Search This Blog

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ஆவதும் பெண்ணாலே...அழிவதும் பெண்ணாலே...

இந்த தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த்திரைப்படம் வந்திருக்கிறது.கதையின் நாயகன் மன்சூர்அலிகான் என்று நினைக்கிறேன்.அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை.

பழமொழியைப்போல் சொல்லப்பட்ட இந்த வாக்கியத்தில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று யோசித்துப்பார்த்தேன்.என் அறிவுக்கு எட்டிய அளவிலும் சரி, அனுபவத்திலும் சரி...உண்மை சுடுவதாகத்தான் இருக்கிறது.

நான் வேலை செய்யும் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண் வேலையை விட்டு விலகிவிட்டார்.அதற்குக் காரணம், என்னைப் பொறுத்தவரை அற்பமாகத்தான் தெரிகிறது.

அலுவலகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் ஏற்பட்ட காலதாமதத்தை சரிசெய்யவேண்டும் என்றால் அந்தப் பெண் செய்யும் வேலைகளை வரிசை மாற்றி செய்ய வேண்டும். இதைத்தான் மிகச் சாதாரணமாக மேலதிகாரி சொன்னார்.

கடைநிலை ஊழியர்கள் இரண்டு பேர், தங்களுக்குரிய ஸ்டேட்மெண்ட்டைத்தான் முதலில் தயார்செய்து தரவேண்டும் என்று அந்தப் பெண்ணிடம் அன்புத்தொல்லை கொடுத்து இவ்வளவு நாளும் வாங்கிக்  சென்றுகொண்டிருந்தார்கள்.

இப்போது யார் பேச்சைக் கேட்பது என்று குழம்பிய அந்தப்பெண் வியர்த்து விறுவிறுத்து ஒரு பாட்டில் தண்ணீர் குடித்து அழுது கொண்டே அந்த நேரத்துடன் வேலையை விட்டுச் சென்றுவிட்டார்.(இதற்கு முன்னோட்டமாக சக ஊழியைகள் இருவருடன் ஏற்படும் சிறு மனஸ்தாபத்திற்கே கண்ணீர் வடித்தவர்தான் இவர்.)
இந்த வேலையை இப்படித்தான் செய்ய வேண்டும், அதை விட்டு விட்டு நீங்கள் சொல்வதுபோல் மாற்றினால் இந்த மாதிரியான சிக்கல்கள் வரும் என்பது மாதிரியான சூழ்நிலைகள் ஒவ்வொரு அலுவலகத்திலும் இருக்கும். இதைத் தெளிவாக மேலதிகாரியிடம் பேசும் துணிச்சல் இருக்க வேண்டும். அதற்கு சாத்தியமில்லாத துக்ளக் தர்பார் நடக்கும் இடம் என்றால் அவர்கள் சொல்வது படி செய்துவிடுவது உத்தமம். ஏதாவது சொதப்பலானால் சொன்னவரைக் கைகாட்டிவிட்டு நாம் நல்ல பிள்ளையாக வேடிக்கை பார்க்கலாம்.

இந்த இரண்டு நிலைகளிலும் இல்லாமல் பிரச்சனைகளைக் கண்டு அழுதுகொண்டு ஓடிய அந்தப் பெண் ஒரு பொறியியல் பட்டதாரி. இந்தப் பெண்ணுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் மாத சம்பளம் கொடுத்த இடத்திலேயே சிறிய காரணத்தால் அழுதுகொண்டு வேலையை விட்டு விலகிய இவர் பல ஆயிரங்கள், லட்சங்கள் என்ற அளவில் ஊதியம் கிடைக்கும் இடத்திற்கு வேலைக்கு சென்றால் அங்கு இருக்கும் வேலைப்பளு,
ஊழியர்களுக்கு இடையில் இருக்கும் அரசியல், வேறு சில சிக்கல் என்று அனைத்தையும் எப்படி சமாளிப்பார்?
யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ் வேலையில் சொதப்பியவுடன் அவரது டிரெய்னரான நயன்தாராவை அந்த டீம்லீடர் திட்டுவார். அதைத் தாங்க முடியாமல் நயன்தாரா அழுததும் எனக்கும் அழுகை வந்தது.(அவ்....)

இந்த மாதிரியான கடுமையான வார்த்தைகள் எதுவும் இல்லாமல் பணி வரிசையில் சில மாற்றங்கள் சொன்னதையே தாங்க முடியாமல் வேலையை விட்ட அந்தப்பெண் போல நிறைய ஆண்களும் இருக்கலாம். படிப்பு மட்டும் ஒருவருக்கு எல்லா விஷயத்தையும் கற்றுத்தந்துவிடாது என்பது எனக்குப் புரிஞ்சுடுச்சு.

திரைப்படத்துறையில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளரான காலம்சென்ற ஏ.வி.மெய்யப்பன் அவர்களைப் பற்றிய நூல் ஒன்றில் என்னைக் கவர்ந்த விஷயம் ஒன்று எல்லாருக்குமே பொருந்தும் என்று நினைக்கிறேன்.

எந்த ஒரு செயல் அல்லது விஷயத்தை நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும். அப்படி இல்லாமல் அது சரியாக வராது என்று நீங்கள் கருதினால் அதை அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் காரணம் கூற வேண்டும்.சுருக்கமாக சொன்னால் சமாதானமாகு அல்லது சமாதானப்படுத்து. அவ்வளவுதான் வெற்றியின் ரகசியம்.
நான் இந்தப் பதிவின் மூலம் சொல்வதும் இதுதாங்க.முடியும் அல்லது முடியாது என்ற இரண்டு நிலையில் எதாவது ஒரு முடிவில் தெளிவாக இருக்கவேண்டும்.அதை விட்டு விட்டு விலகி ஓடினால் எவ்வளவு விஷயங்களுக்கு எவ்வளவு தூரம், எத்தனை நாள்தான் ஓட முடியும்?

இப்படி அதிரடி முடிவு எடுக்காமல் மழுப்பலாக இருந்து காலத்தின் போக்கில் சரியாகும் என்று விடக்கூடிய சூழ்நிலைகள் குடும்பத்திலும் பொதுவாழ்விலும்  இருக்கும். அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.

சமாதானமாகு அல்லது சமாதானப்படுத்து - இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். குடும்பத்திலும் அலுவலகத்திலும் வெற்றியைத்தரும் ஃபார்முலாக்களில் இதுவும் ஒன்று.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

இரண்டரை லட்ச ரூபாய் போச்சே!...இந்திய ரூபாய்க்கான புதிய குறியீடு வடிவமைப்பு

ஊரோட ஒத்துப்போகாம எப்ப பார்த்தாலும் நீதி,நேர்மை,நடுநிலைமை அப்படின்னு பேசி வாய்ப்புக்களை இழக்குறதே அவனுக்கு வழக்கமாப் போச்சு.(அவன் வேற யாரு...நாந்தேன்.)
எல்லா விஷயத்துலயும் அயல்நாட்டு ஐடியாவைத்தான் சுடணுமான்னு ரொம்பவே யோசிச்சு நானே ஒரு குறியீட்டை வடிவமைச்சு போட்டிக்கு அனுப்புனேன்.

நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 1
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 2
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 3
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 4
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 5

தமிழகத்தைச்சேர்ந்த ஒருத்தர் வடிவமைச்ச குறியீடு தேர்வு செய்யப்பட்ட விஷயம் தெரிஞ்சதும் முதல்ல பெருமையாத்தான் இருந்துச்சு.ஆனா தொடர்ந்து வந்த தகவல்கள்,நான் எந்த அளவுக்கு விஷயம் தெரியாம இருந்துருக்கேன்னு வேதனைப்பட வெச்சது.

என்னோட வடிவமைப்பு எழுதுறதுக்கு கடினமா இருந்ததாலயோ, வேற காரணங்களாலயோ நிராகரிக்கப்பட்டிருந்தா பெருமையா இருந்துருக்கும்.ஹிந்தி தேசிய மொழியா அங்கீகரிக்கப்பட்ட ஒரே காரணத்தால அதை அடிப்படையா வெச்சி உருவாக்கப்பட்ட குறியீடு ஏக மனதா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கு.

இது உதயக்குமாருக்கு சாத்தியமாகக் காரணம் அவருக்கு ஹிந்தி தெரிஞ்சதாலதான்.

என்னுடைய வருத்தம் என்னன்னா, தமிழ்-ஆங்கிலம் ஆகிய மொழிகள்ல நான் கொடுத்த விளக்கம் யாருடைய கவனத்துக்கும் போகாமலேயே நிராகரிக்கப்பட்டிருக்கலாமோன்னுதான்.

ஹிந்தியை எதிர்க்குறோம்னு சொல்லி பல மத்திய அரசுப்பணிக்குரிய வாய்ப்பை நமக்கு கடினமாக்கி வெச்சிட்டாங்க. இப்போ இது மாதிரியான சாதனை முயற்சிகள் ஹிந்தி தெரியாத காரணத்தால வெளி உலகத்துக்கு தெரியாமலேயே போகுது. இந்த அவல நிலையை நினைச்சு பெருமூச்சு விடத்தான் முடியும். வேற என்ன செய்யுறது?

பத்திரிகையாளர் 'ஞாநி' ஓ பக்கங்களை குமுதத்தில் படிச்சதும் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. நான் வடிவமைச்ச குறியீட்டுக்கு  தேர்ந்தெடுக்கப்பட தகுதியில்லாம இருக்கலாம்.ஆனா நான் அதுல என்னென்ன விஷயங்கள் இருக்கணும்னு நினைச்சு உருவாக்குனேனோ அந்த கொள்கைகள் நடுநிலையானவைன்னு புரிஞ்சுடுச்சு.

நீங்களும் இந்த பக்கங்களைப் படிச்சுட்டு அமைதியா யோசிச்சுப் பாருங்க. உண்மை புரியும்.

ஆனா ஒண்ணுங்க...ரூபாய் நோட்டுல பதினெட்டு மொழிகள் இருக்கேன்னு பெருமையா நினைச்சு தமிழ்,ஆங்கிலத்துல மட்டும் விளக்கம் அனுப்பினது எவ்வளவு முட்டாள்தனம்னு நல்லாவே புரிஞ்சுகிட்டேன்.
வெட்டி நியாயம் பேசாம ஹிந்தி கத்துகிட்டா பல விஷயங்களுக்கு நல்லது.இல்லன்னா நம்மை இந்த நிலையில வெச்சிருக்குற அரசியல்வாதிகளோட புள்ளைங்க ஹிந்தியைக் கத்துக்கிட்டு வெளுத்து வாங்கிகிட்டு இருக்குறதை கட்டியிருக்குற கோவணத்தையும் இழந்துட்டு நாம வேடிக்கை பார்த்துகிட்டே இருக்க வேண்டியதுதான்.

ஓ பக்கங்கள் 1
ஓ பக்கங்கள் 2
ஓ பக்கங்கள் 3
ஓ பக்கங்கள் 4
ஓ பக்கங்கள் 5

வியாழன், 15 ஜூலை, 2010

திருவாரூரில் திருவிழா

வீட்டுக்கும் நாட்டுக்கும் திருவிழா என்பது அவசியம்.சில துறைகளில் பணி புரிபவர்கள் வேலை முடிந்தால் உறக்கம், பாதி உறக்கத்தில் சிரமப்பட்டு எழுந்து மீண்டும் வேலை என்ற இயந்திரத்தனமான வாழ்க்கை சூழலில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.இதனால் உறவுச் சிக்கலில் இருந்து உடல்நலம் வரை எவ்வளவு பாதிப்பு என்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
உறவினர் வீட்டில் விசேஷம் அல்லது அவர்கள் இருக்கும் ஊரில் திருவிழா என்ற ஒரு சில காரணங்களால்தான் நாம் மற்றவர் வீட்டுக்குச் சென்று சில மணி நேரங்களாவது இருந்துவிட்டு வருகிறோம்.(அடுத்தவர் வீட்டில் முகாமிட்டே வாழ்க்கையைக் கழிப்பவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.)

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் அடிமையானபிறகு யார் வீட்டுக்காவது செல்லலாம் என்று யோசிப்பதற்கே தயக்கமாக இருக்கிறது.நிழல் கதாபாத்திரங்களின் மேல் உள்ள ஆர்வத்தில் நிஜ வாழ்க்கையின் உறவுகளை உதாசீனப்படுத்தும் போக்கு பலரிடம் இருப்பதை மறுக்கமுடியாது.
மனிதர்கள் தனித்தீவாகி விட்ட இன்றைய காலகட்டத்தில் ஓரளவாவது சக மனிதர்களிடம் சற்று ரிலாக்சாக பழக முடிகிறது என்றால் அது மிக நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் இல்ல விழாக்களில் மட்டும்தான்.

அதிலும் பல விசேஷங்களுக்கு மிகச் சரியாக விழா நேரத்தில் சென்றுவிட்டு யாரும் கவனிக்கவில்லை என்று புலம்புவது பலருக்கும் வாடிக்கையாகிவிட்டது.ஒரு விழா என்றால் குறைந்தது ஆறுமணி நேரம் முன்பாகவாவது சென்று அங்குள்ள பணிகளை கொஞ்சமாவது பகிர்ந்து கொண்டால் அனைவருக்கும் கொண்டாட்டமாக இருக்கும்.

எல்லாரும் இப்படி வருவது சாத்தியமில்லைதான்.விழாவுக்கு அழைத்தவர்களில் ஒரு சதவீதம் பேர் அந்த பொறுப்புகளை பகிர்ந்துகொள்ள வந்தாலே போதும்.விழா நடத்தும் வீட்டில் உள்ளவர் மற்ற அனைவரையும் ஒரு புன்னகையுடனாவது எதிர்கொண்டு அழைக்க முடியும்.

(இந்த அவசர யுகத்துல இதுக்கெல்லாம் சாத்தியமில்லை அப்படின்னு நிறைய பேர் கண்டிப்பா சொல்லத்தான் போறாங்க.)
ஒவ்வொரு நாளும் மற்றுமொரு நாளே அப்படின்னு போய்கிட்டு இருந்தா அதுல எந்த சுவாரஸ்யமும் இல்லை.பண்டிகை, திருவிழா இதெல்லாம் ஊருக்கும் நாட்டுக்கும்னா, பிறந்தநாள், திருமணநாள் கொண்டாட்டங்கள் வீட்டுக்கு.இதெல்லாம் என்ன தெண்ட செலவுன்னு உங்கள்ல பலர் நினைக்கலாம்.
அதுக்கு ஆகுற செலவை ஆதரவற்றோர்,முதியோர் இல்லங்களுக்குப் போய் செலவழிக்கலாம்னு நினைக்கிறீங்கன்னா இன்னும் சந்தோஷம்.நம்மள்ல நிறையபேர் இப்படி போய் உதவி செய்யணும்னு நினைச்சுகிட்டே இருப்போம். ஆனா இப்ப போவோம்னு நினைக்கிறவங்க ரொம்ப குறைவு.நாளைக்குப் போவோம், அடுத்த வாரம் போவோம்னு ஆயுள் பூராவும் நினைச்சுகிட்டே இருக்குறவங்கதான் நிறைய பேர்.



இதுவே பிறந்தநாள்,திருமணநாளில் போய் அவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைச்சா கண்டிப்பா செய்வோம்.அது அந்த நாளின் சந்தோஷத்தை இன்னும் அதிகமாக்கும்.இது மாதிரியான ஒரு நாளில் நம்மைச் சுற்றி இருக்குறவங்ககிட்ட இருந்து வாழ்த்து கிடைச்சாலே அது எவ்வளவு சந்தோஷம் தரும்னு நான் சொல்லத் தேவை இல்லை. நம்மளுக்கு அறிமுகமில்லாத ஒருத்தர்கிட்ட இருந்து நமக்கு வாழ்த்து கிடைக்கிறது எந்த மாதிரியான மகிழ்ச்சியைத் தரும்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க.

திருவாரூர் பற்றி ரெண்டு விஷயம் நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கலாம்.தேர்த் திருவிழான்னா  திருவாரூர்தான் நினைவுக்கு வரும்.தேரோடும் நாலு வீதிகளிலும் இப்போ கிட்டத்தட்ட ரெண்டு அடி உயரத்துக்குமேல கான்கிரீட் தளம் அமைச்சிருக்காங்க. முன்னால தார்ச்சாலையில அங்கங்க மேடு பள்ளம் இருக்கும்போதே தேரை சரியான திசையில செலுத்த முட்டுக்கட்டை கொடுத்து திசை திருப்புறவங்க மிகவும் சிரமப்பட்டுதான் வேலை செய்வாங்க.அந்த பணிகள்ல தேர்ச்சி பெற்ற பழைய ஆளுங்க பல்வேறு காரணங்களால இப்போ இந்தப் பணிகள்ல ஈடுபடுறது இல்லை.(இந்த அரசியலைப் பற்றி எழுதுனா என் வீட்டுக்கு ஆட்டோ கன்பார்மா வரும்.)

புது ஆளுங்கதான் சில ஆண்டுகளா தேர் கட்டுமானப்பணிகள் செய்து திருவிழாவை நடத்தி முடிக்க உதவியா இருக்காங்க.அதனால கடந்த சில வருஷமா சின்ன சின்ன பாதிப்புகள் வந்தது உண்மைதான்.ஆனால் இந்த வருஷம் இதுமாதிரியான எந்த பாதிப்பும் இல்லாம நல்லபடியா திருவிழா நடந்து முடியணும்னு நான் கடவுள்கிட்ட வேண்டிக்குறேன்.(எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.)

2001ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்போறாங்க. இந்த காரணத்தால அடுத்த ஒரு சில ஆண்டுகளுக்கு தேர்த்திருவிழா நடக்க வாய்ப்பில்லை.அதனால நீங்க 16.07.2010 (வெள்ளிக்கிழமை) நடக்க இருக்குற தேர்த் திருவிழாவுக்கு வாங்க.

வர்றவங்களை உபசரிக்க திருவாரூர் மக்கள் நிறையபேர் இருக்கோம்.

திருவாரூர் என்றால் சட்டுன்னு நினைவுக்கு வர்ற தேர் திருவிழா பற்றி சொல்லியாச்சு.

அடுத்த விஷயம், மனுநீதிச்சோழன்.தேர் ஓட்டும்போது தவறுதலா கன்றுக்குட்டியை சாகடிச்ச மகனை அதே மாதிரி சாகடிச்ச மன்னனின் கதையும் உங்கள்ல பலருக்கு தெரிஞ்சிருக்கும்.

மனித உரிமை பற்றி பேசுற பலர், இது என்ன காட்டுமிராண்டித்தனம்! வண்டி போகும்போது யாராச்சும் அடிபட்டு சாகுறது சகஜம்தான்.(சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு?) அப்படின்னு வம்புக்கு வருவீங்க.

இப்படி நினைச்சு அலட்சியமா விட்டதாலதான் சாலைவிதிகளை மதிக்காம வாகனம் இயக்கி தினமும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்னு குவிச்சுகிட்டு இருக்குறவங்க திருந்துறதா இல்லை.

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் அப்படின்னு தண்டனை இருந்தா நிச்சயமா பயம் இருக்கும்.ஆனா அப்பாவிகளைப் பழிவாங்க இந்த சட்டத்தைப் பயன்படுத்திக்கிற தேசத்துரோகிங்க நிறையவே உண்டு.
அதாவது அப்பாவிகள் மேல இருக்குற அக்கறையாலதான் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடிய ஓட்டைகள் இருக்குன்னு நினைக்கிறேன்.

எங்கயோ ஆரம்பிச்ச விஷயம் இங்க வந்துடுச்சு. 16.7.10 திருவாரூர்ல திருவிழா...எல்லாரும் வந்துடுங்க.