Search This Blog

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

வன்முறை ஒருபோதும் தீர்வு ஆகாது

கிருஷ்ணகிரி அருகே உள்ள பள்ளியில் அந்த கல்வி நிறுவனத்தின் பேருந்து மோதி மாணவன் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தின் ஓட்டுநருக்கு உரிமம் இல்லை, அதிகவேகம், பிரேக் இல்லை என்று பல வித செய்திகள் பரவி வருகின்றன. இதில் எது உண்மையோ இல்லையோ, அந்த மாணவன் இந்த உலகத்தில் இல்லை என்பது மட்டும் கலங்க வைக்கும் உண்மை.

பணம் கட்டாத மாணவனை வகுப்புக்குள் விடாமல் திருப்பியனுப்பியிருக்கிறார்கள். அவன் பணம் வாங்கி வருவதற்காக வீட்டுக்கு திரும்பிய நேரத்தில்தான் விபத்து நடந்திருக்கிறது என்பது வெளியில் சொல்லப்படும் செய்தி. கல்வி கடை வியாபாரமாக்கிவிட்டதன் மிகச் சிறிய எதிரொலிதான் இது. தன்னால் பணம் கட்ட சிரமமாக இருக்கும் என்று தெரிந்தும், அரசுப்பள்ளிகள் அல்லது வேறு பள்ளிகளை நாடாமல் இந்தப் பள்ளியில் தன் மகனை சேர்த்தது அந்த தந்தையின் தவறா?

பல அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்க விடாமல் வைத்திருப்பது அரசின் தவறா?

மாணவன் இறந்த சிறிது நேரத்திலேயே பள்ளிக்கூடத்தை சூறையாடியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்தப் பள்ளியின் மீது கோபம் என்பது மட்டும் தெரிகிறது.

வீட்டில் பிள்ளையை அடித்து அல்லது கண்டித்து வளர்க்கவில்லை என்றால் அதை வெளியில் யாராவது செய்வார்கள். நமக்கு நாமே சுயக்கட்டுப்பாடு செய்துகொள்ளவில்லை என்றால் காவல்துறையினர் அந்தப் பணியை நிறைவேற்றுவார்கள்.

நாட்டில் தொண்ணூறு சதவீத பள்ளிகள் ஏதோ ஒரு விதியை மீறிதான் செயல்பட்டு வருகின்றன.அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டிய அரசு மவுனமாக இருப்பதால்தான் மக்கள் வாய்ப்புக் கிடைக்கும்போது இம்மாதிரியான வன்முறையில் இறங்கி விடுகிறார்கள்.

இதை நான் நியாயப்படுத்தவே இல்லை. அரசுப்பள்ளிகளை தத்தளிக்கவைத்துவிட்டு தனியார் பள்ளி முதலாளிகளின் வருமானத்துக்கு மறைமுகமாக உடந்தையாக இருப்பது யார் குற்றம்?

தனியார் பள்ளிகள் எப்படி வேண்டுமானாலும் கொள்ளை அடித்துச் செல்லட்டும். நாட்டில் ஏழைகள் கல்வி கற்க அரசுப்பள்ளிகள் உருப்படியாக செயல்பட வைப்பதை அரசு தன் கடமையாக அல்லவா செய்ய வேண்டும்.

ஒரு மாணவனின் உயிர் போனது யாராலும் ஈடு செய்ய முடியாத இழப்புதான். ஆனால் அதற்காக பள்ளியை நாசமாக்கி சான்றிதழ்களை எரித்து மிக அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதேல்லாம் மன்னிக்கவே முடியாத குற்றம்.

இப்போதெல்லாம் படித்து நல்ல பணியில் இருப்பவர்கள் கூட குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறார்கள். முதலில் பாமரன் முதல் படித்தவன் வரை சாலை விதிகளை மதித்து விபத்து இல்லாத உலகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு பயணத்தை தொடங்குவோம்.இது உடனடியாக சாத்தியம் இல்லை என்று எனக்கும் தெரியும். அப்படி உடனடியாக நடந்து விடுமா என்று நினைத்திருந்தால் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்க வேண்டும்.

இப்படியா நம்முடைய வசதிக்காக கண்டறிந்த வாகனத்தால் நம் உயிரையே அழித்துக் கொள்வது?

இப்படி எதாவது ஒரு சம்பவம் நடந்தால் பதிவு எழுதத்தான் உனக்கு தெரியும். வேற என்ன செய்யுற அப்படின்னு நீங்க கேட்கலாம்.சைக்கிளோ, மோட்டார் சைக்கிளோ...அவற்றை சாலைவிதிகளை மதித்து இயக்கி வருகிறேன். பார்க் செய்யும்போது அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் நிறுத்துவேன். ஏதோ என்னால் முடிந்தது.

சனி, 11 செப்டம்பர், 2010

செப்டம்பர் 11 - ஒரே நாள் - எவ்வளவு சம்பவங்கள்?

இந்த நாள் வந்தாலே இளைய தலைமுறைக்கு அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட அந்த பயங்கரம்தான் நினைவுக்கு வரும்.ஒட்டுமொத்தமாக பல ஆயிரம் மனிதர்களைக் காவு வாங்கிய நாள் மட்டுமல்ல இது.
ஒவ்வொரு இந்தியனையும் மன ரீதியாகவும் உடல்ரீதியாகவும் நசுக்கிய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான சுதந்திரப்போராட்டம் தொடர்பான சில சம்பவங்களையும் இந்த நாள் உள்ளே வைத்துக்கொண்டிருக்கிறது.
செப்டம்பர் 11 பயங்கரவாதத்தின் நாள் மட்டுமல்ல. அது வன்முறைக்கு சற்றும் இடமளிக்காத அறப்போரின் நாளும் கூட. 1906ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியரும் அரசிடம் தங்களைப் பதிவு செய்துகொண்டு சான்றிதழ் பெற வேண்டும். அப்படிப் பெறாதவர்கள் குடியுரிமையை இழந்து விடுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் சத்தியாகிரகம்.அந்தப் போராட்டத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று கேட்டு காந்தி தன் 'ஒபீனியன்' பத்திரிகையில் ஒரு போட்டி நடத்தினார்.அந்தப் போட்டியில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல், 'சதாகிரக' என்பது. ஒரு நல்ல விஷயத்தில் உறுதி என்று அந்தச் சொல்லுக்குப் பொருள்.அதை சத்தியாகிரக என்று காந்தி மாற்றினார். சத்தியத்தின் சக்தி என்று பொருள்.அந்த நாள் செப்டம்பர் 11.

விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய தினமும் செப்டம்பர் 11தான்.
தமிழ் நாட்டில் செப்டம்பர் 11ஆம் தேதி பாரதியார்தினமாக கொண்டாடப்படுகிறது. அது அவரது பிறந்த தினமல்ல. இது பாரதி மறைந்த தினம்.

(நன்றி: புதியதலைமுறை - 16.09.2010  இதழ்)
 சென்னை - திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லத்துக்கு நான் ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன்.பா.ஜ பிரபலம் இல.கணேசன் நடத்திவரும் பொற்றாமரை இலக்கிய இதழின் முதலாம் ஆண்டு விழாவில் (2006 ஜூலை மூன்றாவது வாரம்) நானும் கலந்து கொண்டேன். சரித்திர நாவலாசிரியர் கவுதமநீலாம்பரன், கவிஞர் வாலி உட்பட இன்னும் சில பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.
அந்த விழாவில் கவிஞர் வாலி, தான் பாரதியின் இந்த நினைவு இல்லத்திற்குள் நான் இப்போதுதான் வருகிறேன் என்று சொன்னார். இவ்வளவு பெரிய மனுஷர் சென்னையிலேயே பல ஆண்டுகாலம் இருந்தும் எழுபத்தைந்து வயதில்தான் இந்த நினைவு இல்லத்திற்குள் வந்திருக்கிறார்.

 நான் திருவாரூரில் இருந்தாலும் என்னுடைய இருபத்தைந்தாவது வயதிலேயே வந்துவிட்டேனே என்று சின்னபுள்ளைத்தனமா நினைத்ததுண்டு.

பாரதி திரைப்படம் வெளிவந்தபோது தொலைக்காட்சி டிரெய்லர்களில் படக்காட்சிகளின் பிண்ணனியில் "பாரதி.....ஒரு கவிஞனின் கதை..."என்ற குரல் மிகவும் வசீகரமாகவும் ஒரு கம்பீரத்துடனும் ஒலிக்கும். இந்தக் குரலுக்காகவே அந்த டிரெய்லரை நான் அடிக்கடி பார்த்ததுண்டு. அந்தக் குரல், எழுத்தில் நான் படித்த பாரதியின் கம்பீரமான குரலாகவே கற்பனை செய்ய வைத்தது.
******
இன்று விநாயகர் சதுர்த்தி. எனக்கு இறை நம்பிக்கை உண்டு. எங்கள் பகுதியில் இருந்த ஆலயத்தை புதுப்பித்துக் கட்டி வருகிறோம். இந்த ஆலய உருவாக்கத்தில் என்னுடைய பொருள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஆனால் உடலுழைப்பு நிறையவே உண்டு.

சுமார் ஏழு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் துவங்கிய திருப்பணி வேலைகள் எண்பது சதவீத அளவில் நிறைவடைந்து விட்டன. தரை,இரும்புக்கதவு மற்றும் கிரில்கள்,பெயிண்டிங் வேலைகள் மட்டுமே பாக்கி. சிற்ப வேலைகள் அதிவிரைவில் நிறைவடைந்தது எங்களுக்கு மட்டுமல்ல, அந்த வேலைகளை செய்த சிற்பக்கலைஞர்களுக்குமே வியப்புதான்.

பொதுவாகவே எல்லா ஆலயங்களிலும் இம்மாதிரியான திருப்பணி வேலைகள் நடைபெறும்போது சிற்பவேலைகள்தான் நிறைவடையாமல் ஆண்டுக்கணக்கில் இழுத்துக்கொண்டே செல்லுமாம். ஆனால் பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயத்தின் விமானத்தில் மூன்று நிலைகளில் இருபத்தியிரண்டு சிற்பங்கள் வேலைகள் பூர்த்தியாகி விட்டன. ஆனால் சிற்பக்கலைஞர்கள் இல்லாமல் கட்டிடக் கலைஞர்களை மட்டும் வைத்து செய்துவிடக்கூடிய சில வேலைகளால் திருப்பணி தாமதமாகிக்கொண்டிருக்கிறது. (பொருளாதாரமும் ஒரு காரணம்.)

தற்காலிகமாக பிள்ளையாரை வில்வ மரத்தடியில் கொண்டு சென்று வைத்துவிட்டோம். அந்த இயற்கையான குளிர்ச்சி அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது என்று நினைக்கிறோம்.

******
விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான்.
கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர்.

அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, "பிள்ளையார்' என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். "என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா?' எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார்.

அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.

யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத் தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.

விநாயகருக்கு, "சுமுகர்' என்ற பெயருண்டு. "சு' என்றால் மேலான அல்லது "ஆனந்தமான' என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார்.

(நன்றி:தினமலர்-வாரமலர் 5.09.2010)



புதன், 8 செப்டம்பர், 2010

நடிகர் முரளி - திடீர் மரணம் - என் நினைவிற்கு வந்தவை...

எனக்கு சினிமா மீதும் நடிகர்களின் நடவடிக்கை குறித்தும் பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் உண்டு.ஆனால் இந்த பதிவில் அவற்றைப் பற்றி எழுதவில்லை.
ஒரு திரைப்பட விழாவில்,நடிகர் சத்யராஜ் "ரொம்ப வருஷமா முரளி காலேஜ் போய்கிட்டே இருக்கார். தமிழக முதல்வரிடம் சொல்லி பாஸ் போட சொல்லணும்ப்பா."என்று கிண்டலாக சொன்னார். இந்த செய்தியைக் கேட்டதும் அனைவருக்கும் சிரிப்புதான் வரும்.

இவர் பெரும்பாலான படங்களில் காதல் ஹீரோவாகவே அறியப்பட்டார்.அதிரடி சண்டைக்காட்சி உள்ள படங்களில் அதிகமாக நடித்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

அதர்மம்

அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்று அதர்மம்.நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது (1994 என்று நினைக்கிறேன்.) வந்த படம். வீரப்பன் கதை, படத்தின் பின் பகுதியில் அடர்ந்த காடுகள்தான் கதைக்களம் என்று இருந்ததால் என்னை அந்த வயதில் அதிகமாகவே கவர்ந்த படம்.
சின்ன பசங்க நாங்க

இந்தப் படமும் என்னுடைய மிகச் சிறிய வயதில் பார்த்ததுதான்.ரேவதி வாயசைக்கும் "என்ன மானமுள்ள பொண்ணு என்னு மதுரையில கேட்டாக..."பாடலும் வலிப்பு நோய் வந்த சார்லியின் கையில் கத்தியைக் கொடுத்து அவர் கையாலேயே அவரை வில்லன்கள் சாக வைப்பதும் அந்தப் படத்தைப் பொறுத்த வரை என் நினைவுக்கு வரும் விஷயங்கள்.
அவர் நடித்த பல திரைப்படங்களை சேட்டிலைட் தொலைக்காட்சி ஒளிபரப்பில் பார்த்ததுதான். சமுத்திரம்,ஆனந்தம் ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் உறுத்தாத நடிப்பு என்று சொல்லலாம்.

