Search This Blog

சனி, 23 அக்டோபர், 2010

......ஒவ்வொருத்தருக்கும் கம்ப்யூட்டர் இலவசம்.

 இதுதான் அடுத்த அறிவிப்பா இருக்கும். தமிழக சட்டமேலவைக்கு தேர்தல் நடத்தியே தீருவதுன்னு பட்டடாரி, ஆசிரியர் தொகுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கிறதுக்கான வேலைகள் தொடங்கிடுச்சு. 

கொஞ்ச நாள் வரைக்கும், 'நம்ம ஆளுங்கதான் ஃப்ரீயா கொடுத்தா பினாயிலைக்கூட குடிப்பாங்க'ன்னு ஒரு சினிமாவுல கவுண்டமணி சொல்ற டயலாக்கை நானும் பேசிக்கிட்டுதான் இருந்தேன்.

இந்த மாதிரி ஒரு தொகுதிக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் சரி பேர் சேர்த்து அடையாள அட்டையை வாங்கித்தான் வெச்சுப்போமே ஒரு ஆசை. ஏற்கனவே எழுத்துப்பிழையோட வாக்காளர் அடையாள அட்டை,அட்ரசுல எழுத்துப்பிழையோட பான் கார்டு, எப்படியோ ஓட்டிக்காட்டி வாங்கின லைசென்ஸ் அப்படின்னு பல கார்டுகளோட இதுவும் இருந்துட்டு போகட்டுமேன்னு முடிவு பண்ணினேன்.

வேலை பார்க்குற இடத்துல ஒரு நண்பர் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு அடிக்கடி போவார். அவர்கிட்ட,' எனக்கு இது பற்றி முழு விவரங்கள் தெரியலை. உங்களுக்கு தெரிஞ்ச ஆளுங்க இருந்தா விவரம் கேட்டு அப்ளிகேஷன் வாங்கிட்டு வாங்களேன். அப்படின்னு சொன்னேன்.

"அடப்போய்யா...ஏற்கனவே சாதாரண வாக்காளர் அடையாள அட்டையை வெச்சு ரொம்ப அதிகமா கிழிச்சுட்டியாக்கும். போய் வேற வேலையைப் பாருப்பா."அப்படின்னு அலுத்துகிட்டார். (நண்பேன்டா) அவரு அந்த அட்டையை வெச்சு எங்கெங்க மூக்குடைபட்டாரோ...பாவம்.

இதுக்கு மேல அடுத்தவங்களை நம்பி சரிவராதுன்னு நெட்டுல விவரங்களை டவுன்லோடு செஞ்சேன்.

முதல் பட்டதாரின்னு ஒரு சான்றிதழ் வாங்குறதுக்காக தாசில்தார் அலுவலகத்துக்கு 2000வது வருஷம் போனது. அதுக்கப்புறம் என் வேலையா அங்கே போனதே இல்லை. வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் கொடுத்தது, போட்டோ எடுத்தது எல்லாமே எங்க வீட்டுக்கு அடுத்த தெருவுல இருந்த வாக்குச்சாவடியிலேயே முடிஞ்சுடுச்சு.

இந்த பத்து ஆண்டுகள்ல அடுத்தவங்க வேலைக்காக ஒண்ணு ரெண்டு தடவை போயிருக்கேன். பொதுவாவே இந்த மாதிரி அரசு அலுவலகத்துக்குப் போனா பெரும்பாலான ஊழியர்கள் 'நான் கடவுள்' தோரணையிலேயே நடந்துக்குறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான்.

இந்த தடவை நமக்கு அப்படி எதாவது இன்சல்ட் நடந்தா அதை அப்படியே சுடச்சுட நியூசாக்கிடலாம்னு ஒரு ஐடியாவோடத்தான் போனேன். (இப்போ ஒரு தமிழ் நாளிதழோட கிளை அலுவலகத்துல வேலை பார்க்குற துணிச்சல்தான். இல்லன்னாலும் இருக்கவே இருக்கு இளைய பாரதம்.)

நிச்சயம் ஒரே நாள்ல வேலை நடக்காது. எத்தனை நாள் அலையணுமோன்னு நினைச்சுகிட்டுதான் 22.10.2010 அன்று ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு போனேன். என்ன ஒரேடியா மட்டம் தட்டுறன்னு கேட்காதீங்க. என் ராசி அப்படி. அவசரமா தீப்பெட்டி வாங்கணும்னு பஸ்ஸ்டாண்ட்ல இருக்குற கடைகளுக்கு போனா கூட அங்க ஸ்டாக் இல்லாம பத்து கடைகள்ல அலைஞ்சுதான் வாங்கணும்.

சுருக்கமா சொன்னா எல்லாரும் ஹாயா லிப்ட்டுல ஏறி மாடிக்குப் போவாங்க. எனக்கு அப்படி போக கொடுப்பினை இருக்காது. மாடிப்படியில ஏறித்தான் போகணும். உடம்புக்கு நல்லதுதானேன்னு கேட்பீங்க. ரெண்டு மூணு மாடின்னா பரவாயில்லை. பத்து மாடிக்கு தினம் பத்து தடவை ஏறி இறங்குறதுன்னா...என்ன ஷாக் ஆகிட்டீங்கிளா. இதுதாங்க என் அதிர்ஷ்டம். எனக்கு பழகிடுச்சு.

22.10.2010 அன்று தமிழ்நாடு கிழக்கு மத்தியம் பட்டதாரி தொகுதி வாக்காளர் பட்டியல்ல என் பெயரை சேர்க்க விண்ணப்பம் கொடுக்க போனேனா...அப்படியே ஷாக் ஆயிட்டேன்.(வடிவேலு மாடுலேஷனில் படிக்கவும்.)

நான் எல்லா ஆவணங்கள், ஜெராக்ஸ் அப்படின்னு ரொம்ப தயாராத்தான் போயிருந்தேன். ஒரு ஊழியர்கிட்ட விபரம் கேட்டதும் கோபப்படாம டக்குன்னு விபரம் சொன்னார்.

அது ஏன்னு எனக்கு தெரியலை.

பொதுவான வாக்காளர் பட்டியல்ல பேர் சேர்க்கணும்னு சிறப்பு முகாம் நாட்கள்ல வாக்குச்சாவடிக்கு போனா தப்பிச்சோம். இந்த மாதிரி அலுவலகத்துக்கு போனா சரியான பதில் கிடைக்காது. ஏன்னா அவங்களுக்கே எப்ப விண்ணப்பம் வாங்கணும்னு தெரியாம இருக்கலாம். அது சரி, கதவைப் பூட்டிட்டு இழுத்துப்பார்க்க கூட மேலதிகாரிகிட்ட அனுமதி வாங்கணும்குற மாதிரி பல விதிகள் காலத்துக்கு பொருந்தாம இன்னும் இருக்குதே.

என்கிட்ட அவர் மரியாதையா பேசினதுக்கு காரணம், நான் பட்டதாரின்னுங்குறதுனாலயா,
இல்ல...ஆசிரியர் தொகுதிக்கு ஒருத்தர் கூட விண்ணப்பம் கொடுக்க வரலை. வேற வேலை வெட்டி இல்லாததால பட்டதாரி தொகுதிக்கு பேர் கொடுக்க இந்த மாதிரி வர்ற யூத்துகளையும் பயமுறுத்தி விரட்டி விட்டுட்டா ஆளில்லா கடையில எப்படி டீ ஆத்துறதுன்னு பயமா.

எனக்கு எதுவும் தெரியலையே.

அஞ்சு நிமிஷத்துல என் விண்ணப்பத்தைக் கொடுத்து துணை தாசில்தார்கிட்ட ஒப்புகை ரசீது வாங்கிட்டு வந்துட்டேன். இப்ப தெரியுதா நான் ஏன் ஷாக் ஆனேன்னு.

இந்த மாதிரி அப்ளிகேஷன் போட்டதை வெளியில சொன்னதும் உன் வேலையை ஒழுங்கா பார்த்தா என்ன...அவனுங்க சம்பாதிக்க நீ உன் நேரத்தை வேஸ்ட் பண்ணி இப்படி அலையுறியான்னு கேட்டாங்க.

பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகள்ல இருக்குற வாக்காளர் எல்லாருக்கும் கம்ப்யூட்டர் இலவசம். அப்படின்னு அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யப்பட ஒண்ணும் இல்லை. ஏன்னா தமிழ்நாட்டோட நிலைமை அப்படின்னு நான் சொன்னதும் அவங்களும் யோசிக்கத் தொடங்கிட்டாங்க.

