Search This Blog

புதன், 7 ஜூலை, 2010

தயாராகுங்கள் 1947க்கு...மதராசப்பட்டினம்


வசீகரம் என்றால் அது பெண்ணின் குரலில்தான் என்று சிலர் சொல்லக்கூடும்.ஆனால் ஒரு விளம்பரத்தில் வந்த ஆணின் குரல் என்னை மிக அதிகமாகவே ஈர்த்துவிட்டது.

"தயாராகுங்கள்...1947க்கு...ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம் இணைந்து வழங்கும் மதராசபட்டினம்" என்று டிரெய்லர்களில் ஒலிக்கும் குரல்தான் அது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தொ(ல்)லைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சினிமாப்பட டிரெய்லர்கள் ஆறு மாதமானாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.அவை ஒளிபரப்பாகத் தொடங்கிய சில நாட்களிலேயே அந்த டிரெய்லர் ஆரம்பமான உடனேயே வேறு சேனலுக்குத் தாவி விடுவோம்.

நாக்கமுக்க புகழ் சேர்த்த படத்துக்கு எல்லாப் பாடல்களையும் வைத்து நாலைந்து வகையாக டிரெய்லர்கள் உருவாக்கி மாற்றி மாற்றி ஒளிபரப்பத்தொடங்கியவுடன் மற்றவர்களும் இந்த முறையை அதிகமாக பின்பற்றினார்கள்.ரசிகர்களுக்கு சலிப்புத்தட்டிவிடக்கூடாதே என்ற பயம்தான் இதற்குக் காரணம்.
1.இளம்பெண் ஐ பேடில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது வீதியில் வெள்ளையனே வெளியேறு கோஷத்துடன் பேரணி.

2.டீக்கடையில் ஹோம்தியேட்டர் சிஸ்டம் பாடிக்கொண்டிருக்கும்.அதில் இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் உள்ள செய்தியை வாசித்துக்கொண்டிருப்பார்கள்.

3.ஐ.டி துறையில் உள்ள நபர் இன்றைய மாடர்ன் ஹவுசில் இருந்து அலுவலகத்திற்கு கிளம்பும்போது பேப்பரில் 1947ம் ஆண்டு செய்திகள் முதல்பக்கத்தில் இடம்பெற்றிருக்கும்.

4.லேட்டஸ்ட் மாடல் காரில் ஏறும் பெண்மணியின் ஹேண்ட் பேக்கை ஒருவன் பிடுங்கிக்கொண்டு ஓடுவான்.அவர் உதவி என்று கத்தும்போது "வாட் ஹேப்பன்?"என்று கேட்டவாறு ஆங்கிலேய போலீசார் ஓடி வருவார்கள்.
இப்படி விதவிதமான ஐடியாக்களோடு படத்தின் கதை நடக்கும் காலகட்டமான 1947க்கு நம்மை அழைத்துச் செல்ல முயற்சி செய்து படத்துக்கான டிரெய்லரை உருவாக்கியிருக்கிறார்கள்.

நிச்சயம் இது நல்ல முயற்சி.இது போன்ற படங்கள் வெற்றி அடைந்தால் அது ரசிகர்களுக்கு மேலும் நல்ல படங்கள் கிடைக்க வழி வகுக்கும். ஆனால் இதற்கு படத்தின் திரைக்கதையும் உதவ வேண்டும்.

சமகாலக் கதைக்களனைக் கொண்ட குறும்படம் ஒன்றில் நான் பணியாற்றினேன்.அதையே எங்களால் நினைத்தபடி எடுக்கமுடியவில்லை.படப்பிடிப்பு முடியும் வரை எதோ ஒரு விஷயத்துக்காக காம்ப்ரமைஸ் ஆகிக்கொண்டேதான் இருந்தோம்.யதார்த்த சூழ் நிலை இப்படி இருக்கும்போது கடந்த கால வரலாற்றைப் படமாக்குவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்தது. ஹேராம், சிறைச்சாலை ஆகிய படங்கள் நான் விரும்பிப்பார்த்தவை.அந்த காலகட்ட கதைக்களத்தை காட்சிப்படுத்த படக்குழுவினர் மேற்கொண்ட சிரமங்கள் எனக்கு நன்றாகவே புரிந்தன.
ஆனால் சிறைச்சாலை படம் என் மனதில் ஏற்படுத்திய வலியை ஹேராம் ஏற்படுத்தவில்லை.சிறைச்சாலை இந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளை பார்வையாளனுக்கு உணர்த்துவதில் ஓரளவு வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன்.ஹேராம் படத்தைப் பொறுத்தவரை அது கலவரத்தைப் படம்பிடித்துக் காட்டியிருந்தாலும் தனி மனிதனுக்கு ஏற்பட்ட பாதிப்பை கூறுவதாக அமைந்திருந்தது.

