Search This Blog

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

சமையல் எரிவாயு என்ன விலை?

சமையல் எரிவாயுக்கு அரசு நிர்ணயித்த விலைக்கும் நுகர்வோர் கொடுக்கும் விலைக்கும் எப்போதுமே டேலி ஆகாது. எரிவாயு உருளைகளை டெலிவரி செய்பவர்கள் பத்து ரூபாயை சேர்த்துதான் வாங்குவார்கள். வீடு தேடி வந்து டெலிவரி செய்யும்போது ஓ.கே. ஒழுங்கான தேதியில் கொண்டுவந்து கொடுக்காமல் பல நாட்கள் சிலிண்டரை ரொட்டேஷன் விட்டு விடுகிறார்கள் என்று பலரும் இப்போதெல்லாம் நேரடியாக ஏஜன்சி கிடங்கிலேயே சென்று சிலிண்டரைப் பெற்று வருகிறார்கள். அப்போதும் அந்த பத்து ரூபாயை சேர்த்து வாங்குவது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை.

திருவாரூரில் இரண்டு ஏஜன்சிகள் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட செம்மலர் கியாஸ் ஏஜன்சியில் அங்கேயே போய் நாம் சிலிண்டரை பெற்று வந்தால் பில் தொகையைக் கொடுத்தால் போதும். ஆனால் நீ.....ண்ட காலமாக இருக்கும் பிரியா கேஸ் ஏஜன்சியினர் மட்டும் வலுக்கட்டாயமாக கூடுதல் தொகையை பிடுங்கி விடுகிறார்கள்.

இப்போது இண்டேன் கியாஸ் ஏஜன்சியில் முன்பதிவிற்காக பத்து இலக்க எண் ஒன்றை 24மணி நேரமும் செயல்படும் வகையில் அறிவித்திருக்கிறார்களாம்.

இது நல்ல முறையில் செயல்பட்டால் தில்லுமுல்லு செய்யும் கியாஸ் ஏஜன்சிக்களுக்கு ஆப்புதான்.

தாமதத்திற்கு வினியோகஸ்தர்கள் சொல்லும் ஒரே காரணம், எண்ணை நிறுவனங்களில் இருந்து போதுமான அளவுக்கு சப்ளை இருப்பது இல்லை என்பதுதான்.

பல முறை சிலிண்டர்களை தங்கள் இஷ்டத்திற்கு கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதும் ஊரறிந்த ரகசியம்.

இதைத் தடுக்க எளிமையான வழி ஒன்று இருக்கிறது. சிலிண்டருக்கான முன்பதிவு ஆன் லைன் முறையாக்கப்பட்டுவிட்டதால், தினமும் எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள் என்பதையும் அன்றைக்கு எண்ணை நிறுவனத்தில் இருந்து வந்த சிலிண்டரையும், எந்த எண் வரை முன்பதிவு செய்தவருக்கு அன்று சிலிண்டர் வழங்கலாம் என்பதையும் இணையதளம் மூலம் யார் வேண்டுமானாலும் பார்க்க வழி செய்யலாம். இதில் ரகசியம் காக்க தேவையில்லை.

எந்த ஒரு விஷயத்திலும் ஒளிவு மறைவு இருக்கும் வரை தவறு நடக்க அதிக வாய்ப்பு உண்டு.

இப்படியெல்லாம் செய்யலாம் என்று பெரிய அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால் யாராவது ஆப்பைத் தேடித்தேடி போய் உட்காருவார்களா?

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

சாலை விபத்துக்களை தவிர்க்க என்ன வழி?

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் பெரம்பலூர் பகுதி எப்போதுமே சாலை விபத்து என்ற பெயரில் உயிர்களைக் கொன்று குவிக்கும் பகுதிகளில் ஒன்றாகவே இருக்கிறது.

ஏனைய பகுதிகளில் விபத்தும் மரணமும் நிகழ்வதே இல்லையா என்று கேட்க கூடாது. சாலைகள் இருவழிப்பாதையாக இருக்கும்போதுதான் அஜாக்கிரதையால் வாகனங்கள் எதிர் எதிரே மோதிக்கொள்கின்றன என்று நான்கு வழிப்பாதைகளை அமைத்தார்கள். இப்போது வாகனங்கள் பெருகிய வேகத்தைவிட விபத்துக்கள் அதிகரித்திருக்கின்றன.

சாலைவிதிகளை மதிக்காத ஓட்டுனர்களின் அலட்சியமே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நான்கு வழிச்சாலைகளில் வாகனங்களின் குறைந்த பட்ச வேகமே மணிக்கு 80 முதல் 140 கி.மீ என்ற அளவில் இருக்கிறது. இந்தப் பாதைகளில் வாகனங்களின் சக்கரங்கள் உருளுவதை விட பறக்கின்றன என்றே சொல்லலாம்.








ஏதாவது ஒரு கனரக வாகனம் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருக்கும். பின்னால் பறந்து வரும் வாகன ஓட்டுனருக்கு இந்த வண்டி ஓட வில்லை, நின்று கொண்டிருக்கிறது என்பதைப்புரிந்து கொள்வதற்குள் அதன் மீது மோதி கடுமையான சேதம் ஏற்பட்டு விடுகிறது.

உலகத்தரத்தில் நாலுவழிச்சாலையைப் போட்டு இருக்கிறோம் என்று சொல்லி சுங்க கட்டணம் என்ற பெயரில் கொள்ளை(?) அடிப்பதில் காட்டும் அக்கறையில் 1 சதவீதம் கூட இந்த சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க காட்டுவதில்லை.

ஏனெனில் நாலு வழிச்சாலைகளால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் மோதிக்கொள்ளும் விபத்து மிகவும் அரிதாகி விட்டது. ஆனால் இரவில், (சில நேரங்களில் பகலில் கூட) நின்று கொண்டிருக்கும் வாகனத்தின் மீது பின்னால் வரும் வாகனம் மோதி அடிக்கடி உயிரிழப்பும், உடல் உறுப்பு இழப்பும் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

சாலையிலேயே இப்படி ஓரம் கட்டி நிறுத்தப்படும் வாகனம் பெரும்பாலும் லாரியாகத்தான் இருக்கும். இவை பழுதாகி நிற்பது என்பது அரிது. ஓட்டுனர்கள் ஓய்வெடுக்க, அதற்குரிய இடத்தில் நிறுத்தாமல் அலட்சியமாக நிறுத்திவிட்டு செல்வதுதான் இந்த விபத்துக்களுக்கு முக்கிய காரணம்.

சரியான காரணம் இன்றி இப்படி வாகனம் நிறுத்தப்படும்போது அந்த ஓட்டுனரின் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் இந்த கொடுமைகள் குறையும்.

2005ம் ஆண்டு தமிழகத்தில் கன மழையின்போது மாநிலம் முழுவதும் வெள்ளச்சேதத்தால் கிட்டத்தட்ட எல்லா சாலைகளும் பஞ்சராகி விட்டன. அப்போது சுமார் ஒரு மாத காலம் சாலை விபத்துக்கள் மிக, மிக, மிக குறைவான அளவில்தான் நடந்தன. அந்த ஒரு மாதத்தின் நாளிதழ்களைப் பார்த்தாலே தெரியும்.

இதற்கு காரணம், சாலைகள் மோசமானதாக இருந்ததால் வாகனங்கள் மிதமான வேகத்திலேயே சென்றிருக்கின்றன.

ஆக மொத்தத்தில் வேகம்தான் முக்கிய வில்லன் என்பது புலனாகிறது.

இந்த பதிவில் நான் இணைத்திருக்கும் விபத்து படங்கள், திருவாரூர்-தஞ்சாவூர் சாலையில் அரசு விரைவுப்பேருந்தும் தனியார் கல்லூரிப் பேருந்தும் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியிருக்கும் காட்சி.

மூன்று கல்லூரிப் பேருந்துகள் போட்டி போட்டு அதி வேகமாக வந்தன. அதைப் பார்த்து நான் பேருந்தை நிறுத்தி விட்டேன். இரண்டு பேருந்துகள் நூலிழையில் ஒதுங்கிச் சென்றுவிட்டன, ஆனால் இந்தப் பேருந்து நான் ஓட்டி வந்த பேருந்தின் மீது மோதிவிட்டது என்று அரசு விரைவுப்பேருந்து ஓட்டுனர் சொன்னார்.

ஒரு நாளிதழின் நிருபர் ஒருவர் ஆஃப் தி ரெக்கார்டாக சொன்னது, விபத்துக்குள்ளான கல்லூரிப்பேருந்தை ஓட்டி வந்தது ஒரு கல்லூரி மாணவர்தானாம்.

இந்த புகைப்படங்களைப் பார்த்தால் கல்லூரிப்பேருந்தின் இடப்பக்கம் ஒரு பேருந்து செல்லும் அளவுக்கு இடம் இருப்பது தெரியும். அந்த பேருந்து கட்டுப்பாடில்லாமல் அலைபாய்ந்து வந்தது என்று அரசுப்பேருந்தின் ஓட்டுனர் சொன்னது உண்மையாக கூட இருக்கலாம்.

108 ஆம்புலன்ஸ் அந்த விபத்துக்குள்ளான பேருந்தின் பக்க வாட்டில் நிற்கிறது. சாலையின் மையத்தில் இருக்கும் வெள்ளைக் கோடு எல்லையை ஒழுங்காக கவனித்தாலே பாதி பிரச்சனை இருக்காது. என்ன செய்வது விதி வலியது.

இது உண்மையாக இருக்காது என்று நாம் முழுவதும் புறந்தள்ளி விட முடியாது.


என்னைப் பொறுத்தவரை நாலு வழிச்சாலையில் இரவு, பகல் எந்த நேரமாக இருந்தாலும், வாகனங்களும் வாகன ஓட்டிகளும் ஓய்வெடுக்க என்று பிரத்யேகமாக இருக்கும் இடம் தவிர வேறு எந்த இடத்தில் நின்றாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி நிறுத்தி ஏதாவது விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்டால் வாகனத்தை அலட்சியமாக நிறுத்தியிருந்த ஓட்டுனர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இந்த அலட்சியம் குறையும்.

எல்லா இடங்களிலும் இரட்டை வழி ரயில் பாதை அமைத்து பஸ் போக்குவரத்து போலவே ரயில் போக்குவரத்தும் பெருகினால் இத்தகைய விபத்துக்கள் கணிசமாக குறைந்துவிடும்.

அவ்வளவு எண்ணிக்கையில் ரயில்களை இயக்கத்தேவையான கட்டமைப்புகளை செய்வது மிகவும் கடினம் என்றும், இதனால் பேருந்து போக்குவரத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பலர் வேலையிழப்பார்கள் என்றும் சொல்வார்கள்.

உண்மையான காரணங்கள் இது இல்லை. டூரிஸ்ட் பஸ் என்று பர்மிட் வாங்கி வைத்து விட்டு தினமும் ஆம்னி பஸ் சர்வீஸ் நடத்தி கோடிகளில் புழங்கும் தொழிலதிபர்களின் ஆதரவு தேவைப்படும் அரசியல் வியாதிகளும் அவர்கள் நடத்தும் கேவலமான மோட்டல் வியாபாரம் பாதிக்கும் என்று பயப்படும் குண்டர்களும்தான் உண்மையான பிரச்சனை.

ஆனால் ரயில் போக்குவரத்து இரு வழிப்பாதையாக விஸ்தரிக்கப்பட்டால் பல வகையிலும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாகும். பெட்ரோலியப்பொருட்கள் இறக்குமதி இந்த அளவுக்கு தேவையிருக்காது. சுற்றுச்சூழலும் தப்பிக்கும். நாட்டு, வீட்டு பொருளாதாரமும் உருப்படும்.

ஆனால் மோட்டார் கம்பெனி முதலைகள் இதற்கெல்லாம் வழி விடுவார்களா?

அது சரி, நம் நாட்டில் எப்போதுமே சில லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான மக்களை பாதிக்கச்செய்வது வழக்கம்தானே.

சனி, 23 ஏப்ரல், 2011

மின் வெட்டு - சில தீர்வுகள்





கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நிலவி வந்தாலும் கோடை காலங்களில் இந்த பற்றாக்குறை உச்சத்தை தொட்டுவிடுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே சென்னை தவிர்த்த பிற நகரங்களில் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டுமணி நேரம் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.



தினமும் மின்வெட்டு கட்டாயமாக்கப்பட்டதால் நடுத்தரக் குடும்பங்களில் கூட இன்வெர்ட்டர்களை மிக அதிகமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் சுமார் 20 சதவீதம் வரை மின் நுகர்வு கூடுதலாகும் என்று கூறப்படுகிறது.



ஏப்ரல் மாதமே இந்த அளவு மின் பற்றாக்குறை ஏற்பட இது கூட  முக்கியக் காரணமாக இருக்கலாம். பொதுவாகவே புதிய மின்திட்டங்கள் பலன் தர குறைந்தது 5 வருடங்களாவது ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே.



அதனால் ஆட்சியாளர்கள் எதிர் அணியினரை குறை கூறுவதை நிறுத்தி விட்டு நீண்டகால நோக்கில் பல முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம்.