அப்புறம் ஏதாவது ஒரு நிதி 3G அல்லது 4G வயர்லெஸ் இண்டர்நெட் சேவை நிறுவனம் ஆரம்பிப்பார். இலவச கம்ப்யூட்டர் வாங்கின எல்லாரும் சும்மாவா வெச்சிருப்பாங்க...இணைய இணைப்பு வாங்கி வருஷத்துக்கு பத்து பதினஞ்சாயிரமாவது பில் கட்ட மாட்டாங்களா?

இந்தியன் படத்துல ஒரு வசனம். மற்ற நாடுகள்லயும் லஞ்சம் இருக்கு. ஆனா அங்க கடமையை மீறத்தான் லஞ்சம். இங்கதான் கடமையை செய்யவே லஞ்சம்.

பப்ளிக்கே அப்படித்தான் இருக்காங்க. அப்படி இருக்கும்போது அரசியல்வியாதிங்களை எப்படி முதல் குற்றவாளியாக்குறது.

வியாழன், 21 அக்டோபர், 2010

தினமலர்-வாரமலர் டி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டி 2010ல் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை - காதல்

கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால்தான் தாயைப் படைத்தான் என்று சொல்வார்கள். ஆனால் பெருகி வரும் முதியோர் இல்லங்களுக்கும் சிதைந்து வரும் குடும்ப உறவுகளுக்கும் முக்கிய காரணமாக இருப்பது ஒரு பெண்தான்...இல்லை...தாய்தான்.(மாமியாரோ மருமகளோ...அவளும் ஒரு தாய்தானே.)

நம் நாட்டில் உள்ள வளங்கள் உலக மக்கள் எவ்வளவு பேர் என்றாலும் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும். ஆனால் ஒரே ஒரு மனிதனி ஆசைகளைக்கூட நிறைவேற்ற போதாது என்று காந்தி சொல்லியிருக்கிறார். ஒரு மனிதனின் ஆசையையே நம் நாட்டில் உள்ள மொத்த வளங்களால் பூர்த்தி செய்ய முடியாது என்றால் பேராசையை சாதாரண வருமானம் உள்ள ஆணால் எப்படி நிறைவேற்ற முடியும்?... இந்தச் சிக்கலின் காரணமாக ஏற்பட்டதுதான் பல குடும்பங்களில் வயதானவர்களைக் கழித்துக் கட்டும் அவலம்.

பழங்காலத்தில் அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு கொஞ்சம் ஓவராகவே சகித்துக்கொண்டு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இப்போது பல ஆடம்பரத் தேவைகள் அத்தியாவசிய தேவைகளாக நாம் விரும்பியோ நம் மீது திணிக்கப்பட்டோ விட்டன. இதனால்தான் வீட்டில் உள்ள வயதானவர்களை கூடுதல் சுமையாக பலரையும் நினைக்க வைத்திருக்கிறது.

சுருக்கமாக சொன்னால் சுயநலம் - நம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. பரிசுபெற்ற கதையின் கரு எனக்குத் தோன்றக்காரணமான சிந்தனைகள்தான் இவை.
கதையின் நடை எனக்கே முழு திருப்தியளிக்கவில்லை. ஆனால் நான் கதைக்காக தேர்வு செய்திருக்கும் கருவின் வலிமைதான் எனக்கு இந்தப் பரிசைப்பெற்றுத் தந்திருக்கிறது என்பது என் கருத்து.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

ரூபாய் ஐந்தாயிரம் பரிசு பெற்ற சிறுகதை - காதல்

இப்போது பலரும் தன் பிள்ளைகள் கொடுமைப்படுத்தி சாப்பாடு போட மறுக்கிறார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கச்செல்கின்றனர். இந்த சூழ்நிலைக்கு சம்பந்தப் பட்ட பெற்றோர்களே பல நேரங்களில் தங்களின் துன்பத்திற்கு காரணமாகின்றனர் என்று என் மனதில் தோன்றிய கருத்தை வைத்து எழுதிய சிறுகதை.



சுயநலமே உலகம் என்று ஆகிவிட்ட நிலையில் தனக்கு மிஞ்சிதான் தான தர்மம் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பது அவசியமே என்பது என்னுடைய கருத்து. தன்னுடைய பிள்ளைகளாக
இருந்தாலுமே!

புத்தகத்தில் பிரசுரமான கதையின் பக்கங்களை விரைவில் பதிவேற்றுகிறேன்.