Search This Blog

புதன், 12 ஜூன், 2013

12-06-2013 குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புதினம்

இது குறித்து நான் எழுதிய கதைக்கு 2500 ரூபாய் பரிசு கிடைத்தது. ராணி வார இதழும், தமிழக அரசின் குழந்தைத்தொழிலாளர் மறுவாழ்வு மையமும் இணைந்து நடத்திய சிறுகதைப்போட்டியில் 2006 ஆம் ஆண்டு மே மாத தலைப்பு - குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பில் பெற்றோர் பங்கு.

அதற்கு நான் எழுதி அனுப்பிய சிறுகதை 2006 மே மாதத்துக்குரியதாக தேர்வு பெற்று செப்டம்பர் மாதம் பிரசுரமானது. இதை எழுதிய நானும் குழந்தை தொழிலாளியாக இருந்தவனே. ஆனால் யார் செய்த புண்ணியமோ படிப்பு நடுவில் ஒரு முறை தடைபட்டாலும் கல்லூரி வரை சென்று படிக்க முடிந்தது. ஆனால் பள்ளிப்பக்கமே செல்ல முடியாமல் இன்றும் எண்ணிக்கைக்குள் கொண்டுவர முடியாத அளவில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

இதற்கு முக்கிய முதல் காரணம், பெற்றோர்தான். அடுத்ததாக கொடுத்தவனே பறித்துக்கொண்டானே என்ற வார்த்தைகளுக்கேற்ப நடந்து கொண்டு ................ கடை நடத்தி .................. பானம் மூலம் யார் ஏழைகளின் பணத்தை பிடுங்கிக்கொள்கிறார்கள் என்று பப்ளிக்காக சொன்னால் ஆட்டோ வரலாம். அல்லது வழக்கு பாயலாம்.

பெற்றோரை முக்கிய காரணம் என்று நான் சொல்லக்காரணம், வருமானம் இல்லை என்ற வாதம் ஒரு வகையில் சரி என்றாலும், இன்னொரு பக்கம் ஸ்கில்டு லேபர் பற்றாக்குறை நான் பார்த்த வரை மிக அதிகமாகவே இருக்கிறது. கட்டிடத்தொழிலாளி, வெல்டர், தச்சுவேலை, மின்சாரப்பணியாளர், பிளம்பர் என்று பல வேலைகளிலும் இருக்கும் ஆட்களில் வேலைத்திறன் மிக்கவர் மிக குறைவே. மற்றபடி இந்த வேலை பார்ப்பவர்கள் மனதில் இந்த தொழில் மீது உண்மையான ஆர்வத்துடன் செயல்பட்டால் சாப்ட்வேர் எஞ்ஜீனியருக்கு சற்றும் குறைவில்லாமல் சம்பாதிக்கலாம்.

ஏற்கனவே இதை விட பலமடங்கு சம்பாதிப்பவர்களும் உரிய வழிகாட்டுதல், ஆலோசனை இல்லாததால் சேமிக்க வாய்ப்பு இல்லாமலும், முறையற்ற செலவுகள் செய்பவர்களுமாக இருக்கின்றனர். கல்வியின்மைதான் இதற்கு காரணம் என்று சொல்ல முடியும். கல்வி என்றால் பாடப்புத்தகத்தை மட்டும் சொல்லவில்லை. அது ஒரு பகுதிதான். மற்ற நூல்கள் வாசிப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. பள்ளிகளில் நீதிக்கதைகள் வகுப்பும் விளையாட்டு வகுப்பும் கிட்டத்தட்ட இல்லவே இல்லை.

