Search This Blog

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

2012ல விலைவாசி உயர்வை சமாளிப்பது எப்படி?

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நீ ஒருவர் மீது குற்றம் சொல்லி விரலை நீட்டும்போது மற்ற நான்கு விரல்கள் உன்னைத்தான் நோக்கும் என்று சொல்வார்கள். அது போல் விலைவாசி நம்மை கசக்கிப்பிழியும் நேரத்தில் அரசையும் சமூகத்தையும் குறை சொல்லும் முன்பு சுயக்கட்டுப்பாட்டுடன் சில விஷ­யங்களை கவனிக்க வேண்டும்.

தமிழகத்தின் மின் தேவையில் கிட்டத்தட்ட இருபத்தைந்து சதவீத மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது என்று சொல்கிறார்கள். குளிர்காலத்திலேயே இந்த கதி. ஏப்ரல், 'மே'யிலே என்ன கதியோ. வளர்ந்த சில நாடுகளில் 5 முதல் 7 சதவீதம் வரை மட்டுமே மின்சாரத்தை விநியோகத்துக்காக கம்பி வழியே கொண்டு செல்லும்போது இழப்பு ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் சொல்லப்படும் கணக்கு 40 சதவீதம் வரை. திருட்டு மின்சாரமும் உள்ளடக்கிய கணக்காக இது இருக்கலாம்.

இந்த இழப்பை 20 சதவீதம் என்ற அளவிற்கு குறைத்தாலே பாதி பற்றாக்குறை பறந்தோடிவிடுமே. அடுத்து தெருவிளக்கு, அரசு அலுவலக வளாகம் என்று எந்த அளவு சாத்தியமோ அந்த அளவிற்கு சோலார் சக்தியில் இயங்கும் விளக்குகளை அமைத்தால் எவ்வளவோ மின்சாரம் மிச்சம். எது எதையோ இலவசமாக கொடுப்பவர்கள் ஆண்டுக்கு 4 சிஎப்எல் பல்ப் - களை இலவசமாக கொடுக்கலாம். அல்லது சலுகை விலையில் கொடுக்கலாம். அடுத்து தொகுப்பு வீடுகளுக்கு இலவச மின்சாரம். இது நடுத்தர வர்க்க மக்களை வஞ்சிக்கும் செயல். உண்மையில் மின் கட்டணம் செலுத்த வசதியே இல்லாதவர்களுக்கு இப்படி இலவச மின்சாரம் கொடுத்தால் நியாயமாக ஒரு நாளைக்கு ஒரு யூனிட் போதும். அதற்கு மேல் நுகர்பவர்கள் நிச்சயமாக ஏழைகளாக இருக்கப்போவதில்லை. இப்படி ஒரு விளக்குக்காக கொடுக்கப்படும் வீடுகளில் ஏ/சியைத்தவிர அனைத்தும் இருக்கின்றன. ஆனால் ஓட்டுக்காக இப்படி இலவச மின்சாரத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள்மீதே அனைத்து சுமைகளையும் ஏற்றுகிறார்கள்.

இப்போது இருக்கும் அனைத்து அரசுப்பள்ளிகளையும் போதிய கட்டமைப்பு வசதிகளுடன் சரியான எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்து இயங்கச் செய்தால் பஸ் பாஸ் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகத்தான் இருக்கும்.

நான்குவழிச்சாலைகளுக்கு லட்சக்கணக்கான மக்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தும் அரசால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதைகளுக்கு ஏற்பாடு செய்வதில் என்ன கஷ்டமோ தெரியவில்லை. அது சரி. 4 வழிப்பாதை என்று சொல்லி ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் கூட சுங்கம் வசூலிக்கலாம். ஆயிரக்கணக்கில் ஆம்னி பஸ்களை இயக்கி மக்களை சுரண்டலாம். இரட்டை ரயில் பாதை அமைந்து விட்டால் இதற்கெல்லாம் வழி இருக்காதே. (இதனால் பலர் வேலையிழக்கக்கூடும் என்று சொல்லாதீர்கள். சில பெரு முதலைகள் அதாவது அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலர் மட்டுமே இன்னும் 10 தலைமுறைக்கு சொத்து சேர்க்க இந்த 4 வழிப்பாதைகள் அதிகம் உதவி செய்கின்றன.)

திருட்டு விசிடி டாட் காம் என்று இணையதளமே இருக்கிறது. அந்த அளவுக்கு இணைய தளங்களால் சினிமா சீரழிந்து வருகிறது என்று சொல்கிறார்கள். அது ஒரு புறம் இருந்தாலும் முக்கியமாக ஒரு எதிரி சினிமாவுக்குள்ளேயே இருப்பதாகத்தான் எனக்கு தோன்றுகிறது. ஏற்கனவே இருக்கும் இரண்டு கதாநாயகிகள் போதாது என்று இன்னும் இரண்டு பேரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று பல லட்சம் செலவு செய்து பாடலை படமாக்கி அதை எண்ட் டைட்டிலுக்காக சேர்க்கும் அளவுக்கு சிக்கன சிகாமணிகள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். இவர்கள் போதாதா சினிமாவை அழிப்பதற்கு.

பெரிய ஹீரோக்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் என்று சொல்கிறார்கள். ஆனால் சாதாரண டெக்னீஷியனுக்கு ஷூட்டிங் நாட்களில் சாப்பாடு கிடைத்தால் பெரிய வி­ஷயம். அந்த அளவுக்கு கொடுமைப்படுத்துவதும் நடக்கிறது. இது நமக்கு தேவையில்லை. ஆனால் பொதுமக்கள் கொஞ்சம் உஷாராகி விட்டதன் அடையாளம்தான் எந்த படமும் ஒரு வாரத்துக்கு மேல் தியேட்டரில் தங்காமல் எஸ்கேப்பாகிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இன்னும் பல கோடிப்பேருக்கு மாத வருமானமே 3 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் ரூபாய்வரைதான் என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள் போலிருக்கிறது. அதனால்தான் திருவாரூர் போன்ற சின்ன ஊர்களிலேயே ஒரு டிக்கட் 100 ரூபாய்க்கு விற்கிறது. 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றால் 500 ரூபாய் காலி. ஆத்தாடி...அந்த காசு இருந்தா ஒரு 4 நாளைக்கு குழம்பு வைக்கலாம் என்று நிறைய மக்கள் நினைக்கிறார்கள்.

இருசக்கர வாகனத்தை பயன்படுத்துதல், கேஸ் பயன்பாடு, மின்சாதனங்களை பயன்படுத்துவதில் ஒழுங்குமுறை என்று நாம் சிக்கனமாக இருந்தாலே பாதி கஷ்டத்திலிருந்து தப்பி விடலாம்.

பாத்திரம் ஓட்டையாக இருந்தால் இமயமலை முழுவதும் உருகி ஓடினால் கூட அது நிறையாது என்பதை புரிந்து கொண்டால் சரி.

பற்றாக்குறை என்றால் வருமானத்தை பெருக்கு அல்லது செலவை சுருக்கு என்பதுதான் தாரகமந்திரம். வருமானத்தை பெருக்குவது என்பது மிகவும் திட்டமிட்டு அதிக உழைப்பை கொடுத்தால் மட்டுமே சாத்தியம். ஆனால் சிக்கனம் என்பது சற்று முயற்சி செய்தாலே போதும்.

மேலே நான் சொன்ன சில சிக்கன நடவடிக்கைகளில் முக்கியமாக வீணாவதை தவிர்க்கும் நடவடிக்கைகளில் ஏற்கனவே இறங்கியவர்கள் அப்போதும் பற்றாக்குறை என்றால் வருமானத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளில்தான் இறங்க வேண்டும்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு: இதில் அரசியல் வியாதிகளைப்பற்றி அதிகம் சொல்லவில்லையே என்று தானே நினைக்கிறீர்கள். அவர்கள் செய்வது அவ்வளவும் அக்கப்போர்தான். அவர்கள் செலவழிப்பதில் 95 சதவீதம் தெண்டம்தான். அப்புறம் எதைச் சொல்ல...எதை விட...

1 கருத்து:

  1. பற்றாக்குறை என்றால் வருமானத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளில்தான் இறங்க வேண்டும்.
    நல்ல செய்தி நன்றி

    பதிலளிநீக்கு