எவ்வளவுதான் நீங்கள் படம்பிடிக்க கஷ்டப்பட்டிருந்தாலும் அதெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை.எங்களுக்குத் தேவை சந்தோஷம் என்பதுதான் மக்களின் மனநிலையோ என்ற எண்ணம் எனக்கு எழுகிறது.இதற்குக் காரணம், ஹேராம், சிறைச்சாலை படங்களுக்கு வர்த்தகரீதியான வெற்றி கிடைக்காததும் இம்சை அரசன் 23ம் புலிகேசியின் அதிரடி வெற்றியும்.
சேது, நந்தா, காதல்,அங்காடித்தெரு, வெயில் போன்று சோகத்தை மையமாகக் கொண்ட படங்களைக் கொண்டாடியவர்கள்தான் நம் ரசிகர்கள்.

பிறகு ஏன், ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் சாமானியர்களிடம் போதிய வரவேற்பைப் பெறுவதில்லை?
மதராசப்பட்டினம் இப்படிப்பட்ட படங்களின் வரிசையில் சேர்ந்துவிடாமல், புதிய பாதையை ஏற்படுத்துகிறதா என்று பார்ப்போம்.

திங்கள், 5 ஜூலை, 2010

புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்க சூப்பர் ஐடியா

1996ம் ஆண்டு நான் சினிமாதியேட்டரில் வேலை,பள்ளிக்கூடத்தில் படிப்பு என்று இரட்டைக்குதிரையில் சவாரி செய்துகொண்டிருந்த காலகட்டம்.(ஒரு குதிரை சவாரியும் இன்று வரை எனக்கு கைகூடலைன்னுங்குறதெல்லாம் இப்ப நமக்கு தேவையில்லை.)
அப்போது திருவாரூர் நகரத்தில் நான்கு, புற நகர்ப்பகுதியில் ஒன்று என்று ஐந்து தியேட்டர்கள் இருந்தன.இப்போது புற நகர்ப்பகுதியில் இருந்த தியேட்டர்(தியேட்டர் மாதிரி) நெல் கோடவுனா மாறிட்டதா சொன்னாங்க.

திருவாரூர் நகரப்பகுதியில் இருந்த ரெண்டு தியேட்டர்களை இடித்து அப்புறப்படுத்தியாச்சு.மிச்சமிருக்குற மூணு தியேட்டர்கள் எப்படியோ சமாளிச்சு உசுரோட இருக்கு.

இந்த மூணு தியேட்டர்களும் 1996ல சிறப்பா இயங்கிகிட்டு இருந்த சமயம்.பரம்பரை,உள்ளத்தை அள்ளித்தா, நாட்டுப்புறப்பாட்டு,பூவே உனக்காக, காலம்மாறிப்போச்சு,பாஞ்சாலங்குறிச்சி,சிவசக்தி போன்ற படங்கள் ஒரு தியேட்டர்ல குறைந்தபட்சம் முப்பதுநாள், அதிகபட்சம் அறுபதுநாள் என்ற கணக்குல நல்லா வசூல் செய்துகிட்டு இருந்துச்சு.

இன்னொரு தியேட்டர்ல தாயகம், செங்கோட்டை, இந்தியன், காதல்கோட்டை, அவ்வைசண்முகி அப்படின்னு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களின் அணிவரிசை.
இப்படி ரெண்டு தியேட்டர்களும் பிரமாதமான படங்களைத் திரையிட்டு டிக்கட் விலைகளை பதினைந்து, இருபதுன்னு வசூலிச்சுகிட்டு இருந்தாங்க.(பதினைந்து வருஷத்துக்கு முன்னால)

இது தவிர இன்னொரு தியேட்டர்ல ஆறு ரூபாய், பத்து ரூபாய் என்று டிக்கட்டில் உள்ள விலையையே வசூலித்தபடி சுமாரான படங்களைத் திரையிட்டாங்க.ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக நல்ல வசூலைதான் அந்த படங்கள் தந்துச்சு.

அந்த மாதிரி சின்ன விலையில டிக்கட் விற்பனை செய்ததுக்கு காரணம்,சின்ன பட்ஜெட் படங்களா அவை இருந்ததுதான்.

ஆனா இப்போ,மாஸ் ஓப்பனிங் இருக்குன்னு நம்புற ஹீரோவுக்கு பத்துப் பதினைஞ்சு கோடியை சம்பளமா கொடுத்து, சத்யம், ஐனாக்ஸ் மாதிரியான தியேட்டர்கள்ல திரையிட்டு ஒரே வாரத்துல கோடிகளை அள்ளிடணும்னு நினைக்கிறாங்க.இந்த ஐடியா பல நேரங்கள்ல தப்புக்கணக்காயிடுது.

