Search This Blog

வியாழன், 9 மே, 2013

தேர்வுக்காய்ச்சல்

இன்று தமிழகத்தில் 12ஆம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியாகின்றன. இன்று தொலைக்காட்சிகளிலும் நாளை நாளிதழ்களிலும் டெம்ப்ளேட்டாக சில செய்திகள் வெளியாகும். அதாவது வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சில தனியார் பள்ளிகள் அதிகளவில் சிறப்பிடங்களை மொத்தமாக அள்ளிக்கொண்டுள்ளன. ஆனால் சில அரசுப்பள்ளி மாணவர்களும் சாதனை செய்திருக்கிறார்கள் என்ற வகையில் அந்த செய்திகள் இருக்கும்.

+2 Result Website Link 2

இந்த டெம்ப்ளேட் செய்திகள் வரிசையில் தேர்வில் தோல்வி அல்லது தோல்வி பயத்தில் பிளஸ் டூ மாணவி தற்கொலை, மாணவன் தண்டவாளத்தில் தலையைக்கொடுத்தார் ஆகிய செய்திகளும் இடம்பிடிப்பதுதான் வேதனை.

அடிப்படைக்கல்வியான பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண் பெற்று ஒரு மாணவன்/மாணவி தேர்ச்சியடைய வேண்டியது அவசியம்தான். ஆனால் எல்லோராலும் அது முடிகிற காரியமில்லை. ஏனெனில் ஒவ்வொருவருடைய திறனும் ஒவ்வொரு வகையில் மாறுபடும். இந்த தேர்வுகளில் 35 சதவீத மதிப்பெண் எடுக்க முடியாமல் போய்விட்டாலோ, பொறியியல் படிப்பில் பிள்ளையை சேர்க்க விரும்பும் பெற்றோர்களுக்கு அவர்கள் மகன் பார்டரில் பாஸ் செய்தாலோ ஏமாற்றமாகத்தான் இருக்கும். அதற்காக டார்ச்சர் கொடுத்து அவர்கள் பிள்ளைகள் தற்கொலை முடிவு வரை செல்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

உயிருடன் இருந்தால் உலகையே வெல்லலாம். இப்படி யாருக்கும் பயனில்லாமல் உயிரை மாய்த்துக்கொண்டால் பெற்றோர்கள் கூட சில நாட்களில் அல்லது சில மாதங்களில் உங்களை மறந்துவிடுவார்கள் என்பதை தடுமாறும் மாணவர்கள்/மாணவிகளுக்கு புரிய வைக்க வேண்டும்.

சில காரணங்களால் நான் 1999ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வை தனித்தேர்வராக எழுத முயற்சித்தேன். தேர்வுக்கட்டணம் கட்டியநபர் ஒரு நாள் தாமதமாக பணம் செலுத்தியதால் ஹால் டிக்கெட் வரவில்லை. தில்லுமுல்லு செய்து தேர்வெழுத முயற்சிக்க கூடாது என்று தேர்வுத்துறையிடமிருந்து எனக்கு எச்சரிக்கை கடிதம்தான் வந்தது. சுற்றி இருந்தவர்கள் நீ படிக்கிறது கடவுளுக்கே புடிக்கலை போலிருக்கு. அதனால்தான் இப்படி ஹால்டிக்கெட் வராம போயிடுச்சு. நீ பேசாம இப்போ பார்த்த வேலையையே தொடர்ந்து செய் என்றார்கள்.

அப்படி பேசியவர்கள் மீது கோபம் வந்தாலும் என் மன எண்ணம் வேறு
விதமாக சிந்தித்தது. 1ஆம் வகுப்பில் இருந்து இதுவரை ஒரு முறை கூட பெயிலாகாமல் இருந்தோம். இப்போதும் நான் தேர்வு எழுதினால் பெயில் ஆக வாய்ப்பில்லை. அதனால் தேர்வு எழுதவிடாமல் செய்யவே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று மனதை நானே தேற்றிக்கொண்டேன். அது தவிர அரசுக்கல்லூரிகளில் இப்போதும் டிமாண்டாக இருக்கும் துறையான வணிகவியல் துறையில்தான் சேருவேன். அதிலும் மெரிட்டில் இடம் பிடிப்பேன் என்று எனக்கு நானே இலக்கு வைத்துக்கொண்டு 1999 செப்டம்பரில் தேர்வெழுதினேன்.

இப்போதும் பல மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் விருப்பத்துக்காகதான் படிக்கிறார்களே தவிர சொந்த விருப்பத்தில் அல்ல. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நமது கல்வி முறை தனக்கு எதில் ஆர்வம் இருக்கிறது. அதில் சாதிப்போம் என்று யோசிக்க கூட விடாத அளவுக்கு இயந்திரத்தனமாக இருக்கிறது என்ற கருத்து எனக்கு உண்டு. அப்படி எல்லாம் இல்லை. நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன என்று நீங்கள் சொல்லலாம். அது உண்மையாக இருந்தாலும் இது தொடக்க நிலைதான். நமது கல்விமுறை இன்னும் போக வேண்டிய தூரம் மிக அதிகம்.

2007ஆம் ஆண்டு தேர்வுக்காய்ச்சல் என்ற தலைப்பில் சமநிலைச்சமுதாயம் என்ற சிற்றிதழில் நான் எழுதிய கட்டுரையை இத்துடன் இணைத்திருக்கிறேன். அந்த படங்களை க்ளிக் செய்து பெரியதாக்கி படிக்கலாம்.

1 கருத்து:

  1. அதிக மதிப்பெண் எடுத்தால்தான் எதிர்காலம் என்று பெற்றோர்கள்தான் பிள்ளைகளை டார்ச்சர் செய்கிறார்கள். நிறைய சம்பாதிக்கிறதுக்கு படிப்புதான் மூலதனம்னு எண்ணம் பரவிடுச்சி..

    பதிலளிநீக்கு