பொற்காலம்-1997

இந்தப் படம் எங்கள் ஊர் திரையரங்கம் ஒன்றில் தீபாவளிக்கு ரிலீசாகி, பொங்கல் வரை சுமார் எழுபத்தெட்டு நாட்கள் திரையிடப்பட்டது. அப்போது நான் அந்த திரையரங்கில் ஆப்ரேட்டர் அசிஸ்டெண்ட்டாக இருந்தேன்.
படத்திற்கு இசை தேவா.

சேலையின் பெருமை சொல்லும் சிகப்புக் கலரு பாடல்,

சிற்பமாகும் மண்ணின் வளத்தைக் கூறும் தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல்,
பச்சைப் பசேல் என்று காட்சியளிக்கும் வயல்வெளிகளில் பாடல்கள் படமாக்கப்பட்ட காலகட்டத்தில், வறட்சியின் குறியீடான கருவேலங்காட்டை களமாக்கி கதாப்பாத்திரங்களின் சூழ்நிலையை உணர்த்தும் பாடல், உடல் ஊனம் ஒரு குறையே இல்லை என்று நெத்தியடியாய் சொன்ன பாடல் என்று படத்தில் இருந்த நாலு பாடல்களும் (கேசட்டில் ஐந்து) ஆழமான கருத்துள்ளவை.

பொறுப்பில்லாத தந்தையாக மணிவண்ணன். இப்படி ஒரு அண்ணன் நமக்கு கிடைக்கமாட்டானா என்று எல்லா பெண்களையும் ஏங்க வைத்த கதாபாத்திரமாக முரளி நடித்திருந்த பொற்காலம் படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.

என்னதான் தங்கையின் மீது பாசமழை பொழிந்தாலும் அடி மனதில் அவனும் மற்றவர்களைப் போன்ற மன ஓட்டம் உள்ளவன்தான் என்ற வெளியில் தெரியாத, சாதாரணமாக நாம் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மையை வடிவேலு கதாபாத்திரத்தின் வசனம் மூலமாக சாட்டையடியாய் வெளியே கொண்டு வந்திருந்தார் இயக்குனர் சேரன்.

எனக்குப் பல வாழ்வியல் உண்மைகளை உணர்த்தியதுடன், யதார்த்த உலகத்தையும் மனிதர்களையும் எடைபோட கற்றுக் கொடுத்தது இந்த படம்.

ஒருவன் கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்க்கும் புகழ், சொத்து ஆகியவற்றை அவனது வாரிசுகளும் அனுபவிப்பது இயற்கை. அந்த வகையில், தனது மகனை ஹீரோவாக்கி அழகு பார்த்துக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் மரணமடைதல் என்பது யாரையும் கலங்கடிக்கும் சம்பவம்தான்.
தினக்கூலித் தொழிலாளியாக அல்லது மிகப்பெரிய அதிகாரி என்று எந்த ஒரு மனிதனாக இருந்தாலும், நாற்பத்தைந்து வயது முதல் ஐம்பது வயதுக்குள் மரணமடையும்போது மிக மோசமான அதிர்ச்சியை அளிக்கும். மற்ற வயதில் மரணமடைந்தால் அதிர்ச்சி வராதா என்று நீங்கள் கேட்கலாம். நான் சொன்ன இந்த வயது,மகன் அல்லது மகளின் கல்வி, திருமணம் தொழில் என்று ஒருவனின் வாரிசுகளுக்கு எதிர்காலத்தை தீர்மானிக்கும் அல்லது அதை செயல்படுத்தும் காலகட்டத்தில் ஒருவன் இருக்கும் வயது என்ற காரணத்தால்தான்.
மற்றபடி யார் சொல்லும் ஆறுதல் வார்த்தைகளும் முரளியின் குடும்பத்தாரை முழுவதுமாக சோகத்தின் பிடியில் இருந்து மீட்டு வந்துவிடாது. காலம்தான் அதை செய்யும்.