காயலான் கடைக்குப் போற நிலையில இருக்குற பஸ்சுலயும் ஏ/சி வால்வோ பஸ்சுலயும் ஒரே டிக்கட் வசூல் செய்தா அது எப்படி சரியா வரும்? இது கூட தீபாவளி, பொங்கல் சமயமா இருந்தா வேற வழி இல்லாம சொந்த ஊருக்குப் போறவங்க புலம்பிகிட்டே ஏறுவாங்க.அதுவும் ஒருநாள் கூத்துதான்.
பாழடைஞ்ச நிலையில இருக்குற தியேட்டர்களிலயும் ஐம்பது நூறுன்னு டிக்கட் விலை வெச்சா யாரால தாங்க முடியும்?. அவனவன் முப்பது ரூபாய் கொடுத்து குடும்பத்தோட ...........யில பார்த்துடுறான்.

செல்போன் உபயோகம் இப்படி அதிரடியா வெற்றி அடைஞ்சதுக்கு முக்கிய காரணம் என்ன? ஆயிரம் ரூபாயில இருந்து லட்ச ரூபாய் வரை மொபைல் கிடைக்குது. எல்லோருக்கும் தாங்கக்கூடிய விலையில சேவைக்கட்டணமும் இருக்கு.

வெளி செல்லும் ஒரு நிமிட அழைப்புக்கு பத்து ரூபாய்,உள் வரும் ஒரு நிமிட அழைப்புக்கு ஐந்து ரூபாய் என்று கட்டணம் இருந்தால் இந்த துறையின் வளர்ச்சி எப்படி இருந்திருக்கும்னு சொல்ல பள்ளிக்கூட பையனே போதும்.பி.ஹெச்.டி படிச்ச நிபுணர் தேவையில்லை.

எந்த தொழிலா இருந்தாலும் நிறைய எண்ணிக்கையில் வாடிக்கையாளர் இருந்தால் அவர்களுக்கு பொருளை கொண்டு சென்று சேர்ப்பது சற்று கூடுதல் செலவு பிடிப்பதோடு, பணிச்சுமையும் அதிகரிக்கத்தான் செய்யும். இதற்குப் பயந்து பெரிய விலைப்பொருட்கள் அல்லது பெரிய அளவு வாங்கும் வாடிக்கையாளர்களை மட்டும் நம்பியிருந்தால் ஒரே ஒரு வாடிக்கையாளர் எடுக்கும் சின்ன முடிவு கூட பெரிய அளவில் கவிழ்த்துவிடும்.

இப்போது சினிமா தொழிலிலும் இந்த..................................தனத்தைதான் சில தயாரிப்பாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை அவர்கள் சினிமாவை தொழிலாக நினைக்காமல் சூதாட்டமாக மட்டுமே கருதி பேராசைப்பட்டதுதான் நல்ல படங்களுக்கு கூட சரியான தியேட்டர் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிக விலை காரணமாக அதிக நாட்கள் படம் ஓடுவதில்லை.

இதே டெக்னிக்கை பயன்படுத்தினால் புகைப்பிடிக்கும் வழக்கத்தையும் குறைத்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.

எப்படின்னுதானே கேட்குறீங்க?

ஒரு சிகரெட் விலை மூணு ரூபாய் நாலு ரூபாய் என்று இருப்பதால்தானே நிறையபேர் ஈஸியா அதுக்கு அடிமையாயிடுறாங்க? ஒரு சிகரெட் விலை நானூறு ரூபாய் ஐநூறு ரூபாய் என்று வைத்துவிட்டால் அதைப் பயன்படுத்தி உடல்நலத்தை கெடுத்துக்கொள்வதோடு, அடுத்தவர் நலனுக்கும் வேட்டு வைப்பது குறையும்.
இப்படித்தானே டிக்கட்,பார்க்கிங்,கேண்டீன் கட்டண விலையேற்றம் ஆகிய விஷயங்களை மட்டுமே வைத்து தியேட்டருக்கு செல்லும் நடுத்தர மக்களை அலற விடும்போது சிகரெட் விலையை ஏற்றி புகைப்  பிடிக்கும் வழக்கத்தை குறைக்க முடியாதா என்ன?

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டச் சொல்லும் போலீஸ்

சில தினங்களுக்கு முன்பு என் நண்பன் ஒருத்தன் இரவு பதினோரு மணிக்கு மாநில நெடுஞ்சாலையில் போய்க்கிட்டு இருந்தான். இடையில செல்போன் அழைப்பு வந்துருக்கு. உடனே டூவீலரை சாலையை விட்டு இறக்கி மணல் பகுதியில் நிறுத்திட்டுதான் செல்போன்ல பேசியிருக்கான்.அப்போ அவன்கிட்ட ரெண்டு போலீஸ்காரங்க ஓடி வந்துருக்காங்க.
அவங்களைப் பார்த்ததும் ஷாக்காகி செல்போன் பேசுறதை நிறுத்திட்டு என்னன்னு கேட்டுருக்கான்.ஓடி வந்தவங்கள்ல ஒரு போலீஸ்காரர் இவனுக்கு தெரிஞ்சவராம்.

