Search This Blog

திங்கள், 3 ஜனவரி, 2011

தூண்டில்...(சிறுகதை)

எதையுமே பிளான் பண்ணாம பண்ணணும். பிளான் பண்ணினாலே இப்படித்தான். 2010 அக்டோபர் ஆரம்பத்துல 3G டேட்டா கார்டு வாங்கினேன். இணைய இணைப்பு ரொம்ப ஸ்பீடா இருந்தது. சரி...இனி அடிக்கடி பதிவு எழுதலாம்னு நினைச்சேன். அலுவலகத்துல வேலைப் பளு அதிகமாயிடுச்சு. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல வெளிவர்ற நாளிதழ்னுதான் பேரு. வேலைக்கு சேரும்போது சொன்ன சம்பளம் ஒண்ணு. இப்ப தர்றது வேற. என்ன சார் இப்படின்னு கேட்டா, நான் அவ்வளவு சொல்லலியேன்னு அரசியல்வாதி மாதிரி பேசுறாங்க.

வேலைக்கு சேர்ந்த உடனேயா அதிக சம்பளம் தந்துடுவாங்கன்னு நீங்க சொல்றது கேட்குது. என்னை மாதிரியே வேலை செய்யுற இன்னொரு பணியாளர் இங்க சேர்ந்து ஆறு வருஷம் ஆகுது. என்னை விட பல மடங்கு அதிக வேலைதான் செய்யுறார். அவருக்கும் எனக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய்தான் வித்தியாசம். நாளைக்கு என்ற கதி...இந்த கதிதான்னு நல்லாவே புரிஞ்சுகிட்டேன்.
கஷ்டமோ, நஷ்டமோ...கூடிய சீக்கிரம் சொந்த தொழில்ல இறங்கிடலாம்னு ஏற்பாடு பண்ணிகிட்டு இருக்கேன்.

இந்த கதையை இப்ப நிறுத்திக்குவோம்.

அலுவலக வேலை நேரத்தை சரிபண்ணி பதினஞ்சு நாளைக்கு முன்னாலதான் பதிவு எழுதலாம்னு உட்கார்ந்து இருந்தேன். இணைய இணைப்பு கிடைச்சுது. பக்கத்தை ஓப்பன் பண்ண முடியலை. அட்டகாசம் படத்துல ஆட்டோ ஸ்டார்ட் ஆகுது...கியர் விழுது...ஆனா வண்டி மூவ் ஆக மாட்டெங்குதுன்னு ஒரு காமெடி வருமே...அப்படி ஆயிடுச்சு என் நிலமை. கஸ்டமர் கேர் ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க. ஒரு பதிலும் உருப்படியா கிடைக்கலை. "சாமி...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்" அப்படின்னு நான் புலம்பாத குறைதான்.

கடைசியா செட்டிங்க்ஸ் ல சின்னதா ஒரு ஆப்ஷன் மாத்த வேண்டி இருந்தது. அவ்வளவுதான் விஷயம். என்ன கொடுமை சரவணன் இது...

ஒரு ஆணி கழண்டு விழுந்ததால ஒரு சாம்ராஜ்யமே வீழ்ந்ததுன்னு அந்த கதைதான் நினைவுக்கு வந்தது. என்னுடைய கம்ப்யூட்டர்ல எதாவது பிரச்சனையோன்னு போட்டு குடைஞ்சதுல சிஸ்டத்தை பார்மெட் அடிக்கவும் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்யவும் கத்துகிட்டதுதான் லாபம். இனி அடிக்கடி பதிவு எழுத முடியுமான்னு பார்ப்போம்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னால எழுதிய கதையை பதிவு செஞ்சுருக்கேன்.

********

“நீ சம்பாதிச்சு உன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிவெப்பன்னு எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை.ஆனாலும் பொய், பித்தலாட்டம் செய்யுற அளவுக்கு மோசமானவன் இல்லன்னு நம்பிதான் இந்தப் பணத்தை வாங்கிட்டு வர சொல்றேன்...”என்று கூறிதான் வாசுதேவன், இளங்கோவை திருச்சிக்கு அருகில் இருக்கும் கிராமத்துக்கு அனுப்பினார்.

நாற்பதாயிரம் ரூபாய் பணத்துடன் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு வந்த இளங்கோவுக்கு அவர்கள் மூவரையும் பார்த்ததுமே வயிற்றைப் பிசைந்தது.

மூவரில் ஒருவனான சுப்புராஜ், இளங்கோவுடன் படித்த பள்ளித்தோழன்.அவன் சில ஆண்டுகளுக்குப் பிறகும் பார்த்த உடனேயே அடையாளம் கண்டு கொண்டு பேசினான்.

ஒரு நொடி,இந்த நாற்பதாயிரம் ரூபாய் ஒழுங்காக வீடு போய் சேருமா என்ற அச்சம் இளங்கோவின் மனதில் தோன்றி மறைந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில் எவ்வளவோ கசப்பான அனுபவங்கள் இளங்கோவைப் போட்டுப் புரட்டி எடுத்ததில் அவன் தெளிவாகத்தான் இருந்தான்.

ஆனால் சுப்புராஜின் அறிமுகஉரை (?) இளங்கோவின் மனதை ஒரு கணம் சலனப்படுத்திவிட்டு அமைதியானது.

“டேய் இளங்கோ...எப்படி இருக்க?...”என்று சுப்புராஜ்தான் முதலில் அடையாளம் கண்டு பேசினான்.

“என்னடா திகைச்சுப்போய் நின்னுட்ட...நான்தான்டா சுப்புராஜ்...”என்ற அவன்,உடன் வந்தவர்களிடம், “சார்...பத்தாம் வகுப்பு வரை ரெண்டு பேரும் ஒண்ணாதான் படிச்சோம்.நல்ல புத்திசாலி,கதை கட்டுரை எல்லாம் எழுதுவான்...”என்று இளங்கோவைப் பற்றிச் சொன்னான்.

“சுப்பு...உண்மையிலேயே அடையாளம் தெரியாம வாயடைச்சு நின்னுட்டேன்.எப்படி இருக்க...”என்ற இளங்கோ தன் மனதுக்குள் சுப்புராஜ் மீதிருந்த வெறுப்பை வெளிக்காட்டாமல் பேசினான்.

“இளங்கோ...நான் ரொம்பவே செளக்கியமாதான்டா இருக்கேன்...நீ இப்ப எங்க வேலை செய்யுற?...”

பதில் சொல்லாமல் சில நொடிகள் மவுனமாக இருந்த பிறகு, இவன்கிட்ட உண்மை சொன்னாலும் பொய் சொன்னாலும் ஒரே விளைவுதான்.என்று நினைத்தான்.

“பகுதி நேரமா வீடியோ கவரேஜ் செய்யுறேன்.”

“அப்போ நிரந்தர வேலை எதுவும் இல்லை?...”என்று சுப்புராஜ் கேட்டபோது அவன் குரலில் ஏளனம் தெரிந்தது.

மனதில் ஏற்பட்ட எரிச்சலுக்கு உள்ளுக்குள்ளேயே நீரூற்றிய இளங்கோ, “ஆமாம்.”என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தான்.

“நீ கவலையே படாத...உனக்கு வேலை கிடைச்சாச்சு...”என்ற சுப்புராஜின் திடீர் உற்சாகக் குரல் இளங்கோவையே மிரட்டியது.
இப்படி அவன் பேசுகிறான் என்றால் விளைவு மிகப்பெரிய வெடியாகத்தான் இருக்கும் என்பது இளங்கோ நன்கு அறிந்த வி­யம்.அதனால்தான் அந்த நாற்பதாயிரம் ரூபாயைப் பற்றிய பயம் வந்தது.

மீண்டும் இளங்கோ மவுனமாகத்தான் இருந்தான்.

“இப்ப நீ திருவாரூருக்குதான போற...”

சீக்கிரம் போய் டிக்கட் எடுத்துட்டு வா...இப்பவே போனால்தான் இடம் கிடைக்கும்...”என்ற சுப்புராஜ், கிட்டத்தட்ட இளங்கோவை விரட்டினான்.

கூட்டம் மிகக் குறைவாக இருந்த வரிசைக்குச் சென்ற இளங்கோ தன் முறை வந்ததும், “நாலரை மணி பாசஞ்சர்ல திருவாரூர் ஒண்ணு...வைகை எக்ஸ்பிரஸ்ல பரமக்குடி ஒண்ணு.”என்றான்.

“என்னது...வைகை எக்ஸ்பிரஸ்ல பரமக்குடி போறீங்கிளா...”என்று டிக்கட் வழங்குபவர் அதிர்ச்சியானார்.

உடனே சுதாரித்துக்கொண்ட இளங்கோ, “சாரிசார்...வைகையில மதுரை ஒண்ணு...”என்றான்.