முதல் காரியமாக வீடுகளில் முற்றிலுமாக குண்டு பல்ப் உபயோகத்தை தடுத்து நிறுத்துவது அவசியம். வசதியானவர்களும், நடுத்தர வருவாய் பிரிவினரும் குண்டு பல்ப் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு குழல்விளக்கு, சி.எஃப்.எல் போன்றவற்றை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.



ஆனால் இன்னமும் கிராமங்களிலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களும் நிறையவே குண்டு பல்ப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையை மாற்றுவது அரசுக்கு மிகவும் சுலபமான ஒன்றுதான்.



சி.எஃப்.எல் பல்ப்புகள் குறைவான மின்சக்தியைப் பெற்று குறைவான வெப்பத்துடன் அதிக ஒளியைத் தருவதாக சொல்லப்படுகிறது. அந்த பல்ப்புகள் செயலிழந்த பிறகு பாதுகாப்பான முறையில் அழிக்கப்படவில்லை என்றால் அவற்றிலிருக்கும் பாதரசத்தால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும்.



ஆனால் எல்.இ.டி வகை விளக்குகளில் இத்தகைய அபாயங்கள் குறைவுதான் என்று சொல்கிறார்கள். மேலும் அவற்றின் ஆயுளும் சி.எஃப்.எல் பல்ப்புகளை விட அதிகம். எனவே இவற்றை முழு அளவில் உற்பத்தி செய்து ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கு இத்தனை என்று மானிய விலையில் விற்பனை செய்யலாம்.



ஒரு வேளை அவை முன்பே பழுதாகி விட்டால் அவற்றை அந்த விற்பனை நிலையத்தில் திரும்பக் கொடுத்துவிட்டு மீண்டும் மானிய விலையிலேயே புதிய எல்.இ.டி பல்ப் வாங்கிக் கொள்ளும் வகையில் வழிசெய்தால் அது மிகப்பெரிய அளவில் பலன் தரும்.



சிறு துளி பெரு வெள்ளம் என்ற பழமொழி இதற்கும் பொருந்தும். நம் நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டால் மிகப் பெரிய அளவில் நாட்டின் பொருளாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரிய நன்மை தரும்.



இது தவிர அரசு அலுவலகங்கள், தெரு விளக்குகள் போன்றவற்றில் முழு அளவில் சூரியஒளி மின்சாரத்தின் உதவியுடன் சாத்தியப்படும் இடங்களில் எல்லாம் எல்.இ.டி விளக்குகளைப் பயன்படுத்தினால் மின் பற்றாக்குறைப் பிரச்சனையின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்.



என் வீட்டிலேயே முன்பெல்லாம் இரண்டு மாதங்களுக்கு மின் நுகர்வு 120 முதல் 140 யூனிட் வரை இருந்தது. நான் கம்ப்யூட்டர் வாங்கிய நேரத்தில் வீட்டில் இருந்த குண்டு பல்ப்புகளை சுத்தமாக ஒழித்து விட்டு, சி.எஃஎல் பல்ப் உபயோகத்தை அதிகப்படுத்தினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.



இப்போது கம்ப்யூட்டர் உபயோகம் அதிகமான பிறகும் மின்சார நுகர்வின் அளவு இரண்டு மாதங்களுக்கு 150 என்ற அளவுக்குள்தான் பெரும்பாலும் இருக்கிறது. எல்.இ.டி பல்ப்புகள் பயன்படுத்தினால் இன்னமும் மின்சாரம் சிக்கனமாக செலவாகும் என்பது கண்கூடு.



என்னுடைய ஒரு வீட்டுக்கே இப்படி என்றால் நாடு முழுவதும் இப்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் எத்தனையோ சதவீதம் மின்சார தேவை குறையும். முக்கியமாக மின்வெட்டே இல்லை என்ற நிலை வந்தால் இன்வெர்ட்டர் பயன்பாடு மிகவும் அத்தியாவசிய தேவையுள்ள இடங்கள் தவிர மற்ற இடங்களில் குறைந்து விடும். இதனாலும் 20 சதவீத அளவுக்கு மின்சாரம் விரயமாவது தடுக்கப்படும்.



இதில் தனிமனிதர்கள் ஆர்வம் காட்டினாலும் செய்து முடிக்க வேண்டிய திறன் அரசுக்குதான் உள்ளது.



அரசு இயந்திரம் செவி சாய்க்குமா?





மின் திருட்டைப் பற்றி இந்தப் பதிவில் எழுதவில்லை. ஏனெனில் அது பெரிய தொடர்கதை.