"என்ன தம்பி...நீங்கதானா?"ன்னு அவர் கேட்டிருக்கிறார்.இதைப் பார்த்ததும் கூட வந்த இன்னொரு போலீஸ்காரர்,"உங்களுக்கு தெரிஞ்ச பையனா, சரி...சரி...இங்கெல்லாம் நிக்க கூடாது. உடனே கிளம்பு."ன்னு சொன்னாராம்.

"இல்ல சார்...போன்ல பேசுறதுக்காகதான்..."அப்படின்னு இவன் இழுத்துருக்கான்.

"அதெல்லாம் வண்டியை ஓட்டிகிட்டு போகும்போதே பேசிக்க...கிளம்பு...கிளம்பு..."அப்படின்னு அந்த இன்னொரு போலீஸ்காரர் விரட்டியிருக்கார்.

நண்பனுக்கு தெரிஞ்ச போலீஸ்காரரும், "நீங்க கிளம்புங்க தம்பி..."அப்படின்னு சொல்லி கண்ணைக்காட்டியிருக்கார்.

இவனும் போன்ல அப்புறம் பேசுறேன்னு சொல்லி போனைக் கட்பண்ணிட்டு டூவீலரை எடுத்துட்டு கிளம்பிட்டானாம். ரொம்ப பக்கத்துலேயே பேட்ரோல் வாகனமும் இன்னொரு சொகுசுக்காரும் லைட்டைக்கூட எரிய விடாம நின்னுருக்கு.

சொகுசுக்கார்ல வந்தவங்ககிட்ட ரெண்டு போலீஸ்காரங்க தீவிரமான வசூல்வேட்டையில இருந்துருக்காங்க. நண்பனுக்கு விஷயம் தெரிஞ்சதும் அவனுக்குள்ள சிரிச்சுகிட்டு வந்துருக்கான். அந்த வண்டிகளைத் தாண்டுனதும் கொஞ்ச தூரத்துலேயே இன்னும் ரெண்டு போலீஸ்காரங்க, அந்தப் பக்கம் காவலுக்கு.

வண்டி ஓட்டும்போதே செல்போன் பேசுங்கன்னு சொல்லி இவங்க யாரைக்காப்பாத்துறாங்க, யாருக்கு குழி வெட்டுறாங்கன்னு புரியுதா?

இந்த சம்பவம் எந்தப் பகுதியில நடந்தது, நண்பன் பெயர் என்னன்னு சொல்லாம பதிவு எழுதுறேன். நம்ம நாட்டுல கருத்து சுதந்திரம் எந்த அளவுக்கு இருக்குன்னு தெரியுதா? என்னைப் பொறுத்த வரை முழு சுதந்திரம் இல்லை. நீங்க உடனே இந்த ஊர்ல பெட்ரோல் இந்த விலை. அந்த ஊர்ல பிஸ்கட் அந்த விலைன்னு பட்டியல் வாசிக்காதீங்க நண்பர்களே.

தப்பு பண்றவன் அதிகாரத்துல இருக்குறவங்ககிட்ட கூடிக் குலாவுறான். நேர்மையா நடக்குறவங்க போலீசைப் பார்த்து பயப்படுறாங்க.இதுக்கு காரணம் என்ன? நல்ல பேர் எடுக்குறது ரொம்ப கஷ்டம். கெட்டபேர் வாங்க ஒரு நொடி போதும்னு சொல்லுவாங்க.

அதே மாதிரி, தப்பு பண்றவன் மேல வழக்கு பதிவு பண்ணி ஒரு நாளாவது ரிமாண்டுல வெக்கிறதுதான் கஷ்டம். யோக்கியன் மேல ஒரே ஒரு பொய் வழக்கு போட்டு ஒன்பது வருஷம் கூட விசாரணையே பண்ணாம உள்ள வைக்கலாம். இதுதான் நம்ம நாடு.
இதுலயும் ஒரு ஆறுதல் என்னன்னா...நமக்கே ஷாக் கொடுக்குற அளவுக்கு ஒண்ணு ரெண்டு ரொம்ப நல்ல போலீஸ்காரங்களும் இருக்கத்தான் செய்யுறாங்க.சென்னை சிட்டிபஸ்சுக்குள்ள பயணிகள் கூட்டத்துக்குள்ள இருக்காரா இல்லையான்னே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கண்டக்டர் இருப்பாரே... அந்த மாதிரியான சொற்ப எண்ணிக்கையில்.