அப்போது காதருகில், “வேலை கிடைச்சாச்சுன்னு நான் சொன்னதுமே சந்தோ­த்துல குழம்பிப் போயிட்ட பார்த்தியா?...இன்னும் நான் முழுவிவரம் சொன்னா...அவ்வளவுதான்...”என்று ஒரு குரல்.

இளங்கோ திடுக்கிட்டு திரும்பினான்.நின்றது சுப்புராஜ்.

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு எடுத்த பயணச்சீட்டை, கிராமத்தில் இருந்து வந்த உறவினரிடம் கொடுத்து, “மாமா...வைகை வர்றதுக்கு அஞ்சரை மணிக்கு மேல ஆகும்...எனக்கு நேரமாச்சு... வரட்டுமா?...”என்று கூறி அவரிடம் விடைபெற்ற இளங்கோ மெதுவாக நடந்தான்.

“டேய் இளங்கோ...நீ இந்த மாதிரி போனா, ரயில்ல நிற்கக் கூட இடம் இருக்காது.வேகமா வா...”என்ற சுப்புராஜ், அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினான்.

நாலரை மணிக்கு கிளம்பவேண்டிய ரயிலில் ஒருமணி நேரத்துக்கு முன்பாகவே தொண்ணூறு சதவீத இருக்கைகள் நிரம்பி வழிந்தன.

இளங்கோவை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு அவர்கள் மூவரும் ஒவ்வொரு பெட்டியாக இடம்தேடி அலைந்தார்கள்.

ஒரு ஆளுக்கு இடம் கிடைப்பது ஒன்றும் பெரிய வி­யம் இல்லை.ஆனாலும் சுப்புராஜ் மிகவும் அக்கறையாக அலைவது ஏதோ ஒரு முக்கிய காரியத்துக்காகத்தான் என்பது இளங்கோவுக்கு நன்றாகவே புரிந்துவிட்டது.

நான்குபேரும் அருகருகே அமர்ந்ததுமே சுப்புராஜ் தன் வார்த்தை ஜாலத்தை ஆரம்பித்து விட்டான்.

“இளங்கோ...உனக்கு நல்ல நேரம் வந்துடுச்சு...அதான்,எப்பவும் கார்ல போற நாங்க, இன்னைக்குன்னு ரயில்ல வந்துருக்கோம்...”என்று அவன் நிறுத்தினான்.

உடனே அவனுடன் வந்தவர்களில் மற்றொருவர், “ஆமாம் சார்...அகலரயில்பாதையில் திருவாரூருக்கும் திருச்சிக்கும் போக்குவரத்து ஆரம்பித்தபிறகு இதுல போகவே இல்லையேன்னு இன்னைக்கு வந்தோம்.

அது எவ்வளவு நல்லதாப்போச்சுன்னு பார்த்தீங்கிளா?...சுப்புராஜ் சார் உங்க சிநேகிதர்தான்...அவர் குடும்பம் திருச்சிக்கு வந்துட்டதால உங்களை பார்க்கவே வாய்ப்பில்லை.ஆனா நல்லநேரம் வந்துட்டா யாராலயும் தடுக்க முடியாது...நீங்க எங்களோட சேர்ந்து லட்சலட்சமா சம்பாதிக்கணும்னு விதி இருக்கு சார்...”என்றார்.

இப்போது எதிர்வரிசையில் அமர்ந்திருந்தவர்கள், தங்கள் பேச்சுக்களை நிறுத்திவிட்டு இவர்களைக் கவனித்தார்கள்.
“இளங்கோ...பணம் சம்பாதிக்கிறது ஒண்ணும் சிரமமே இல்லை.ஒரு நாளைக்கு அரைமணிநேரம் பேசி முயற்சி செய்தா போதும்.பதினோரு மாதத்துலேயே லட்சாதிபதி ஆகிடலாம்.ஏழெட்டு வரு­த்துல கோடீஸ்வரனாயிடலாம்...”என்று சுப்புராஜ் பேசுவதை மற்றவர்களும் கண்கள் விரிய கேட்டுக் கொண்டே வந்தார்கள்.

‘நீ பேச ஆரம்பிச்ச உடனேயே இதுக்குதான் அஸ்திவாரம் போடுறேன்னு நான் கணிச்சது நூறு சதவீதம் சரியா இருக்குடா மாப்ளே...’என்று மனதுக்குள் தன்னைத்தானே பாராட்டிக்கொண்டான் இளங்கோ.

“வர்ற புதன்கிழமை மதியம் ஒண்ணரை மணிக்கு திருவாரூர் ரயில் நிலையத்துல ரெடியா இரு...இந்த சார், டிக்கட் எடுத்து உன்னை அழைச்சுட்டு வருவாங்க...திரும்பவும் உன்னைய திருவாரூர்ல விடுற வரை எங்க செலவுதான்.அரை மணிநேர மீட்டிங்.உன் வாழ்க்கை எங்கயோ போயிடும்.”என்றான் சுப்புராஜ்.

“சரி சுப்பு...”என்ற இளங்கோ,ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரை இளங்கோவிடமிருந்து எந்த தகவலும் இல்லை.

அன்று இரவு எட்டு மணிக்கு சொகுசுக்கார் ஒன்று வாசலில் வந்து நின்றதும் வாசுதேவன் முகத்தில் கேள்விக்குறி.

ஓட்டுநர் காரிலேயே இருக்க, கதவைத்திறந்து கொண்டு இறங்கிய சுப்புராஜ், “என்னப்பா...ஆச்சர்யமா இருக்கா?...என்னையைத் தெரியலை?...நான்தான் இளங்கோவோட கிளாஸ்மெட்...சுப்பு...”என்றபடி அமர்க்களமாக உள்ளே நுழைந்தான்.

இளங்கோ அப்போது வீட்டில் இல்லை.அவன் அம்மா லலிதாவும் தங்கை தமிழரசியும் சுப்புராஜை அடையாளம் தெரியாமல் குழம்பினார்கள்.

அவன்,“அம்மா...உங்களுக்குமா தெரியலை...தங்கச்சி...துணி சோப்புன்னு சொல்லி கிண்டல் பண்ணுவியே...இன்னுமா நினைவுக்கு வரலை...”என்றதும் தமிழரசி பிடித்துக்கொண்டாள்.

“அம்மா...நம்ம அண்ணன் இளங்கோ, பத்தாவது படிக்கும்போது, வாத்தியார் குளிக்கிற பழக்கம் இருக்கான்னு கேட்டதுக்கு துணிசோப் பேரை சொல்லிட்டு அடிவாங்குன அண்ணன் இவர்தாம்மா...”என்று கூறிச் சிரித்தாள்.

இப்போதுதான் வாசுதேவனுக்கும் ஞாபகம் வந்தது.“அடடே...சுப்புராஜ் தம்பியா?...நீங்க பிளஸ் டூ முடிச்சப்ப பார்த்தது.அதான் அடையாளம் தெரியவே இல்லை.திருச்சியில இருக்குறதா இளங்கோ ஒரு தடவை சொன்னான்.

இப்ப என்ன வேலை செய்யுறாப்புல... காரு...டிரைவருன்னு ஆள் ஒரு மாதிரியாத்தான் இருக்கீங்க...உட்காருங்க, பேசலாம். ”என்று ஒரு நாற்காலியைச் சுட்டிக் காட்டிவிட்டு தானும் மற்றொரு நாற்காலியில் ஐக்கியமானார்.

“இளங்கோவோட சேர்த்து உங்க குடும்பத்தையும் நல்ல உயரத்துக்கு கொண்டு வந்துடலாம்னு நான் ஒரு சேதி சொன்னேன்.

ஒரு வாரமாச்சு.பதிலே இல்லை.நீங்களாச்சும் எடுத்து சொல்லக்கூடாதாப்பா...”என்று பெருமூச்சு விட்டான் சுப்புராஜ்.

“சுப்புதம்பி...நீங்க ஜி.ஆர்.டி கார்டன்ல ஒரு காலனிலதான குடியிருந்தீங்க.இப்பவும் அப்போ இருந்த மாதிரி நல்லா பேசுறீங்க.அது இருக்கட்டும்.என்னோட உதவாக்கரை புள்ளைகிட்ட என்ன சேதி சொன்னப்பா...”என்று வாசுதேவன் ஆர்வமானார்.

“அப்பா...நாங்க குடியிருந்த காலனியில மொத்தம் பதினெட்டு வீடு இருந்ததே...அந்த கட்டடத்தோட ஓனர் யாருன்னு தெரியுமா...”என்ற சுப்புராஜின் கேள்வியில் ஏதோ விஷ­யம் இருப்பதை வாசுதேவன்,லலிதா,தமிழரசி மூவருமே உணர்ந்து கொண்டார்கள்.

ஆனால் வாசுதேவன் மட்டும்தான் பதில் பேசினார்.

“கொடிக்கால்பாளையத்துல ஒரு பாய்க்கு சொந்தமானதுன்னு நினைக்குறேன்...சரியா?...”என்ற அவர் தயங்கி நிறுத்தியதுமே சுப்புராஜ், “மூணுமாசத்துக்கு முன்னால வரைக்கும் சரி...”என்றான்.

“இப்போ...”

“எங்க அப்பா பேர்ல வாங்கியாச்சு...”என்று சுப்பு சாதாரணமாகத்தான் சொன்னான்.

அப்போது அந்த வீட்டைச் சேர்ந்த மூன்று பேருமே மனதுக்குள் இப்படிப்பட்ட வசதிக்கு ஆசைப்படுவதை அவர்களின் கண்களிலேயே சுப்புராஜ் உணர்ந்து கொண்டான்.

ஆனாலும் அதைக் கவனிக்காததுபோல், “எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலா இந்த வீட்டுலேயே வாடகைக்குதானப்பா இருக்கீங்க...இப்ப நீங்க வேலை செய்யுற இடத்துல இருந்து ஓய்வு கொடுத்து அனுப்பிட்டா உங்க கையில என்ன இருக்கும்?
இதுல தங்கச்சி கல்யாணம் வேற இருக்கு...எவ்வளவுதான் நீங்க நகை, பாத்திரம் சேமித்து வெச்சிருந்தாலும் இப்ப விக்கிற விலை வாசியில நாலஞ்சு லட்ச ரூபா இல்லாம முடியாதே...”என்று பேசிக்கொண்டே பேனான்.

இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வாசுதேவன்,“எங்களுக்கு பெரிய ஆசை எல்லாம் ஒண்ணுமில்லப்பா...உங்கப்பா செஞ்ச புண்ணியம்...திறமையான புள்ளையா நீ பிறந்திருக்க...நான் சேர்த்த பாவங்கள்...இளங்கோவை என் தலையில கட்டியிருக்கு.
காலேஜ் முடிச்சதும் ஏதாவது வேலைக்குப்போய் மாசம் ஆயிரம் ரூபாய் கொண்டு வந்திருந்தாலும் தமிழரசி கல்யாணத்துக்கு கொஞ்சம் பணம் சேர்த்திருக்கலாம்.

ஆனா அவன் கதை, கட்டுரை எழுகிட்டு சினிமா இயக்குநராகணும்னு கனவு கண்டான்.ஒருவரு­ம் சென்னைக்குப் போய் சுற்றி அலைஞ்சு திரும்பவும் திருவாரூருக்கே வந்துட்டான்.

இப்ப என் கம்பெனி முதலாளியே இவனையும் வேலைக்கு கூப்பிடுறாரு.ஆனா இவன் நூலகத்துக்குப் போய் புத்தகம் படிச்சு பொழுது போக்கவும், எப்பவாச்சும் கல்யாணம் காதுகுத்து விசே­த்துக்குப் போய் வீடியோ எடுத்து நூறு அம்பதுன்னு காசு கொடுக்கவும் கத்து வெச்சிருக்கான்.

அதான் இனி இவனை நம்பி பிரயோஜனம் இல்லன்னு கிராமத்துல இருந்த நிலத்தை வித்தாச்சு.போன ஞாயிறு அந்தப் பணத்தை வாங்கிட்டு வரத்தான் போனான். உருப்படியா ஒரு வேலைக்குப் போகலன்னாலும்...பொய் பித்தலாட்டம் இல்லாத பிள்ளையா இளங்கோ வளர்ந்துட்டான்.அது போதும்.

தமிழரசிக்கு கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வெச்ச நகைங்க பதினஞ்சு பவுன் இருக்கும்.அதையும் நாற்பதாயிரம் ரூபாய் பணத்தையும் வெச்சு எப்படி மாப்பிள்ளை தேடுறது?...”என்று பெருமூச்சு விட்டார்.

இப்போது சுப்புராஜ் உற்சாகமாகிவிட்டான்.

“என்னப்பா, இதுக்குப்போய் கவலைப்பட்டுகிட்டு...உங்க கஷ்டமெல்லாம் தீரப்போகுது...
நாங்க ஒரு பிஸினஸ் செய்யுறோம்.ஒரே ஒரு தடவை பத்தாயிரம் ரூபாய் முதலீடு.அடுத்ததா நீங்க ரெண்டு பேரைச் சேர்க்கணும்.அதுக்கு உங்களுக்கு கமி­ன் நாலாயிரம் ரூபாய். அதை உடனே வாங்காம ஒரு ஆண்டு கழிச்சு வாங்கினா முப்பது சதவீதம் வட்டியோட இதுவும் பெருகும்.
இது தவிர உங்களுக்கு கீழ உள்ளவங்க ஆள் சேர்த்துகிட்டே இருந்தா பதினோரு மாசத்துலேயே லட்சாதிபதி ஆகிடலாம்.
அதாவது பத்தாயிரம் ரூபாய் ஒரு லட்சமா மாறுனா உங்க கஷ்டமெல்லாம் பறந்து ஓடிடும்...”என்று சொன்ன சுப்புராஜ் அவர்கள் யோசிக்கட்டும் என்று சற்று அவகாசம் கொடுத்தான்.

“இதெல்லாம் சரிதான்.இந்தக் காசு பெருகுற அளவுக்கு எந்த தொழில்ல இவ்வளவு வருமானம் வரும்?...”என்ற வாசுதேவனின் கேள்வியில் சுப்புராஜ் சற்று தடுமாறினான்.

“பங்குச்சந்தைதான்...நீங்களும் நானும் நேரடியா ஷேர் வாங்கி விற்பனை செய்தா என்ன வேணுன்னாலும் நடக்கும்.அவங்க கோடிக்கணக்கான எண்ணிக்கையில பங்குவர்த்தகம் செஞ்சா கண்டிப்பா லாபம் உண்டு.ஒவ்வொரு பங்கும் ஒரே ஒரு ரூபாய் விலை ஏறினால் கூட போதும்.நிறையவே லாபம் கிடைக்கும்.

பத்தாயிரம் ரூபாய் ஒரே ஒரு தடவை கட்டிட்டு, நீங்க தொடர்ந்து உறுப்பினர்களை சேர்த்துவிட்டுகிட்டே  இருங்க.ஒரு வரு­ம் வரை கமி­ஷன் தொகையையும் வாங்காம விட்டு வெச்சா,தங்கச்சிக்கு அசத்தலான செலவுல கல்யாணம் பண்ணி வைக்கலாம்.ஒவ்வொரு வாரமும் ஸ்டேட்மெண்ட் வரும்.உங்க பணம் என்ன வேகமா வளருதுன்னு நீங்களே பார்க்கதானே போறீங்க...”என்ற சுப்புராஜ் தொடர்ந்து அரைமணிநேரம் பேசியதில் நிலம் விற்ற பணம் நாற்பதாயிரம் ரூபாயையும் குடும்பத்தில் உள்ள நான்கு உறுப்பினர்களின் பெயரில் முதலீடு செய்ய வாசுதேவன் தயாராகிவிட்டார்.

அப்போதுதான் இளங்கோ, வீட்டுக்குள் நுழைந்தான்.

“வாடா இளங்கோ...அப்பாகிட்ட எல்லா செய்தியும் சொல்லிட்டேன்.நான் இப்ப அவசரமா வெளியில போகணும்...”என்று தன் மொபைல் எண்ணைக் கொடுத்துவிட்டு சுப்புராஜ் வெளியேறினான்.

“அப்பா...இதெல்லாம் சுத்த ஏமாற்றுவேலை.அவன் பேச்சைக் கேக்காதீங்கப்பா...நான் சென்னையில இருந்தப்ப பெரிய ஸ்டார் ஹோட்டலுக்கே கூட்டிட்டுப் போய் பிரெய்ன் வாஷ் பண்ணினாங்க.மூணு வரு­த்துலேயே பத்துகோடி சம்பாதிக்கலாம்.பிறகு ஒரு கோடி செலவு பண்ணி வரு­ம் ஒரு படம் நீயே தயாரித்து இயக்கலாம்.தயாரிப்பாளர் தேடி அலையவேண்டாம்னு இன்னும் என்னென்னவோ சொல்லி ஆசை காட்டினாங்க...இந்த மாதிரி பேச்சுக்கெல்லாம் மயங்கக்கூடாதுப்பா...”என்று இளங்கோ கெஞ்சும் தொனியில் பேசினான்.

இப்போது வாசுதேவனின் குரலில் உஷ்ணம் கூடிவிட்டது.

“டேய்...உருப்படியா ஒரு வேலைவெட்டி இல்லாம சுத்துற நீ அந்தப் புள்ளைய தப்பு சொல்றியா?சின்ன வயசுல உங்க பிரெண்டோட அப்பாவை கேபிள் டி.வி பார்ட்னர்´ப்லேர்ந்து கழட்டி விட்டதை மனசுல வெச்சிகிட்டு பேசுற...அவன் ஏமாத்தாம,போட்ட முதல் பணத்தைப் பிரிச்சுக் கொடுத்துதான அனுப்பினான்.அது தொழில் சாமர்த்தியம்.
இப்ப நாம போடுற காசு முதலுக்கு மோசமில்லாம கிடைக்க சுப்புராஜ் இருக்கான்.

நம்ம ஊர்ல இப்பதான் ஆள் சேர்க்க ஆரம்பிச்சு இருக்காங்க.நீ நூலகத்துல சேர்ந்து நாலுபேரோட புத்தகம் படிக்கிறதை நிறுத்திட்டு இதுக்கு ஆள் சேர்...இதுதான் என் முடிவு...”என்ற அவர், பணத்தை இளங்கோவிடம் கொடுத்து விட்டார்.

அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் தபால் மூலம் ஸ்டேட்மெண்ட்டுகள் வரத் தொடங்கின.
வாசுதேவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததால் வேலைப்பளு காரணமாக அவர் உறுப்பினர்களைச் சேர்க்க முயற்சிக்கவில்லை.

மேலும் அவர், உறவினர்கள்,நண்பர்கள், சக ஊழியர்களிடம் இது பற்றிப் பேசாததற்கு மற்றொரு காரணமும் உண்டு.அவர்கள் பொறாமைப்படுவார்கள் என்பதால்தான்.

உறுப்பினர்களைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதால் இளங்கோ, வீட்டில் இருப்பதே அரிதாகிப்போனது.

ஆறுமாதங்கள் போன பிறகு தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்த மோசடி பற்றிப் படித்த வாசுதேவன் மயக்க நிலைக்கு சென்றுவிட்டார்.

கண்விழித்துப்பார்த்த அவர் இருந்தது ஒரு தனியார் மருத்துவமனையில்.

அவர் முதலில் கேட்ட கேள்வியே,“சுப்புராஜ் நம்ம பணத்தைப்போட்ட கம்பெனிதான அது?...இளங்கோவை விசாரிக்கச் சொன்னியா?...”என்பதுதான்.

“ஆமாங்க...”என்ற லலிதா புடவைத்தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள்.

“பெத்தவங்க பேச்சைக் கேட்காம பொறுப்பில்லாத பிள்ளையா இருக்கியேன்னு நான் இளங்கோவைத் திட்டுனேன்.ஆனா அவன் சொன்னதைக் கேட்காம பணத்தை ஏமாந்து விட்டுட்டு இப்ப புலம்புறேனே...”என்று வாசுதேவன் அழுது அரற்றியபோது இளங்கோ உள்ளே நுழைந்தான்.

“பணம் போனா போகட்டும்.சம்பாதிச்சுக்கலாம்...நீங்க அழாதீங்கப்பா...”என்ற அவன், ஆறுதலாக தந்தையின் கரங்களை பிடித்துக் கொண்டான்.

“நான் எந்த ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சேன்னு தெரியலையே...இப்படி பணத்தை இழந்துட்டு நிக்கிறேனே...”என்ற புலம்பலை வாசுதேவன் நிறுத்தவில்லை.

“முன்ஜென்மப் பாவம் இல்லப்பா...சமீபத்துல செஞ்சதுதான்...”என்று இளங்கோ சொன்னதும் அவன் தாய்,தந்தை,தங்கை மூவருமே அதிர்ந்தார்கள்.

“நான் சொந்தத் தொழில் செய்யணும்.கொஞ்சம் பணம் ஏற்பாடு செய்யுங்கப்பான்னு கெஞ்சினேன். நீங்க கேட்கலை.
ஏதாவது அரசு வேலையில சேரணும்னா சொல்லு.லஞ்சம் கொடுக்கலாம்.இல்லன்னா வெளிநாடு போறதுன்னு சொல்லு.பணம் தர்றேன்.இங்கேயே தொழில் செய்யுறதெல்லாம் ஆகாத கதை... அப்படி இப்படி சொல்லி உறுதியா மறுத்தீங்க.இதெல்லாம் இந்த ஜென்மத்துப் புண்ணியத்துலயா சேரும்?
அதே நேரத்துல பத்தாயிரம் ரூபா ஒரே வரு­த்துல ஒரு லட்ச ரூபாயா மாறிடும்னு ஒருத்தன் சொன்னதும் பணத்தைத் தூக்கிக் கொடுத்தீங்கிளே...அதுக்குக் காரணம்...பேராசை.
பேராசை நிறைவேறணும்னா யாரோ ஒரு அப்பாவி பாதிக்கப்படணும்.அதுவும் பாவம்தான்.இதை எல்லாம் செஞ்சுட்டு நான் என்ன பாவம் பண்ணினேன்னு புலம்பிட்டா சரியாயிடுமா?...”என்று இளங்கோ குரலை உயர்த்தாமல் பேசினான்.
வாசுதேவனுக்கு அதில் இருந்த உண்மைகள் சுட்டன.“ குத்திக்காட்டுறியா...”என்றார்.
அப்போது இளங்கோ தொடர்ந்து பேசினான்.

வாசுதேவன் நாற்பதாயிரம் ரூபாயையும் இளங்கோவிடம் தந்து முதலீடு செய்யச் சொன்னதும் பணத்தை எடுத்துக் கொண்டு நேரே சுப்புராஜைத்தான் சந்தித்தான்.

அவன் பேசத் தொடங்கும் முன்பே இளங்கோ, “மிஸ்டர் சுப்புராஜ்...நீங்க சொல்ற வழியில வர்ற வருமானம் உங்களை மாதிரி ஒரு சிலருக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கும்.அப்புறமா ஒரு நிலையில எல்லாமே நின்னு போயிடும்.அதனால இதுல பணம் போட எனக்கு இஷ்டம் இல்லை.

என்னைப் பொறுத்த வரை இது சூதாட்டம்.எங்க அப்பா உனக்கு போன் செஞ்சா, எல்லா செய்தியையும் என்கிட்ட பேச சொல்லிடு.இதுக்கு நீ ஒத்துக்கலைன்னா இப்ப நீங்க செய்யுற பிஸினஸ் சட்டப்படி தடை செய்யப்பட்டதுன்னு நிரூபிச்சு உடனடியா உள்ள தள்ள வேண்டியதுதான். ”என்றான்.

சுப்புராஜ் வேண்டா வெறுப்பாகத் தலை அசைக்க, அந்த நாற்பதாயிரம் ரூபாயை முதலீடாக்கி கணிப்பொறி ஒன்றை வாங்கினான் இளங்கோ.

அவன் நண்பனுடன் திருவாரூரில் உள்ள பள்ளி,கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்,மாணவிகளை புகைப்படம் எடுத்து அடையாள அட்டை தயாரிக்கும் பணியை ஏற்றுக் கொண்டு தீவிரமாக உழைக்க ஆரம்பித்தான்.
இளங்கோவின் கற்பனை வளம் காரணமாக, திருமண ஆல்பம், போஸ்டர், டி.வி.டி ஆகியவற்றில் கிராபிக்ஸ் வேலைகள் செய்ய நிறைய ஆர்டர் கிடைத்தது.

சுப்புராஜ் மெம்பராக இருந்த நிறுவனத்தின் பெயரில் ஆறுமாதங்கள் வரை ஸ்டேட்மெண்ட் எடுத்து அனுப்புவது இளங்கோவுக்கு சிரமமான காரியமாக இல்லை.

எல்லா வி­ஷயங்களையும் தன் குடும்பத்தாரிடம் சொன்ன அவன்,“அப்பா...இனிமே நீங்க கவலைப்படாதீங்க.தமிழரசியோட கல்யாண ஏற்பாடு என் பொறுப்பு...அந்த நிறுவனத்துகிட்ட இருந்து ஏமாந்தவங்க, புகார் கொடுத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க நான்தான் காரணம்.

நான் மட்டும் நல்லா இருந்தா போதுமா...மத்தவங்களும் ஏமாறாம இருக்கணுமே...”என்றான்.
இப்போது வாசுதேவனுக்கு மீண்டும் அதிர்ச்சி.

ஆமாம்...இன்ப அதிர்ச்சி அது.

**********

சனி, 13 நவம்பர், 2010

பார்றா!... (ஓயாம எல்லாம் இந்த மூஞ்சியை பார்க்க முடியாது.)

இந்தக் கதையை நான் செந்தமிழ் எழுத்துருவில் தட்டச்சு செய்து வைத்திருந்தேன். வலைப்பூவில் பதிவேற்ற யுனிகோடு எழுத்துருவுக்கு மறுபடியும் தட்டச்ச வேண்டுமே...மறுபடியும் முதல்லேருந்தா என்ற மலைப்பு எனக்கு. அதனால்தான் பல மாதங்களாக இந்த கதை கணிணிக்குள்ளேயே தூங்கிக்கொண்டிருந்தது.

நான் இப்போது ஒரு தமிழ் நாளிதழில் பக்க வடிவமைப்பாளராக இருப்பதால் சக ஊழியர் மூலம் நேற்றுதான் செந்தமிழ் எழுத்துருவில் இருந்து (வேறு சில வடிவங்களிலிலிருந்தும்) யுனிகோடு வடிவத்துக்கு எளிதாக மாற்றும் முறை தெரிந்தது. உடனே வந்துட்டோம்ல... ஒரு சிறுகதையோட.

நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்த உலகம் வேறு. இப்போது குழந்தைகளுக்கு நாம் காட்டும் உலகம் வேறு. தொழில்நுட்பத்தில், பல வித வசதிகளில் உலகம் மேம்பட்டிருந்தாலும் உறவுகளைப் பேணுவதில் நாம் மிக மிக பின்தங்கிய நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக தோன்றுகிறது. சுருங்கச் சொன்னால் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதே எல்லா பிரச்சனைக்கும் முழு முதல் காரணம்.

சகிப்புத்தன்மை என்பது பிறர் மீது அன்பு செலுத்துவதால் வருவது. ஆனால் மற்றவர் தான் என்னிடம் அன்பு செலுத்த வேண்டும், என்னை சகித்துக்கொள்ள வேண்டும் என்ற சர்வாதிகார மனோபாவம் நம்மில் பலருக்கு உண்டு.

இதாவது பரவாயில்லை. சகிப்புத்தன்மையுடன் இருக்கும் ஒருவர் நம்மிடம் சிக்கினால் ஆஹா...ஒரு அடிமை சிக்கிட்டாண்டா என்று அவனை மேலும் கசக்கிப் பிழிந்து படுத்தி வைப்பார்கள். ஒரு கட்டத்தில் அவனே வெறுத்துப்போய் மிக மோசமான கோபக்காரனாகி விடுவதும் உண்டு. மூன்று முறை அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும் என்ற வரி இதனால்தான் உருவாகி இருக்குமோ.

நான் வேற வளவளன்னு எழுதிகிட்டே இருக்கேன். இப்ப நான் சொன்னதை எல்லாம் கொஞ்ச நேரம் ஓரமா வெச்சுட்டு கதைக்குள்ள போங்க.

******

தனக்கென தனி இடம் பிடித்துக்கொண்டு இந்தியா முழுவதும் விற்பனையாகும் பிஸ்கட் கம்பெனி பொன்விழா கண்ட பிறகும் திருவாரூரில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

அந்த நிறுவனத்தை உருவாக்கிய முதலாளியின் பேரன் பழனியப்பன்தான் தற்போது நிர்வாக இயக்குநராக இருக்கிறார். அவர்களுக்கு பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனம்தான் பிரதான தொழில் என்றாலும் போக்குவரத்து, திரையரங்கம், திருமணஅரங்கம், மருத்துவமனை, உணவுவிடுதி என்று பல துணைத் தொழில்களையும் லாபகரமாக நடத்தி வந்தார்கள். இந்த ஆண்டு அவர்கள் புதியதாக பள்ளிக்கூடத்தை துவங்கியுள்ளார்கள்.மற்றொரு வியாபாரம்(?!)

பழனியப்பனின் மனைவி சொர்ணாம்பிகாதான் பள்ளி முதல்வர்.
அந்தப்பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்ட முதல் கல்வி ஆண்டிலேயே இருநூற்று பதினான்கு பேர் சேர்ந்த சந்தோ­த்தில் இருந்தார் பள்ளி முதல்வர் சொர்ணாம்பிகா. ஆனால் பதினைந்தே நாட்களில் இப்படி ஒரு சிக்கல் வரும் என்று அவர் மட்டுமின்றி அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளும் எதிர்பார்க்கவில்லை. சொர்ணாம்பிகா சட்டென்று டெலிபோன் மூலம் கணவரிடம் விவரத்தை தெரிவித்துவிட்டார்.

அவர் பேசி முடித்ததும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை விஷ்ணுப்ரியா, “சார் என்ன சொன்னாங்க மேடம்?  ” என்றார்.

“முரளியை அனுப்புறேன்... வி­யத்தை அவரோட பொறுப்புல விட்டுடுங்கன்னு சொல்லிட்டார்.”

“மேடம்... முரளி அக்கவுண்ட்ஸ்ல பெரிய ஆள்தான் ஒத்துக்குறோம். இது பசங்க சம்மந்தப்பட்டது. ரொம்பவும் சென்சிட்டிவான வி­யம். இந்த மாதிரி சூழ்நிலையில அதிரடியாத்தான் முடிவெடுக்கணும். அலட்சியமா ஹேண்டில் பண்ணினா இதுவே தொடர்கதையாக வாய்ப்பு இருக்கு. நான் சொல்றதுதான் சரியான வழி. ஸ்ருதியோட பேரண்ட்ஸ் சமாதானமாகுற விதமா நாம ஏதாவது செய்யலைன்னா நம்ம ஸ்கூலுக்குதான் கெட்டபேர். அப்புறம் உங்க இஷ்டம்.” என்றார் சசிகலா என்ற ஆசிரியை.

இந்த வி­யத்தைக் கையாளும் பொறுப்பு முரளியிடம் போவதை சசிகலா விரும்பாததை இந்தப் பேச்சிலிருந்தே அனைவரும் தெரிந்து கொண்டனர். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பள்ளி அலுவலகப் பணிகளுக்கு  இன்னும் ஆட்கள் நியமிக்கப்படவில்லை. பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கை நடந்தபோது ரசீது போட்டுக் கொடுக்கும் பணியை சசிகலாவே ஆர்வமாக ஏற்றுக் கொண்டார்.

இப்போது கணக்குகளை முறையாகப் பராமரிக்கும் பணியை பகுதிநேரமாக செய்யும் பொறுப்பு பிஸ்கட்தொழிற்சாலையில் வேலை செய்யும் கணக்காளரான முரளியிடமே பழனியப்பன் ஒப்படைத்ததும்தான் சிக்கலே.
பள்ளிக்கூடத்திற்கு வந்த கணக்காளரைப் பார்த்த சொர்ணாம்பிகாவுக்கு மட்டுமின்றி மற்ற ஆசிரியைகளுக்குமே நம்பிக்கை இல்லை.

காரணம் முரளியின் வயதுதான். திருவாரூர் கல்லூரியில் பி.காம் முடித்ததுமே, தான் கணிணி பயிற்சி பெற்ற நிறுவனத்தின் மூலமாக இந்த பிஸ்கட் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தவன்.

அவனை வரவேற்பறையில் அமரவைத்துவிட்டு சொர்ணாம்பிகா செய்த முதல் காரியம், பழனியப்பனுக்கு போன் செய்து, “என்னங்க இது... ஒரு சின்னப் பையனை நம்பி இவ்வளவு பொறுப்பைக் குடுத்துருக்கீங்க...”என்று கேட்டதுதான்.

“என்னைய என்ன முட்டாளுன்னு நினைச்சியா... சேல்ஸ்டாக்ஸ், இன்கம்டாக்ஸ்ல எல்லாம் சின்ன மிஸ்டேக்கை கண்டுபிடிக்காததால பல வரு­மா இழுத்துகிட்டு இருந்த கணக்கு வழக்கை எல்லாம் வேலைக்கு சேர்ந்த ரெண்டு மாசத்துக்குள்ள சரிசெஞ்சுட்டார்.  முரளி இப்ப பிஸ்கட் பாக்டரிக்கு மட்டும் அக்கவுண்டன்ட் கிடையாது. நம்மளோட எல்லா தொழில்லயும் சிக்கலான கணக்குகளை சரிபண்ணி பராமரிக்கிறதுதான் அவரோட முக்கிய வேலை. ஆளைப் பார்த்து எடை போடாம ஒழுங்கா அவருக்கு உதவி பண்ணுங்க.”என்று கோபமாகப் பேசிய பழனியப்பன் சட்டென்று டெலிபோன் தொடர்பைத் துண்டித்தார்.

ரசீதுப் புத்தகங்கள், ஓர் எண்ணுக்கு மூன்று பிரதிகள் வீதம் தயாரிக்கப்பட்டிருந்தன. மாணவருக்கு முதல் பிரதியும், அலுவலகத்தின் கோப்புகளில் வைப்பதற்கு இரண்டாவது பிரதியும், பணம் வசூலிப்பவர்களின் வசதிக்காக அடிக்கட்டாகப் பயன்படும் வகையில் மூன்றாவது பிரதியும் இருந்தன. ஆனால் சசிகலாவுக்கு இந்த விவரம் புரியமலோ தெரியாமலோ ஒன்றாம் எண் ரசீதின் மூன்று பிரதிகளிலும் மூன்று மாணவர்களுக்கு பில் போட்டுக் கொடுத்துவிட்டார். மாணவரின் பெயர், வகுப்பு, தொகை ஆகிய விவரங்களை தனியே ஒரு வெள்ளைத்தாளில் மிக அழகாக எழுதி வைத்திருந்தார்.

“என்ன மேடம் இப்படி பண்ணிட்டீங்க...”என்று முரளி சாதாரணமாகத்தான் கேட்டான். ஆனால் சசிகலாவுக்கு தவறை ஒப்புக்கொள்ள மனமில்லை.

“நாங்க எல்லாம் டீச்சர்ஸ். பாடம் நடத்துறதுதான் எங்க வேலை. ஆள் இல்லையேன்னு ஏதோ யஹல்ப் பண்ணினேன். பழக்கமில்லாத வேலையில இப்படி சின்ன சின்ன தப்பு வரத்தான் செய்யும்... ”என்று சமாளித்தார்.

“வரிசையா மூணு ரசீதும் வேறவேற கலர்ல ஆனா ஒரே சீரியல் நம்பரா இருக்கே...கார்பன் வெச்சுதான எழுதணும்னு புரிஞ்சுக்க இதுல பி.ஹெச்.டி பண்ணிட்டு வரணுமாக்கும்.என்னமோ போங்க... பிரின்சிபால் மேடமும் அவங்க ரசீது போட்ட அழகைப் பார்க்கவே இல்லை போலிருக்கு...” என்று சொர்ணாம்பிகாவையும் சேர்த்து வாரினான்.

அவனுடைய பேச்சு இப்படி இருந்தாலும் அக்கவுண்ட் வி­யத்தில் பழனியப்பன் சொன்னபடியே மிகவும் திறமைசாலிதான். மூன்று மணிநேரத்திலேயே கணிணியில் எல்லா விவரங்களையும் பதிவேற்றம் செய்துவிட்டான். மறுநாள் வந்து  ஒவ்வொரு பிள்ளையின் பெயர், முகவரி, பெற்ற கட்டணம், பெற வேண்டிய கட்டணம் உட்பட எல்லா விவரங்களையும் ஒரே ஒரு தாளைப் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் ஆவணம் தயாரித்து அதை ஒரு ஃபைலிலும் போட்டுக் கொடுத்துவிட்டான். அதே போல் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கு முரளியால் நல்ல முறையில் தீர்வு காணமுடியும் என்று பழனியப்பன் நம்பி அனுப்புகிறார். ஆனால் சசிகலாவுக்கு முரளிமேல் உள்ள கோபத்தால் இது பிடிக்கவில்லை. நிறைய இடங்களில் இப்படித்தான் உண்மையான திறமையை காழ்ப்புணர்ச்சி கீழே தள்ளிவிட முயற்சி செய்கிறது.

முரளி வந்ததும் சொர்ணாம்பிகா சொன்ன விவரங்களை எந்தக் குறுக்கீடும் இல்லாமல் கேட்டுக் கொண்டான். பிறகு அவன் கேட்ட முதல் கேள்வி, “மேடம்...மற்ற டீச்சர்ஸ் எல்லாம் என்ன செய்யலாம்னு சொல்றாங்க?...அந்த விவரம் தெரிஞ்சா எனக்கு உதவியா இருக்கும்...ஒருவேளை, அதுவே சரியான யோசனையா கூட இருக்கலாம். என்பதுதான்.

சொர்ணாம்பிகாவுக்கு தன் கணவர் ஏன் முரளிமேல் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று புரிந்து விட்டது.
“விஷ்ணுப்ரியா...நீங்க சொல்லுங்க...”என்று முதல்வர் சொன்னார்.

“சார்...சசிகலா மேடம் எல்லாரையும் சந்தேகப்படுறதுக்கு பதிலா குறிப்பிட்ட மூணுபேரை மட்டும் சோதனை போட்டாலே உண்மை தெரிஞ்சுடும்னு சொல்றாங்க. ஆனா எனக்கு இப்ப என்ன பண்றதுன்னே புரியலை. அந்தப் பசங்களை நினைச்சா பரிதாபமா இருக்கு.”

“எந்த மூணு பேர் மேல சந்தேகம்? ”

விஷ்ணுப்ரியா விவரம் சொன்னார்.

“மேடம்...உங்களை நினைச்சு நான் பெருமைப்படுறேன். உறுதியான முடிவு எடுக்க முடியலைன்னாலும் பசங்க மனசு வீண்பழியை சுமக்கக் கூடாதுன்னு நினைக்குறீங்க. ஆசிரியர் பணிக்கு முக்கிய தகுதிகள்ல இதுவும் ஒண்ணு.
கல்வியை முழுஅளவுல வியாபாரமாக்குறவங்க பெருகிட்ட இந்தக் காலத்துல ஒவ்வொரு வகுப்புலேயும் மூணு ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க இந்தப் பள்ளி நிர்வாகம் முடிவு பண்ணியிருக்குறதே பெரிய விஷ­யம்.நம்ம இஷ்டத்துக்கு ஏழைங்கதான் காசை எடுத்துருப்பாங்கன்னு கண்மூடித்தனமா நம்பி அவங்களை சோதனை போட்டா என்ன ஆகும் தெரியுமா?... அவங்களே இந்த பணக்கார பள்ளிக்கூட சகவாசம் நமக்கு வேண்டாம்னு ஒதுங்கி ஓடிடுவாங்க.இல்ல...வேற ஏதாவது தப்பான முடிவை எடுத்துடுவாங்க.”என்று முரளி சொன்னபோது, சசிகலா குறுக்கிட்டார்.

“அவங்க எடுத்துருந்தாங்கன்னா? ”

“அதைப் பத்தி அப்புறம் யோசிப்போம்.” என்ற முரளி, மற்ற ஆசிரியைகளை அவரவர் வகுப்புக்கு போகச் சொல்லிவிட்டு சொர்ணாம்பிகா, விஷ்ணுப்ரியாவுடன் ஐந்தாம் வகுப்புக்குச் சென்றான்.

விஷ்ணுப்ரியாவிடம் “மேடம்... அந்தப் பொண்ணைக் கூப்பிடுங்க.” என்றதும், ஸ்ருதி வகுப்பாசிரியையின் உத்தரவை எதிர்பார்க்காமலேயே எழுந்து அருகில் வந்தாள். அழுததில் கண்கள் சிவந்திருந்தன. கன்னங்களில் கண்ணீர்க் கோடுகள்.

“ஸ்ருதி அழுததுக்கு என்ன காரணம்னு உங்களுக்கு தெரியுமா? ”என்று அமர்ந்திருந்த மாணவர்கள், மாணவிகளைப் பார்த்து முரளி கேட்டதும், “இருநூறு ரூபா பணம் காணாமப் போயிடுச்சு சார்...”என்று அவர்கள் போட்ட சத்தத்தால் முரளி, விஷ்ணுப்ரியா ஆகியோர் காதுகளைப் பொத்திக்கொண்டனர்.

“நீங்க பதில் சொன்னாலே ச்சும்மா அதிருதுல்ல...”என்று ரஜினிகாந்த் ஸ்டைலில் முரளி பேசிக் காண்பித்ததும் மீண்டும் குழந்தைகளின் உற்சாகக் கூச்சல்.

“சரி...போதும். இத்தோட நிறுத்திக்குவோம்.”

உடனே  ஒருவன்,  “இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே சார்...என்றான்.

“அது சரி... உங்களுக்கு பாடத்தெரியுமா...”

“ஓஹோ...”மீண்டும் கோரசாக பதில்.

“சரி...நான் அலுவலக அறைக்கு போறேன். நீங்க ஒவ்வொருத்தரா வந்து எனக்கு பாட்டு பாடிக் காட்டுங்க. பாடத் தெரியாதவங்க கதை சொல்லலாம். ஏன்னா எனக்கு கதை ரொம்ப பிடிக்கும். ஓ.கேவா...”

“ஓஓஓஓஓக்கே...”என்று மீண்டும் வகுப்பறை அதிர்ந்தது.

“நல்லா பாட்டு பாடுனவங்கள்ல ஒருத்தருக்கும், பிரமாதமா கதை சொன்னவங்கள்ல ஒருத்தருக்கும் நாளைக்கு காலையில  பிரேயரின்போது பேனா பரிசா தருவேன். ”என்று முரளி சொன்னதும் பாதி மாணவ மாணவிகள் அப்போதே எழுந்து தயாராகிவிட்டார்கள்.

“முதல்ல எல்லாரும் உட்காருங்க... வருகைப்பதிவேட்டுல உள்ள வரிசைப்படிதான் வரணும். ஆனா ஒரு வி­ஷயம். இருநூறு ரூபாயை எடுத்தது யாருன்னு நான் கண்டுபிடிச்சுட்டேன். ”என்று சொன்ன அதே நொடியில் எல்லாரையும் நோட்டம் விட்டுக்கொண்டான்.

“என்கிட்ட பாட்டுப்பாடிக் காண்பிக்க அறைக்குள்ள வரும்போது அவங்களாவே கொடுத்துட்டா நான் அடிக்க மாட்டேன். வேற யாரும் அடிக்கவும் விட மாட்டேன். அவ்வளவு ஏன், பணத்தை தொலைச்ச ஸ்ருதிக்கே வி­ஷயத்தை தெரியாம பண்ணிடுவேன்.

ஆனா என்னைய ஏமாத்தணும்னு நினைச்சா அவ்வளவுதான். எல்லார் முன்னாடியும் உண்மையை சொல்லிடுவேன். அப்புறம் யாருமே பணத்தை எடுத்தவங்க கூட சேர மாட்டாங்க.”

முரளியின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. அவனுடைய கணிப்பும் சரியாக இருந்தது. மீண்டும் சசிகலாவுக்கு ஒரு சறுக்கல். பணத்தை எடுத்த மாணவனின் தந்தையும் தாயும் அரசுப்பணியில் இருப்பவர்கள். சசிகலாவின் யோசனைப்படி அந்த ஏழை மாணவர்களை சோதனைப் போட்டிருந்தால் அவர்கள் மனதளவில் நொறுங்கியிருப்பார்கள்.

மறுநாள்.

“என்ன முரளிசார்...இன்னைக்கு காலையிலேயே வந்துருக்கீங்க... ”என்றாள் விஷ்ணுப்ரியா.

“பிரேயர்ல கலந்துக்கதான். ”

இதைக்கேட்ட விஷ்ணுப்ரியா தலையை லேசாக சாய்த்து  “பார்றா...”என்றதை முரளி கண்டுகொள்ளாமல் தொடர்ந்து,

“நேத்து ரெண்டு பசங்களுக்கு பேனா பரிசா தர்றதா சொல்லியிருந்தேனே. அதான். கொடுத்த வாக்கைக் காப்பாத்தணும்ல.” என்றான்.

“மறுபடியும் பார்றா... ”என்ற விஷ்ணுப்ரியாவுக்கு

“ஓயாம எல்லாம் இந்த மூஞ்சியைப் பார்க்க முடியாது. ”என்ற பதிலடி முரளியிடமிருந்து வந்ததும் அவளுடைய முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.

“முறைக்காதீங்க மேடம். சும்மா ஜாலிக்கு...” என்று அவன் சொல்லிவிட்டாலும் விஷ்ணுப்ரியாவின் மனம் சமாதானமாகவில்லை.

‘பள்ளிக்கூடத்துல படிச்ச காலத்துல இருந்து இப்ப வரைக்கும் எவ்வளவு பேர் நான் பார்க்க மாட்டேனான்னு ஏங்கிகிட்டு இருக்காங்க... இவன் ரொம்ப சாதாரணமா இந்த மூஞ்சியை அடிக்கடி பார்க்க முடியாதுன்னு சொல்றானே...இனி நாமளும் இவனைப் பார்க்கவே கூடாது.’என்று நினைத்துக்கொண்டாள்.

ஆனால் அவள் மனம், கடிவாளம் போட நினைத்தபின்புதான் அதிகமாக தறிகெட்டு ஓடும்...ஒருநாள்கூட அவனைப் பார்க்காமல் இருக்க அனுமதிக்காது என்று அவளுக்கு அப்போது புரியவில்லை.

பிரேயரின்போது முரளி,  “ஸ்ருதியோட பணத்தை எடுத்தவங்க என்கிட்ட கொடுத்துட்டாங்க. ஆனா அது யாருன்னு உங்க யாருக்கும் நான் சொல்ல மாட்டேன். இனிமே யாரும் இப்படி தப்பு பண்ணக்கூடாது. எப்படியும் எனக்கு தெரிஞ்சுடும். மறுபடியும் இந்த மாதிரி தப்பு செஞ்சா என்னோட  தண்டனை   முறைகள்  கடுமையா     இருக்கும். ”  என்று சொல்லிவிட்டு, கதை மற்றும் பாட்டுக்காக இரண்டுபேருக்கு பேனா பரிசாக வழங்கினான்.

முரளியின் ஆலோசனைப்படி ஒரு விடுமுறைதினத்தன்று ஸ்ருதியின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்திருந்தனர்.

“சார்...உங்க வசதியைக் காண்பிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. அதுக்காக ஐந்தாம் வகுப்பு படிக்கிற குழந்தைக்கு எதுக்கு சார் இருநூறு ரூபா...எங்க பள்ளி வேன் மூலமா உங்க வீட்டுலயே கொண்டுவந்து விட்டுடுறோம். இல்லன்னா நீங்களே வந்துதான் அழைச்சுட்டு போகணும். அப்புறம் பணத்துக்கு தேவை எங்க இருக்கு?...

உங்கமேலயும் எங்க மேலயும் நம்பிக்கை வைங்க சார்... மிதமிஞ்சிய செல்லம், அளவுக்கு அதிகமான பணம் பிள்ளைகளை திசை மாத்திடும் ”என்று முரளி பேசிய அனைத்தும் மிகவும் நியாயமான கருத்துக்கள் என்பதால் அவர்களால் ஆட்சேபம் தெரிவிக்க இயலவில்லை.

அதே நாளில் வேறொரு நேரத்தில் இருநூறு ரூபாயை எடுத்த மாணவனின் பெற்றோரும் வந்திருந்தார்கள். அதுவும் முரளியின் கோரிக்கைதான்.

“சார்...உங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல இருக்குற பையனால எவ்வளவு பிரச்சனை தெரியுமா? இவனை கேம் சென்டருக்கு அழைச்சுட்டுபோய் வீடியோ கேமுக்கு அடிமையாக்கிட்டான்.”

“சார்...இப்ப அவன்கூட சேரக் கூடாதுன்னு இவனைக் கண்டிச்சுட்டேன். அதுக்கு காசு கூட கொடுக்குறது இல்லை. ”என்றவரின் குரலில் பெருமிதம்.

“சரிதான். முதல்ல அவிழ்த்து விட்டுட்டு இப்ப கட்ட முயற்சிக்கிறீங்க. அதோட விளைவு என்னன்னு தெரியுமா... ஒரு பொண்ணோட இருநூறு ரூபா பணத்தை எடுத்துட்...”என்று முரளி முடிக்கும் முன்பே அவர் தன் மகனை அடிக்கப் பாய்ந்தார்.

“சார்...முழுசா கேளுங்க...”என்ற முரளியின் குரல் அதட்டும் தொனியில் இருந்தது.

மற்றவர்களுக்கு தெரியாமல் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க தான் எடுத்த முயற்சியைப் பற்றிக் கூறியதும், அந்த சிறுவனின் பெற்றோர் கண்களில் மரியாதை தெரிந்தது.

“இப்ப இவனை அடிச்சு உதைக்கிறதால தீர்வு கிடைக்காது.அவன் கவனத்தை நல்ல வழியில திருப்பணும்னா நீங்க தொலைக்காட்சிக்குரிய நேரத்தை குறைச்சுட்டு அவனோட பழகணும்....”என்றதோடு மேலும் சில யோசனைகளை சொன்னான்.

அவர்கள் போனபிறகு சொர்ணாம்பிகா, “மிஸ்டர் முரளி...இந்த சின்ன வயசுலயே இவ்வளவு நிதானமா நடந்துக்க உங்களால எப்படி முடியுது?  ”என்றார்.

“என்னுடைய ஆசிரியர்தாங்க காரணம். அவரோட தண்டனைகளே வித்தியாசமா இருக்கும். பள்ளிக்கூடத்துல இருந்த பூச்செடிகளை ஒருத்தன் சும்மா உடைச்சுப் போட்டான். அடுத்தநாளே விதவிதமா பத்து பூச்செடிகளை நட்டு  அந்தப் பையன்தான் தண்ணி ஊற்றி பராமரிக்கணும்னு சொல்லிட்டாரு. அதுல பூக்குற பூக்களைப் பறிச்சு பூஜையும், திங்கள்கிழமையில தேசியக்கொடி ஏற்றும்போது அதுல வெச்சு கட்டுறதும் அந்தப் பையனோட பொறுப்புதான்.  அதுக்கப்புறம் அவன் பூச்செடிகளை உடைச்சதா எனக்கு நினைவில்லை.

அவ்வளவு ஏன்...நான் கூட எட்டாம்வகுப்பு படிச்சப்ப சார் உட்காருற நாற்காலியை உடைச்சுட்டேன். அவர் என்கிட்ட பணமெல்லாம் கேட்கலை. என் அப்பாகிட்ட சொல்லி ஒரு லீவு நாள்ல பள்ளிக்கூடத்துக்கு அழைச்சுட்டு வந்தாரு. எதுக்குன்னு பார்த்தா, பள்ளிக்கூடத்துல உடைஞ்ச பெஞ்ச், நாற்காலிகளை சரிசெய்ய வந்த கார்பெண்டருக்கு என்னைய ஹெல்ப்பரா ஆக்கிட்டாரு. அவருகிட்ட படிக்க குடுத்து வெச்சிருக்கணுங்க...”என்று முரளி பழைய நினைவுகளில் மூழ்கி விட்டான்.

அதன்பிறகு வந்த நாட்களில் முரளியுடன் பேசக்கூடாது என்றுதான் விஷ்ணுப்ரியா நினைப்பாள். ஆனால் அவனைப் பார்க்காமல் ஒருநாள் கூட இருக்கவே முடியாது என்ற அளவுக்கு அவள் மனம் சண்டித்தனம் செய்யத் தொடங்கியிருந்தது.

சில விடுமுறை நாட்களில் மட்டும் போன் செய்து அவனுடன் பேசிய பழக்கம் வளர்ந்து கொண்டே போனது. சட்டென்று ஒரு நாள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் முரளியிடம் கேட்டுவிடுவது என்று தீர்மானித்துக்கொண்டு போன் செய்தாள்.

ஆனால் அவனே முந்திக் கொண்டு, “உன்னைய கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசைப்படுறேன்...நீ என்ன சொல்ற...”என்றான்.

மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போன விஷ்ணுப்ரியாவால்  சட்டென்று எதுவுமே பேச முடியவில்லை. “இத்தனை நாளா எந்த ஆசைகளும் இல்லாதமாதிரி நடிச்சு என்னைய தவிக்க விட்டுட்டியேடா திருட்டு ராஸ்கல்.”என்று உற்சாகமாகப் பேசினாள்.

அடுத்த நொடியே அவனிடமிருந்து அவளுடைய மகிழ்ச்சியைக் குலைக்கும் விதமான பேச்சு வந்தது.

“ ஆனால் ஆசிரியரா இருக்குறவங்களுக்குன்னு சில சுயக் கட்டுப்பாடு வேணுமே. ஏன்னா பெத்தவங்களுக்கு அடுத்தபடியா ஒருத்தரோட கேரக்டரை தீர்மானிக்கிறது ஆசிரியரோட நடவடிக்கைகள்தான். ”என்று முரளி பேசியதும் விஷ்ணுப்ரியாவால் தன் மன எண்ணங்களை அடக்கிவைக்க முடியவில்லை.

“டீச்சரா இருக்குறதால ஜடம் மாதிரிதான் வாழணுமா...எனக்குன்னு ஆசைகள், உணர்ச்சிகள் இருந்தா அதையயல்லாம் குழிதோண்டிப் புதைச்சிடணுமா?  ” என்று பேசியவளுக்கு அழுகையே வந்துவிட்டது.

“ஹேய்...ப்ரியாக்குட்டி எதையும் புதைச்சுட சொல்லலை. எதுக்கும் இடம், பொருள், ஏவல் உண்டுன்னு சொல்ல வர்றேன். இப்ப நான் பார்க்குற வேலையில நிறைய விஷயம் கத்துக்கிட்டாலும் சம்பளம் இப்ப மட்டுமில்லாம எதிர்காலத்துக்கும் திருப்தியா இருக்காது. அதனால நான் வேற வேலைக்கு முயற்சி செய்யுறேன். அதுல சேர்ந்ததுக்கு அப்புறம்  ‘என்னடி ப்ரியா  ’  ன்னு உன்கிட்ட பேசுற உரிமையை எடுத்துக்குறேன்.”

“அப்ப அதுவரைக்கும்?...”

“வணக்கம் மேடம்...இன்னைக்கு ஸ்டூடண்ட் யாராவது பணம் குடுத்துருக்காங்களா?...எத்தனை ரசீது போடணும்?  ”என்று முரளி பேசியதும் சந்தோ­த்தில் சிரித்த விஷ்ணுப்ரியாவின் கண்களில் ஆனந்தக்கண்ணீர்.

******

வெள்ளி, 5 நவம்பர், 2010

இந்த ஆண்டு தீபாவளி எப்படி?

நேயர்களே... இது ராசிபலன் அல்ல.

ஒரு காலத்துல சின்ன ஊரா இருந்தாலும் அஞ்சு தியேட்டர் இருக்கும். அதுல ரெண்டு அல்லது மூணுலதான் கொஞ்சம் பெரிய பேனர் படங்களா வெளியிடுவாங்க. மற்ற தியேட்டர்கள்ல சாதாரண நாட்கள்ல அஞ்சரைக்குள்ள வண்டி மாதிரியான படங்களைத் திரையிட்டு சமாளிச்சாலும் தீபாவளின்னு வந்துட்டா தியேட்டர் கிடைக்காம முடங்கிக்கிடந்த எதோ ஒரு தமிழ் படத்தை திரையிட்டுடுவாங்க.

ரஜினி,கமல் மாதிரி பெரிய ஆளுங்க படத்துக்கு டிக்கட் கிடைக்காது. சரி அப்படியே வீட்டுக்கு திரும்பி போனா அக்கம்பக்கத்துல இருக்குறவங்க என்ன நினைப்பாங்கன்னு இவங்களா கவலைப்படுவாங்க.(நகரத்துல பெரும்பாலான மக்கள் அடுத்த வீட்டுக்காரனுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நமக்கு என்னன்னுதான் போவாங்க. ஆனா ஒருத்தர் புதுசா வாங்கின பொருள், உடைகள் இது மாதிரியான விஷயங்களை மட்டும் பொறாமையுடன் புறம் பேசுறதை ரொம்ப தெளிவா செய்வாங்க.) இந்த மாதிரி ஆளுங்களுக்களை நினைச்சு ரஜினி படத்துக்குதான் டிக்கட் கிடைக்கலை. எதோ ஒரு படத்தைப் பார்த்துட்டு போவோம்னு எஞ்சியிருக்குற துக்கடா தியேட்டர்ல ஒரு படத்தை பார்த்துட்டு வந்துடுவாங்க. ஆக மொத்தம், சுமாரான தியேட்டர்ல 'பிளாப்' ஆன படத்துக்கும் ஒரு வாரம் நல்ல வசூல் கிடைக்கும்.
 அதெல்லாம் அந்த காலம். இப்போ டிக்கட் கிடைக்கலைன்னா டிவிடியை வாங்கிட்டு வந்துடுறாங்க. இதை நல்லா புரிஞ்சுகிட்ட சன் பிக்சர்ஸ் எந்திரன் படத்தை திரும்பின பக்கமெல்லாம் திரையிட்டு ஒரே வாரத்துல வசூலை மூட்டை கட்டுற மார்க்கெட்டிங் உத்தியை பயன்படுத்திடுச்சு.

நானும் இப்படி தீபாவளி அன்னைக்கே படம் பார்க்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன். அது அவ்வளவு சீக்கிரம் நிறைவேறலை.

1996-ம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி, 1997-தி லாஸ்ட் வேர்ல்டு, 1998-டைட்டானிக், 1999-முதல்வன், 2000-தெனாலி,2001- , 2002-ரமணா, 2003-பிதாமகன். அதோட நான் தீபாவளி அன்னைக்கு படம் பார்க்குறத விட்டுட்டேன். அதுக்கப்புறம் வேலையில பிசியாயிட்டோம்ல. இப்படியெல்லாம் பொய் பேசாத அப்படின்னு சொல்லாதீங்க.

எனக்கு சினிமா மேல இருந்த ஆர்வம் போனதுக்கு முக்கிய காரணம் ஒண்ணே ஒண்ணுதான். தியேட்டர்ல ஆப்ரேட்டருக்கு உதவியாளரா இருந்த கொஞ்ச நாட்கள்லேயே சினிமா மேல இருந்த பிரமிப்பு போயிடுச்சு. ஒருநாள் ஆப்ரேட்டர் திடீர்னு வேலைக்கு வர முடியாத சூழ்நிலையில என்னையே படத்தை திரையிட சொல்லிட்டாங்க. அப்போ எனக்கு பதினஞ்சு வயசு. (தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேல வெற்றி நடை போட்ட அந்த மெஷின் இயக்கம் வழக்கொழிந்து வர்றதால அது பற்றி எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை ஆவணப்படுத்துற விதமா அப்பப்ப பதிவு எழுதுறதா சொல்லி இருந்தேன். நேரமின்மையால சில வாரங்களா சரியா பதிவு எழுத முடியலை. அந்த விஷயங்களை ஒரே பதிவா சீக்கிரம் வெளியிட முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்.)

இப்ப ஒரு நாளிதழ்ல லேஅவுட் டிசைனர் வேலைக்காக புதுசா சேர்ந்துருக்கேன். நான் தனியா பக்கம் வடிவமைக்க எவ்வளவு நாள் ஆகும்னு புரியாம தட்டுத்தடுமாறி பயிற்சி எடுத்துகிட்டு இருந்தேன். திடீர்னு போன வாரம் வழக்கமான கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வாரலீவு போட்டுட்டார். அவருக்கு மாற்று ஆளும் கடைசி நேரத்துல வரலை. உடனே என்னையே 3 பக்கங்கள் வடிவமைக்க சொல்லிட்டாங்க. நெருக்கடியான நேரத்துலதான் நம்மளால என்ன செய்யமுடியும்னு தெரியுது. சந்திரமுகி படத்துல ஒரு பாட்டுல வர்ற வரி...நீருக்குள் அமிழ்த்தப்பட்ட பந்து மேலெழும்பி வந்தே தீரும்.

எல்லா விஷயத்துக்கும் இது பொருந்தும்.

இளைய பாரதத்துக்கு வருகை தர்ற எல்லாருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.