விளைவு - சுய நலத்தின் மறு வடிவமாக இன்றைய தலைமுறை மாறிக்கொண்டிருக்கிறது. அடுத்தவங்களுக்காக ஐயோ பாவம் என்று நான் கவலைப்பட்டால் அப்படியா என்று கேட்டுவிட்டு இன்னும் எனக்கு நஷ்டம் ஏற்படுத்தும் ஆட்களைத்தான் நான் அதிகம் சந்திக்கிறேன். அதனால் நானும் இப்போது என்னை கண்ணாடி போல் மாற்றிக்கொள்ள வேண்டியதாகி விட்டது. உனக்கு வந்தா ரத்தம். எனக்கு வந்தா அது தக்காளி சட்னியா என்று வடிவேலு ஒரு படத்தில் கேட்பது போல் சுய நல குணம் கொண்டவர்களைத்தான் நான் அதிகம் சந்திப்பதால் பல சமயங்களில் விரக்தியாக உணர்கிறேன். ஆனால் இப்போது ஒரு தெளிவு வந்துவிட்டது. கடமையை செய், பலனை எதிர்பாராதே என்று செயல்படுவது எந்த இடத்தில் சாத்தியமோ, நமக்கு வருமானம் வராவிட்டாலும் நஷ்டம் ஏற்படுத்தாதோ...அந்த இடத்தில் மட்டுமே அப்படி நடந்து கொள்ள ஆரம்பித்துவிட்டேன். மற்றபடி தன் காசு என்று கறாராக இருக்கும் நபர்களிடம் என் காசு என்று நானும் எனக்கு வரவேண்டிய பண விஷயத்தில் கவனமாக வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

சில கஷ்டமர்கள் என்னிடம் வந்து செல்லும்போது "கடைசியில் என்னையும் இப்படி ஆக்கிட்டாங்களே" என்று சினிமாவசனம் அடிக்கடி எப்போதாவது என் மைண்ட் வாய்சில் கேட்கும்.

-----------------------------------

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.,), எந்த வயதில் வேலைபார்க்க வேண்டும் என்பதை வரையறுத்துள்ளது. அதன்படி, கடினமான வேலைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கட்டாயமாக கல்வி கற்க வேண்டும். 13 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், லேசான வேலை பார்க்கலாம் (அவர்களது கல்வி, சுகாதாரம், மனம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல்).

- இந்த தகவல் ஒரு இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் நிஜத்தில் இப்படியா நடக்கிறது.

-----------------------------------

சின்ன புள்ளைங்க விஷயத்தை விட்டுடுவோம். நான் கல்லூரி முடித்து 8 வருஷத்துல பல இடத்துல வேலை பார்த்துட்டேன். அவனுங்க குடுக்குறதா சொன்ன காசை விட அதிகமாவே கூவிருக்கேன்.(ஐ மீன் உழைத்திருக்கிறேன்) இதை வெளி பார்ட்டிகிட்ட அந்த முதலாளி (அ) மேனேஜரே சொல்லியிருக்காங்க. ஆனா எனக்கு பேசுன சம்பளம் ஒரு இடத்துலேயும் ஒழுங்கா வந்தது இல்லை.(தனியா ஒயரிங் வேலை பார்க்க போனப்பவும் இப்படித்தான் நடந்தது.)

ஆனால் இப்போ நான் (அ) நண்பர்கள் எங்களுக்கு ஆக வேண்டியதுக்கு நியாயமான அளவு சம்பளத்தை விட அதிகமா கொடுக்க தயாரா இருந்தும் ஆளுங்க 500 ரூபா வாங்குனா 200 ரூபாய்க்குதான் வேலை செய்யுறாங்க. ஆனா என் ராசிக்கு 500 ரூபாய்க்கு வேலை செய்தா மொத்தமே 50 ரூபாய்தான் கிடைக்கும். அதுவும் 5 இண்டால்மெண்ட்டுல.

அது சரி, வேலை பார்க்காம சம்பளம் வாங்குறதுக்கும், தனக்காக அடுத்தவன் உழைச்சு சம்பாதிச்சு தர்றதுக்கும் ஜாதகத்துல ஒரு அமைப்பு வேணும் போலிருக்கு.

---------------------------------
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 1
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 2
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 3
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக