Search This Blog

வெள்ளி, 16 நவம்பர், 2012

சிங்கிளாக பயணம் செய்வதில் சில சிக்கல்கள்



சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் பணிபுரிவதற்காக வந்து தங்கியிருப்பவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பிறந்து வளர்ந்த ஊர்களுக்கு சென்று மறுபடியும் திரும்புவதை வாழ் நாள் சாதனையாகவே கல்வெட்டில் செதுக்கி வைக்கலாம். இந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாள் சென்னையில் இருந்து திருவாரூருக்கு வந்திருந்த ஐ.டி.கம்பெனி ஆபீசராக (?!) வேலை பார்க்கும் நண்பன் செல்போனில் "அய்யய்யோ...டிக்கட்டை கேன்சல் செஞ்சுடு"ன்னு அலறினான்.

"இது மாதிரி பண்டிகைக்கு மறு நாள் பஸ், ரயில் எதுலேயுமே டிக்கட் கிடைக்குறது ரொம்ப கஷ்டம். நீ ஏன் டிக்கட்டை கேன்சல் செய்ய சொல்ற?" என்றேன்.

"பஸ்சுல டபுள் பர்த்துல புக் பண்ணியிருக்குற விஷயத்தை இப்பதான் சொன்னான். பக்கத்துல ஜோடி சேர்றவன் ஒழுங்கான ஆளா இருந்தா பரவாயில்லை. அவன் குடிச்சுட்டு புரள்ற ஆளா இருந்தா நான் செத்தேன். அதுக்கு நான் மயிலாடுதுறை, சிதம்பரம், புதுச்சேரியில பஸ் மாறி மாறி தூக்கம் கெட்டு ஊருக்கு போயிடுவேன்.

இன்னொரு பிரச்சனை ரயில்ல பர்த்துன்னா பக்கவாட்டுல மட்டும்தான் ஆடும். ஆனா பஸ் எட்டு திசையிலயும் அலசிதான் நம்மளை ஊருக்கு கொண்டு போய் சேர்க்கும்.'' என்று அரைமணி நேரம் லெக்சர் அடித்தான்.

தனியா பயணம் பண்ணினா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. அதுல முக்கால்வாசி எல்லாருக்கும் ஒரே மாதிரி பிரச்சனைதான் வரும் போலிருக்கேன்னு என் மனசுல தோணுச்சு. சிங்கம் சிங்கிளா போனா எவ்வளவு அக்கப்போர் அப்படின்னு 2010ல வலையேத்துன பதிவை தூசிதட்டி இங்க கொடுத்துட்டேன்.
**********************************
சிங்கம் தனியா போய்தான் அதிரவைக்கும்னு சொல்றாங்க. ஆனா நிஜ வாழ்க்கையில சிங்கிளா இருந்தா பல இம்சைதான் வரும். எல்லாத்தையும் சொல்ல நேரம் இல்லை.அதனால சில வில்லங்கம் மட்டும் உங்கள் பார்வைக்கு.

ஜூன் முதல்வாரம் குற்றாலத்துல நெருங்கிய உறவினர் கிரஹப்பிரவேச விழா வெச்சிருந்தார். பாட்டி காலமானதும் ஏப்ரல் இறுதியில இருந்து மே மாசம் முழுவதும் திருவாரூர்-பரமக்குடி பயணமாவே இருந்ததால அம்மாவை விட்டுட்டு நான் மட்டும் தனியே குற்றாலத்துக்கு பயணம்.

விசேஷகாலமா இருந்ததால இரவு நேரத்துல தஞ்சாவூர்ல இருந்து மதுரை போறவரை இடம் கிடைக்கிறது கஷ்டம். அங்கிருந்து செங்கோட்டை போற பஸ்சுலயும் சூழ்நிலை எப்படி இருக்குன்னு தெரியாம ரிஸ்க் எடுக்க விரும்பலை.

S.E.T.C பஸ்ல டிக்கட் ரிசர்வ் பண்ண போனேன். ஆறாம் நம்பர் இருக்கையே கிடைச்சது. பதினோரு மணி நேர டிராவல்ல குறைஞ்சது ரெண்டு மணி நேரமாச்சும் தூங்கலாம்னு நம்பி பஸ்சுல ஏறுனேன்.

நைட் டின்னருக்காக(?!) தஞ்சாவூர்லயே கிட்டத்தட்ட ஒருமணி நேரம் வெயிட்டிங்.


தஞ்சை நகரைக் கடந்ததும் ஓரமா வண்டி நின்னுச்சு. என்னன்னு பார்த்தா கண்டக்டர், டிரைவர் சீட்டுல உட்கார்ந்து ஓட்ட ஆரம்பிச்சுட்டார். சிக்கன நடவடிக்கையால ஹெவி டிரைவிங் தெரிஞ்ச ஆளைத்தான் கண்டக்டரா போட்டுருக்காங்கன்னு அறிவுக்கு தெரிஞ்சாலும் மனசு அந்த இளைஞரை கண்டக்டராவே பார்த்துச்சு. மனசுல நினைவுக்கு வந்த கடவுளை எல்லாம் வேண்டிகிட்டு தைரியத்தை கொண்டுவர முயற்சி செய்தேன்.

அப்புறம் எங்க தூங்குறது?

எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள்ல பலர், கியர் பாக்ஸ் எக்கேடு கெட்டுப்போனா என்னன்னு கிளட்சை ஒழுங்கா பயன்படுத்தாமயே கியர் மாத்துவாங்க. ஆனா இந்த கண்டக்டர் ரொம்ப சரியா கிளட்சை யூஸ் பண்ணி கியர் மாத்தி பஸ்சை இயக்குனார்."சரி...இவர், வேலைக்கு சேர்ந்து ரொம்ப நாள் ஆகலை போலிருக்கு."அப்படின்னு ஒரு எண்ணம்.

மதுரை வரைக்கும் எனக்கு தூக்கமே வரலை. மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டுலேருந்து கிளம்பினதுமே தூங்கலாம்னு பார்த்தா பஸ் ரிங் ரோடு போகாம யானைக்கல், வடக்குமாரட்வீதி வழியா பழ மார்க்கெட்டுக்கு போனது. கண்டக்டர் கீழே இறங்கிப் போய் பழங்கள் வாங்கிட்டு வந்தார்.(அவங்களுக்குதான்.)

அப்படியே பெரியார் பேருந்து நிலைய பகுதி, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் சாலை வழியா போய் திருமங்கலத்தை நெருங்குனுச்சு. சரி...இனிமே வேடிக்கை பார்க்க எதுவும் இல்லைன்னு நினைச்சு கண்களை மூடி தூங்க முயற்சி செஞ்சேன்.

சில நிமிஷங்கள்தான்.ஒரு அவலக்குரல். நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.(இதை மட்டும் வடிவேலு மாடுலேஷனில் படிக்கவும்.) வேற ஒண்ணுமில்லைங்க. அஞ்சு வரிசைக்குப் பின்னால உட்கார்ந்துருந்த ஒருத்தர் மூணு வரிசை ஆளுங்க மேல வாந்தி எடுத்துட்டார். சாதாரணமாவே எனக்கு பேருந்துப் பயணத்தின்போது வாந்தி வர முயற்சிக்கும். நான் வாயை வயித்தைக் காயப்போட்டு சமாளிச்சுடுவேன்.(இதனாலேயே உடம்புல தெம்பு இல்லாம பர்சனாலிட்டி கொஞ்சம் குறையும்.வேற வழி?)

ஆனா அந்த ஆள் ஃபுல் மப்புல சைடு டிஷ்ஷா என்ன எழவைத்தின்னாரோ? அது எதுக்குமே அவரோட வயித்தைப் புடிக்கலை.(பஸ் மேல என்ன பாசமோ) எல்லாம் வெளியில வந்துடுச்சு.

ஆறு பேர் சட்டையை கழட்டிட்டாங்க. வாந்தி எடுத்தவரை அடிக்க இல்லைங்க...இந்த நாத்தம் தாங்காமதான். அப்புறம் சாலையோர டீக்கடையில பஸ்சை நிறுத்தி காசு கொடுத்து நாலு குடம் தண்ணி வாங்கி பஸ்சை அலசி விட்டார் கண்டக்டர். நடக்குறது,பறக்குறது,நீந்துறதுன்னு என்னென்ன அவரு வயித்துக்குள்ள இருந்துச்சோ?அவ்வளவு சீக்கிரம் நாத்தம் போயிடுமா?

கண்டக்டரோட கைக்காசுல சாய்பஜன் ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி எல்லாம் வாங்கி கொளுத்தி வெச்சார். அப்புறம் கொஞ்சம் பரவாயில்லை. ஒரு முக்கால் மணி நேரம் அவுட்.

பஸ் கிளம்புனதும் அப்பாடா, இனி இல்லை தொல்லைன்னு நினைச்சா மறுபடி ஒரு நாத்தம்.

எனக்கு பக்கத்துல உட்கார்ந்துருந்தவர், செண்ட் அடிச்சார். அய்யய்யோ..இதுக்கு அந்த வாந்தி நாத்தமே பரவாயில்லையேன்னு மனசுக்குள்ளயே புலம்புனேன். வேற என்ன பண்றது?

நானூறு கிலோமீட்டர் தொலைவா இருந்தாலும் இரவு நேரப் பயணத்துல சில சவுகர்யங்கள் இருக்கு. வெயில் தெரியாது. சராசரியா பகல் நேரத்தை விட இரவு நேரத்துல பத்து கிலோ மீட்டர் வேகம் அதிகமாவே இருக்கும்.தென்காசி பகுதியில ரயில்வே மேம்பாலம் கட்டுறதால செங்கோட்டை போற பஸ் எல்லாமே இலஞ்சி சந்திப்போட வேற வழியா போயிடுச்சு.


அதனால குற்றாலம் போக வேண்டிய நான் இலஞ்சியிலேயே இறங்கினேன். நிறைய தமிழ் சினிமாவுல வர்ற மாதிரியே நான் இறங்கின இடத்துலயும் ஒரே ஒரு டீக்கடை மட்டும் இருந்துச்சு.

அதிகாலை நாலு மணியா இருந்தாலும் பங்காளி ஒருத்தர் டூவீலரை எடுத்துகிட்டு வந்துட்டார்.அவரோட போய் கிரஹப்பிரவேச வீட்டுக்குப்போய் குளிச்சி(நம்புங்கப்பா) மேக்கப் போட்டு, விழாவுல கலந்துகிட்டு, வயித்தை நிரப்பின பிறகு பார்த்தா மணி ஆறே முக்கால்தான் ஆனது.

அண்ணே...அப்படியே எல்லா அருவிக்கும் போய் ஒரு குளியல் போட்டுட்டு வந்துடுறேன்னு சொன்னேன். இன்னொரு பங்காளியும் வண்டியில என்னைய அழைச்சுட்டு போனார்.

பிரதான அருவி தெரியுற தூரத்துலயே நிறுத்திட்டு,"தம்பி...அதான் அருவி...பார்த்து நல்லா கும்பிட்டுக்க..."அப்படின்னு சொன்னார்.

எனக்கு ஷாக். (இதெல்லாம் ரெண்டரை வருஷத்துக்கு முன்னால எழுதிய பதிவு. அப்போ அடிக்கடி ஷாக் அடிக்கும்.)

"ஏண்டா டேய்...சீசன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால வந்தா இப்படி நின்னு கும்பிட்டுட்டுதான் போகணும். அடுத்து ஐந்தருவிக்குப்போவோம்...இப்ப வீட்டுல குருக்கள், கோமியம் தெளிச்சாரே...அந்த மாதிரி ஏதாச்சும் செஞ்சுக்க முடியுதான்னு பார்க்கலாம்னு சொன்னார்.

நீங்க தண்ணியே தெளிக்க வேணாம்னு வீட்டுக்கு வண்டியை திருப்ப சொல்லிட்டேன்.


குற்றாலம் வரைக்கும் போயிட்டு அருவியிலயே குளிக்க முடியலையேன்னு நொந்து போய் வந்தா பாபநாசம் அணைக்குள்ள இருக்குற பாணதீர்த்த அருவியில எக்கச்சக்கமா தண்ணீர் கொட்டுறதைப் பார்த்து என் வயித்து ஹீட் அதிகமானதுதான் மிச்சம்.
*****
சிங்கம் சிங்கிளாத்தான் வரும்...ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்...இப்படி எல்லாம் டயலாக்கை ஹீரோ பேசும்போது கேட்க நல்லாத்தான் இருக்கு.

ஆனா தனியா பஸ்சுல பயணம் பண்ணும் போது எவ்வளவு இம்சையா இருக்கு தெரியுமா? நாற்பது ஐம்பது கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும்போது கஷ்டம் தெரியாது.

இப்ப நான் போன மாதிரி நானூறு கிலோமீட்டர் வேணாம், நம்ம நாட்டுல பல சாலைகளில் இருநூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் போறதுக்குள்ளயே நாக்கு வெளியில வந்துடுது.(திருவாரூர் - தஞ்சாவூர் தூரம் 65 கிலோ மீட்டர்தான். ஆனா இந்த தூரம் போறதுக்குள்ளயே ஸ் ஸ் சப்பா...இப்பவே கண்ணைக்கட்டுதேன்னு புலம்ப வேண்டியதுதான்.)

காத்தோட்டமா ஜன்னல் ஓரமா அப்படான்னு போய் உட்கார்ந்துருப்போம்.ரெண்டு லேடீஸ் வந்து,"சார் அங்க மாறி உட்காருங்களேன்."அப்படின்னு ஆரம்பிப்பாங்க.ரெண்டு பேரா போனா இந்த இம்சை இல்லை.

இப்படித்தான் ஒரு தடவை நான் தஞ்சாவூர்லேருந்து திருவாரூர் வரும்போது மாறி உட்கார சொன்ன ஒரு பொண்ணுகிட்ட கோபப்பட்டேன்.

"இப்ப மாறி உட்கார சொன்னீங்கன்னா பின் பக்க கண்ணாடியை உடைச்சுகிட்டு கீழே குதிக்க வேண்டியதுதான்.மாறி உட்கார சொல்லியே டிரைவருக்கு எதிர்ல இருந்த என்னைய பின்பக்க வாசல் வரைக்கும் கொண்டுவந்துட்டீங்க. இப்படியே அடுத்த பஸ்சுக்கு அனுப்பிடலாம்னு பார்க்குறீங்களா?"ன்னு விட்ட சவுண்டுல அந்தப் பொண்ணோட சேர்ந்து கண்டக்டரும் சிரிக்கிறாரு.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு, நண்பர்கள் யாரையாவது கூட அழைச்சுட்டுப்போனாத்தான் கிடைக்கும். இன்னும் பெட்டர் ஐடியான்னா அது மனைவியோட பயணம் பண்றதுதான்னு நான் சொல்லுவேன்.(சீக்கிரம் அம்மாகிட்ட சொல்லி பொண்ணு பார்க்க சொல்லணும்.)
******
சிங்கிளா இருந்து சாதிக்கிறது எல்லாம் சினிமா வசனத்துக்குதான் சரியா வரும். குறைந்த பட்சம் இன்னொருத்தர் உதவி இல்லாம பெரும்பாலான காரியங்கள் பெரிய வெற்றி அடையுறது இல்லை.

வில்லன் நடிகர் சொதப்பியிருந்தா கில்லியின் அபார வெற்றியும், சிங்கம் படம் இப்படி பேசப்படுறதும் அவ்வளவா சாத்தியம் இல்லை.
 ******

இப்ப நாங்க திருப்பணியில ஈடுபட்டிருக்குற கோவில் கர்ப்பக்கிரஹ விமான உயரம் சுமாரா இருபத்திரெண்டரை அடி. இதை கட்டி முடிக்கிறதுக்குள்ளேயே எங்களுக்கு நாக்கு தள்ளிகிட்டு இருக்கு. வரும்போது ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரதரிசனம் கிடைத்தது. அதைப் பார்த்ததும் நம்ம முன்னோர்களோட திறமையை நினைச்சு ரொம்ப பெருமையா இருந்துச்சு.

பெரியவங்களை மதிக்க மாட்டெங்குறாங்கன்னுங்குறது என்னை மாதிரி யூத்து மேல இருக்குற புகார். நாங்களா ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தமிழக அரசின் சின்னமா இருக்குறதை எதிர்க்குறோம்?
***********************

3 கருத்துகள்:

  1. அனுபவித்துப் படித்தேன்
    நானும் இதுபோல் மாட்டி பல சமயம்
    அவதிப்பட்டுள்ளதால்...
    சொல்லிச் சென்ற விதம் மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு