாதிரி சங்கடங்கள்னு நல்லா புரிஞ்சா சரி.

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

சமையல் எரிவாயு என்ன விலை?

சமையல் எரிவாயுக்கு அரசு நிர்ணயித்த விலைக்கும் நுகர்வோர் கொடுக்கும் விலைக்கும் எப்போதுமே டேலி ஆகாது. எரிவாயு உருளைகளை டெலிவரி செய்பவர்கள் பத்து ரூபாயை சேர்த்துதான் வாங்குவார்கள். வீடு தேடி வந்து டெலிவரி செய்யும்போது ஓ.கே. ஒழுங்கான தேதியில் கொண்டுவந்து கொடுக்காமல் பல நாட்கள் சிலிண்டரை ரொட்டேஷன் விட்டு விடுகிறார்கள் என்று பலரும் இப்போதெல்லாம் நேரடியாக ஏஜன்சி கிடங்கிலேயே சென்று சிலிண்டரைப் பெற்று வருகிறார்கள். அப்போதும் அந்த பத்து ரூபாயை சேர்த்து வாங்குவது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை.

திருவாரூரில் இரண்டு ஏஜன்சிகள் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட செம்மலர் கியாஸ் ஏஜன்சியில் அங்கேயே போய் நாம் சிலிண்டரை பெற்று வந்தால் பில் தொகையைக் கொடுத்தால் போதும். ஆனால் நீ.....ண்ட காலமாக இருக்கும் பிரியா கேஸ் ஏஜன்சியினர் மட்டும் வலுக்கட்டாயமாக கூடுதல் தொகையை பிடுங்கி விடுகிறார்கள்.

இப்போது இண்டேன் கியாஸ் ஏஜன்சியில் முன்பதிவிற்காக பத்து இலக்க எண் ஒன்றை 24மணி நேரமும் செயல்படும் வகையில் அறிவித்திருக்கிறார்களாம்.

இது நல்ல முறையில் செயல்பட்டால் தில்லுமுல்லு செய்யும் கியாஸ் ஏஜன்சிக்களுக்கு ஆப்புதான்.

தாமதத்திற்கு வினியோகஸ்தர்கள் சொல்லும் ஒரே காரணம், எண்ணை நிறுவனங்களில் இருந்து போதுமான அளவுக்கு சப்ளை இருப்பது இல்லை என்பதுதான்.

பல முறை சிலிண்டர்களை தங்கள் இஷ்டத்திற்கு கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதும் ஊரறிந்த ரகசியம்.

இதைத் தடுக்க எளிமையான வழி ஒன்று இருக்கிறது. சிலிண்டருக்கான முன்பதிவு ஆன் லைன் முறையாக்கப்பட்டுவிட்டதால், தினமும் எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள் என்பதையும் அன்றைக்கு எண்ணை நிறுவனத்தில் இருந்து வந்த சிலிண்டரையும், எந்த எண் வரை முன்பதிவு செய்தவருக்கு அன்று சிலிண்டர் வழங்கலாம் என்பதையும் இணையதளம் மூலம் யார் வேண்டுமானாலும் பார்க்க வழி செய்யலாம். இதில் ரகசியம் காக்க தேவையில்லை.

எந்த ஒரு விஷயத்திலும் ஒளிவு மறைவு இருக்கும் வரை தவறு நடக்க அதிக வாய்ப்பு உண்டு.

இப்படியெல்லாம் செய்யலாம் என்று பெரிய அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால் யாராவது ஆப்பைத் தேடித்தேடி போய் உட்காருவார்களா?

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

சாலை விபத்துக்களை தவிர்க்க என்ன வழி?

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் பெரம்பலூர் பகுதி எப்போதுமே சாலை விபத்து என்ற பெயரில் உயிர்களைக் கொன்று குவிக்கும் பகுதிகளில் ஒன்றாகவே இருக்கிறது.

ஏனைய பகுதிகளில் விபத்தும் மரணமும் நிகழ்வதே இல்லையா என்று கேட்க கூடாது. சாலைகள் இருவழிப்பாதையாக இருக்கும்போதுதான் அஜாக்கிரதையால் வாகனங்கள் எதிர் எதிரே மோதிக்கொள்கின்றன என்று நான்கு வழிப்பாதைகளை அமைத்தார்கள். இப்போது வாகனங்கள் பெருகிய வேகத்தைவிட விபத்துக்கள் அதிகரித்திருக்கின்றன.

சாலைவிதிகளை மதிக்காத ஓட்டுனர்களின் அலட்சியமே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நான்கு வழிச்சாலைகளில் வாகனங்களின் குறைந்த பட்ச வேகமே மணிக்கு 80 முதல் 140 கி.மீ என்ற அளவில் இருக்கிறது. இந்தப் பாதைகளில் வாகனங்களின் சக்கரங்கள் உருளுவதை விட பறக்கின்றன என்றே சொல்லலாம்.








ஏதாவது ஒரு கனரக வாகனம் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருக்கும். பின்னால் பறந்து வரும் வாகன ஓட்டுனருக்கு இந்த வண்டி ஓட வில்லை, நின்று கொண்டிருக்கிறது என்பதைப்புரிந்து கொள்வதற்குள் அதன் மீது மோதி கடுமையான சேதம் ஏற்பட்டு விடுகிறது.

உலகத்தரத்தில் நாலுவழிச்சாலையைப் போட்டு இருக்கிறோம் என்று சொல்லி சுங்க கட்டணம் என்ற பெயரில் கொள்ளை(?) அடிப்பதில் காட்டும் அக்கறையில் 1 சதவீதம் கூட இந்த சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க காட்டுவதில்லை.

ஏனெனில் நாலு வழிச்சாலைகளால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் மோதிக்கொள்ளும் விபத்து மிகவும் அரிதாகி விட்டது. ஆனால் இரவில், (சில நேரங்களில் பகலில் கூட) நின்று கொண்டிருக்கும் வாகனத்தின் மீது பின்னால் வரும் வாகனம் மோதி அடிக்கடி உயிரிழப்பும், உடல் உறுப்பு இழப்பும் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

சாலையிலேயே இப்படி ஓரம் கட்டி நிறுத்தப்படும் வாகனம் பெரும்பாலும் லாரியாகத்தான் இருக்கும். இவை பழுதாகி நிற்பது என்பது அரிது. ஓட்டுனர்கள் ஓய்வெடுக்க, அதற்குரிய இடத்தில் நிறுத்தாமல் அலட்சியமாக நிறுத்திவிட்டு செல்வதுதான் இந்த விபத்துக்களுக்கு முக்கிய காரணம்.

சரியான காரணம் இன்றி இப்படி வாகனம் நிறுத்தப்படும்போது அந்த ஓட்டுனரின் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் இந்த கொடுமைகள் குறையும்.

2005ம் ஆண்டு தமிழகத்தில் கன மழையின்போது மாநிலம் முழுவதும் வெள்ளச்சேதத்தால் கிட்டத்தட்ட எல்லா சாலைகளும் பஞ்சராகி விட்டன. அப்போது சுமார் ஒரு மாத காலம் சாலை விபத்துக்கள் மிக, மிக, மிக குறைவான அளவில்தான் நடந்தன. அந்த ஒரு மாதத்தின் நாளிதழ்களைப் பார்த்தாலே தெரியும்.

இதற்கு காரணம், சாலைகள் மோசமானதாக இருந்ததால் வாகனங்கள் மிதமான வேகத்திலேயே சென்றிருக்கின்றன.

ஆக மொத்தத்தில் வேகம்தான் முக்கிய வில்லன் என்பது புலனாகிறது.

இந்த பதிவில் நான் இணைத்திருக்கும் விபத்து படங்கள், திருவாரூர்-தஞ்சாவூர் சாலையில் அரசு விரைவுப்பேருந்தும் தனியார் கல்லூரிப் பேருந்தும் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியிருக்கும் காட்சி.

மூன்று கல்லூரிப் பேருந்துகள் போட்டி போட்டு அதி வேகமாக வந்தன. அதைப் பார்த்து நான் பேருந்தை நிறுத்தி விட்டேன். இரண்டு பேருந்துகள் நூலிழையில் ஒதுங்கிச் சென்றுவிட்டன, ஆனால் இந்தப் பேருந்து நான் ஓட்டி வந்த பேருந்தின் மீது மோதிவிட்டது என்று அரசு விரைவுப்பேருந்து ஓட்டுனர் சொன்னார்.

ஒரு நாளிதழின் நிருபர் ஒருவர் ஆஃப் தி ரெக்கார்டாக சொன்னது, விபத்துக்குள்ளான கல்லூரிப்பேருந்தை ஓட்டி வந்தது ஒரு கல்லூரி மாணவர்தானாம்.

இந்த புகைப்படங்களைப் பார்த்தால் கல்லூரிப்பேருந்தின் இடப்பக்கம் ஒரு பேருந்து செல்லும் அளவுக்கு இடம் இருப்பது தெரியும். அந்த பேருந்து கட்டுப்பாடில்லாமல் அலைபாய்ந்து வந்தது என்று அரசுப்பேருந்தின் ஓட்டுனர் சொன்னது உண்மையாக கூட இருக்கலாம்.

108 ஆம்புலன்ஸ் அந்த விபத்துக்குள்ளான பேருந்தின் பக்க வாட்டில் நிற்கிறது. சாலையின் மையத்தில் இருக்கும் வெள்ளைக் கோடு எல்லையை ஒழுங்காக கவனித்தாலே பாதி பிரச்சனை இருக்காது. என்ன செய்வது விதி வலியது.

இது உண்மையாக இருக்காது என்று நாம் முழுவதும் புறந்தள்ளி விட முடியாது.


என்னைப் பொறுத்தவரை நாலு வழிச்சாலையில் இரவு, பகல் எந்த நேரமாக இருந்தாலும், வாகனங்களும் வாகன ஓட்டிகளும் ஓய்வெடுக்க என்று பிரத்யேகமாக இருக்கும் இடம் தவிர வேறு எந்த இடத்தில் நின்றாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி நிறுத்தி ஏதாவது விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்டால் வாகனத்தை அலட்சியமாக நிறுத்தியிருந்த ஓட்டுனர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இந்த அலட்சியம் குறையும்.

எல்லா இடங்களிலும் இரட்டை வழி ரயில் பாதை அமைத்து பஸ் போக்குவரத்து போலவே ரயில் போக்குவரத்தும் பெருகினால் இத்தகைய விபத்துக்கள் கணிசமாக குறைந்துவிடும்.

அவ்வளவு எண்ணிக்கையில் ரயில்களை இயக்கத்தேவையான கட்டமைப்புகளை செய்வது மிகவும் கடினம் என்றும், இதனால் பேருந்து போக்குவரத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பலர் வேலையிழப்பார்கள் என்றும் சொல்வார்கள்.

உண்மையான காரணங்கள் இது இல்லை. டூரிஸ்ட் பஸ் என்று பர்மிட் வாங்கி வைத்து விட்டு தினமும் ஆம்னி பஸ் சர்வீஸ் நடத்தி கோடிகளில் புழங்கும் தொழிலதிபர்களின் ஆதரவு தேவைப்படும் அரசியல் வியாதிகளும் அவர்கள் நடத்தும் கேவலமான மோட்டல் வியாபாரம் பாதிக்கும் என்று பயப்படும் குண்டர்களும்தான் உண்மையான பிரச்சனை.

ஆனால் ரயில் போக்குவரத்து இரு வழிப்பாதையாக விஸ்தரிக்கப்பட்டால் பல வகையிலும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாகும். பெட்ரோலியப்பொருட்கள் இறக்குமதி இந்த அளவுக்கு தேவையிருக்காது. சுற்றுச்சூழலும் தப்பிக்கும். நாட்டு, வீட்டு பொருளாதாரமும் உருப்படும்.

ஆனால் மோட்டார் கம்பெனி முதலைகள் இதற்கெல்லாம் வழி விடுவார்களா?

அது சரி, நம் நாட்டில் எப்போதுமே சில லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான மக்களை பாதிக்கச்செய்வது வழக்கம்தானே.