Search This Blog

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள ஆசையா

எனக்கு எதிர்காலத்தைப் பற்றி எந்த கவலையும் கிடையாது என்று வெளிப்படையாக சொல்பவர்களுக்கு கூட அதைப் பற்றிய அச்சம் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்யும். நமது எதிர்காலம் எப்படித்தான் இருக்கும் என்று தெரிந்து கொள்ள நினைப்பது மனித இயல்பு. மனிதனுக்கு பசி, தூக்கம், உரிய வயதில் எதிர்பால் ஈர்ப்பு போன்ற விசயங்கள் எவ்வளவு இயல்பானதோ அப்படித்தான் எதிர்காலத்தின் மீதான ஆர்வமும்.



வாழ்வின் பல உண்மைகளை எளிமையாக உணர்த்தக்கூடிய நூல் ஜோதிடம் 360. அந்த நூலுக்கு நான் எழுதிய அணிந்துரை இங்கே.

அனுபவ ஜோதிடர் சித்தூர் எஸ்.முருகேசன் எழுதியஜோதிடம் 360 என்ற புத்தகத்தின் முதல் பதிப்பை படித்த எனக்கு நம் வாழ்வியலின் பல உண்மைகள் புரிந்தன. (இன்னும் புரிந்துகொள்ள முடியாத கோடிக்கணக்கான மர்மங்கள் மனித வாழ்வில் உண்டு. அதை உணர எத்தனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் போதாது.)

1. ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றை பெற முடியும்.

2. தேவையற்றதை வாங்கினால் விரைவில் அத்தியாவசியமானதை விற்க நேரிடும்.

3. முதுமையில் கஷ்டப்படாமல் இருக்க இளமையில் கஷ்டப்படுங்கள்.

இந்த மூன்று தத்துவங்களையும் பலரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். வாழ்க்கை குறித்த எவ்வளவோ தத்துவங்கள் இருந்தாலும் இந்த மூன்றை உணர்ந்தாலே வாழ்க்கையை புரிந்து கொள்ளலாம். ஜோதிடம் 360 முதல் பதிப்பை முழுவதும் படித்ததும் ஜோதிடத்தின்  அடிநாதமும் இந்த மூன்று தத்துவங்களைத்தான் உணர்த்துகிறது என்பது புரிந்தது.

ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் என்று ஏற்கனவே இறைவன் எழுதிவிடுகிறான். பிறகு எப்படி அவற்றில் இருந்து விடுபட முடியும் என்ற கேள்வி சிலர் மனதில் எழலாம்.

நம் பூர்வ ஜென்ம பாவங்கள், நம் முன்னோர்களின் பாவங்கள் போன்றவற்றின் மூலம் நவக்கிரகங்களிடம் நாம் கடன் பட்டிருக்கிறோம். அந்த கடனை தீர்ப்பதன் மூலம் தண்டனையின் கடுமை குறையுமா என்பதான முயற்சிதான் பரிகாரங்கள்.

வண்டி பஞ்சர் ஆக வேண்டும் என்று இருந்தால் ஜோதிடம் பார்த்து பரிகாரம் செய்தால் தடுக்க முடியுமா என்றால் முடியாது. ஆனால் ஒர்க்ஷாப் அல்லது பஞ்சர் ஒட்டும் கடைக்கு அருகில் வண்டி பஞ்சர் ஆவதற்கு வாய்ப்பு உண்டு. 

ஜோதிடம் 360 புத்தகத்தில் உள்ள விசயங்களும் இதை அடிப்படையாக கொண்டுதான் இருக்கின்றன. சித்தூர் எஸ். முருகேசன் கூறும் பரிகாரங்கள் உங்களை ஆயிரம், லட்சம் என்று பணம் செலவழித்து அதை, இதை செய்ய வேண்டும் என்று குழப்புவதாக இல்லை. மாறாக நம் வாழ்க்கை முறைகளை நெறிப்படுத்த வைக்கிறது.

உதாரணமாக 30 வயது மனிதரின் காய்ச்சலை குணப்படுத்தும் ஒரு மருந்து பல நேரங்களில் மற்றொரு நபருக்கு வேலை செய்வதில்லை. அதற்கு காரணம், ஒவ்வொரு மனிதனின் உடல் இயக்கமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதே போல்தான் எல்லா மனிதர்களுக்கும் கிரகங்கள் ஒரே மாதிரியான நன்மை, தீமைகளை வழங்குவதில்லை.

சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலமாக வாடகை, குத்தகை பணமே ஒரு மாதத்துக்கு 10 லட்ச ரூபாய் கிடைக்கும். ஆனால் வேறு சிலர், பழைய கூரை வீட்டை மாதம் ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விட்டுவிட்டு அதனால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க 1 லட்ச ரூபாய் செலவழிக்க நேரிடும். இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணம் என்ன? அதை தவிர்ப்பது எப்படி என்ற வித்தை இந்த நூலை படிப்பவர்களுக்கு ஓரளவாவது வசப்பட வாய்ப்பு உண்டு.

ஒரு பெரிய அரங்கத்தில் ஆயிரம் நாற்காலிகள் இருக்கும். அதில் 900 நாற்காலிகள் காலியாக இருக்கும். அவற்றில் ஒரே ஒரு நாற்காலி மட்டுமே உடைந்திருக்கும். மிகச்சரியாக அதில் போய் ஒருவர் உட்காருவார். துரதிர்ஷ்டம் என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லலாம். ஆனால் இப்படி நடப்பது  ஏதோ ஒரு செயலின் (முற்பிறவி அல்லது நாம் ஏற்கனவே செய்த தவறுகள்) எதிர்வினையாக இருக்கக்கூடும்.

ஆக இப்படி ஒவ்வொரு விஷ­யத்திலும் நம்மை மீறிய ஏதோ ஒரு வரையறைக்குட்பட்ட சக்திக்கு கட்டுப்பட்டுதான் உலகமும் மனித வாழ்வும் இயங்குகிறது. அதைப்புரிந்து கொள்ள இந்த நூல் உதவுகிறது. தாறுமாறாக அலைபாயும் மனதை கட்டுப்படுத்துவதுதான் கடினம்.  குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டு இயங்கும் நம் வாழ்க்கையை சிக்கலற்றதாக்க பல எளிய வழிகள் இருக்கின்றன. நாம்தான் அவற்றை பின்பற்ற மறுத்து மனம் போன போக்கில் வாழ நினைத்து துன்பங்களில் சிக்கிக்கொள்கிறோம். நாமே உருவாக்கிக்கொள்ளும் சிக்கல்களில் இருந்து விடுபட எளிமையான பாதைகளை காட்டுகிறது ஜோதிடம் 360.

1) ஜோதிடம் 360

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக