Search This Blog

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

கந்தா - ஆசிரியர் - மாணவன் உறவை மையமாக கொண்ட கதைக்களம்.

நான் எல்.கே.ஜி படிக்கும்போது (அப்படியா என்று ஷாக்காக கூடாது.) என் பெயரை ஆங்கிலத்தில் எழுதித்தந்த ஆசிரியையிடம் ஒரு கேள்வி கேட்டதை நினைத்தால் அப்பவே நமக்கு எவ்வளவு அறிவு இருந்துருக்கு என்று பெருமையாகத்தான் இருக்கிறது(?!)
சரவணன் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் ஒவ்வொரு எழுத்துக்குப்பிறகும் A என்ற எழுத்து இருக்கும். மத்தவங்க பேருல எல்லாம் இப்படி இல்ல. என் பேருல மட்டும் ஏன் இத்தனை A ? என்று ஆசிரியையிடம் கேள்வி கேட்டிருக்கிறேன்.

இந்த அதி புத்திசாலி நாளைக்கு தானே நிறைய படிச்சு விஷயங்களைத் தெரிஞ்சுக்கும். ஆனா இப்ப என்ன சொன்னாலும் ஏத்திக்கிற அளவுக்கு  மண்டையில ஒண்ணும் இல்லைன்னு அந்த  ஆசிரியைக்கு நல்லாவே தெரியும் போலிருக்கு.

"அது அப்படித்தான். நீ பெரியவனானதும் இலக்கணம் சொல்லிக்கொடுப்பாங்க. அப்ப ஏன் இத்தனை A அப்படின்னு புரியும்."னு சொன்னாங்க.

இந்த விஷயம் நடுவுல பல காலம் மறந்துடுச்சு.பின்ன எப்படி நினைவுக்கு வந்துச்சுன்னுதானே கேட்குறீங்க?மதராச பட்டினம் படத்து டிரெய்லர்ல ஆர்யா  அந்த ஆசிரியருக்கே எ...ஏ கத்துக்கொடுக்கும் காட்சியைப் பார்த்ததும்தான்.

******

சிறு குழந்தை ஆர்வத்துடன் வரைந்து காட்டும் இயற்கைக்காட்சி ஓவியத்தை மணியம் செல்வன் போன்ற ஓவிய மேதைகளின் ஓவியம் போல அழகாக இல்லையே என்று ரொம்ப சாதாரணமாக ஒரு சாமானிய மனிதன் சொல்லிவிடுவான்.

குழந்தை வரைந்த அந்த ஓவியத்தில் நேர்த்தியைப் பார்க்காமல் அந்தக் குழந்தையின் ஆர்வத்தையும் முயற்சியையும் காண்பது சாதரண மனிதர்களுக்கு அவ்வளவு எளிதான விஷயமில்லை. அது அதிகமாக ஆசிரியர்களிடம் காணப்படும் உன்னதமான குணம்.

ஓவியம் என்று இல்லை, எந்த ஒரு கலை அல்லது தனித்திறனாகட்டும், அதைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தி புதுப்புது சாதனையாளர்களை உருவாக்கியதில் ஆசிரியர்களின் பங்குதான் மிக அதிகமாக இருக்கும்.
இப்போது நான் மனதில் நினைப்பதை இஷ்டத்துக்கு 'பிளாக்'கில் எழுதி (அது எவ்வளவு குப்பையாக இருந்தாலும் சரி.) உங்கள் பார்வைக்கு கொண்டுவந்துவிட முடிகிறது. ஆனால் நான் அச்சில் பார்க்கவேண்டும் என்று தீவிரமாக எழுதத்துவங்கியது கல்லூரியில் சேர்ந்த ஆண்டான 2000த்தில்.

நான் எழுதிய வாசகர் கடிதம் கூட பிரசுரமாகாத காலகட்டம்.2003 ஜனவரி வரை ஒரு பத்திரிகையிலும் என்னுடைய எழுத்துக்கள் பிரசுரமானதே இல்லை.2003 போகிப்பண்டிகை அன்று மாலைமுரசு பொங்கல் மலரில் முதல் சிறுகதை பிரசுரமானது.அடுத்த நாள் தினபூமி பொங்கல் மலரிலும் ஒரு சிறுகதை. இது அன்றைய காலகட்டத்தில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்தது. அதன்பிறகு ஆறு மாதங்களுக்கு மாலைமுரசு-வாரமுரசில் தொடர்ச்சியாக என்னுடைய சில சிறுகதைகள் பிரசுரமாயின.

ஆனால் 2000 மற்றும் 2001ம் ஆண்டுகளில் கல்லூரி ஆண்டு மலரில் நான் எழுதிய சிறுகதைகளால் பல மாணவர்களிடையே நான்  பிரபலம். இப்போதும் சில நண்பர்கள் என்னுடைய பெயரை தங்களுடைய செல்போன்களில் 'கதா' என்றுதான் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு கதைகள் கல்லூரி ஆண்டு மலரில் பிரசுரமானதுடன் வேறு பத்திரிகைகளில் எதுவுமே வரவில்லை என்ற நிலையில் நான் எழுதுவதையே விட்டிருக்க வேண்டியது.

ஆனால் முதலாம் ஆண்டிலேயே முதல் கதையைப் படித்த தமிழ்ப் பேராசிரியர் முனைவர் அ.ஜான்பீட்டர், "தம்பி...ஆண்டு மலருக்கு நிறைய பேர் எழுதிக்குடுத்தாலும் காப்பி அடிச்சதுதான் அதிகமா இருக்கும்.ஆனா உன் எழுத்துல உண்மையாவே நீ கற்பனை செஞ்சிருக்குறது தெரியுது. தொடர்ந்து எழுதிட்டு வா. எந்த வேலைக்குப் போனாலும் எழுதுறதை விட்டுடாத. எல்லாருக்கும் அது சாத்தியப்படாது."அப்படின்னு சொன்னதை மனசுல நினைச்சுகிட்டேன்.

மாவட்ட மைய நூலகத்துல 1999லேர்ந்து உறுப்பினரா இருந்ததால நிறைய படிக்க ஆரம்பிச்சேன். அப்பதான் ரா.கி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது? புத்தகத்தைப் பத்தி தெரிஞ்சு அதை மதி நிலையத்துலேர்ந்து வி.பி.பி மூலமா வரவழைச்சு படிச்சேன்.

ஒரு கதைன்னா எப்படி இருக்கும்னுங்குற டெக்னிக்கல் விஷயம் ஓரளவு எனக்குப் பிடிபட்டுச்சு. 2003ல இருந்து வெளி பத்திரிகைகள்ல பிரசுரமான கதைகள் எல்லாமே ரா.கி. ரங்கராஜனோட புத்தகத்தைப் படிச்ச பிறகு நான் எழுதுனதுதான்.
தினமலர்-வாரமலர் சிறுகதைப் போட்டியில இரண்டு முறை ஆறுதல் பரிசு,அமுதசுரபியில முத்திரைக்கதை,இலக்கியச்சிந்தனையின் 2006 ஜனவரி மாத சிறந்த சிறுகதைக்கான பரிசு,(இது தொகுப்பு நூலில் இடம்பெற்றிருக்கிறது.) தமிழ்நாடு அரசு குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மையமும் ராணி வார இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல்பரிசு. மாலைமுரசு வதீபாவளி மலரில் கவிதைக்கான வெள்ளி குங்குமச்சிமிழ் பரிசு என்று 2007ம் ஆண்டுக்குள் நிறையவே எழுதி வந்த நான் இடையில் சில காலம் சோம்பேறித்தனத்தால் மிகக் குறைவாகவே எழுதி வருகிறேன்.

நாலு பேராவது என்னுடைய எழுத்தைப் படிக்கும் வகையில் எழுதி வருகிறேன் என்றால் இந்த ஆர்வத்துக்கு தூண்டுகோலாக இருந்த தமிழ்ப்பேராசிரியர் முனைவர்.அ.ஜான்பீட்டரும்,புத்தகத்தின் மூலம் ஆசானாக இருந்து கதை என்றால் எப்படி எழுத வேண்டும் என்று எனக்கு சொல்லிக்கொடுத்த ரா.கி.ரங்கராஜனும் என் வாழ்வில் முக்கிய இடம் பிடித்த குருநாதர்கள்.

******

பல பேராசிரியர்கள் மாணவர்கள் பாஸ் மார்க் வாங்கினால் அல்லது முதல் மார்க் வாங்கினால் போதும் என்ற அளவில்தான் பாடம் நடத்துவார்கள். ஆனால் புத்தகத்தில் இருப்பது மட்டும் தெரிந்தால் போதாது, நீ படிக்கும் பாடம் வாழ்விலும் நீ வேலைக்குச் செல்லும் இடத்திலும் உன்னை உயர்த்த வேண்டும் என்று சொல்லிப் பாடம் நடத்திய பேராசிரியர் கோ.இராமநாதன் அவர்கள்.

பி.காம் படிக்கும்போது இவர் கொடுத்த ஆலோசனைகளின் பேரில்தான் நாங்கள் தேர்வுக்குத் தயாராவோம்.படிப்பு முடிந்த சில மாதங்களிலேயே நூறாண்டுகளாக இயங்கி வரும் ஒரு உற்பத்தி சார்ந்த நிறுவனத்தில் அனைத்து வகையான கணக்குகளையும் மிக எளிதாக கையாண்டேன்.

******

நான் பார்த்த ஆசிரியர்களில் சிலரின் சிறப்புக்களைப் பற்றி சொல்லியாயிற்று.வேறு சிலரைப் பற்றி குறை சொல்லவில்லை என்றால் எனக்கும் தூக்கம் வராது. படிப்பவர்களுக்கும் சுவாரஸ்யம் இருக்காது. அதனால் இந்த தகவல்கள்.

ஒரு பிரிண்டிங் பிரஸ் இருந்த தெருவிலேயே கோவில் திருவிழா.அதற்குரிய அழைப்பிதழ்களை அந்த அச்சகத்தில்தான் பிரிண்ட் செய்திருக்கிறார்கள்.அந்த தெருவின் பெயரையே தவறாக அச்சிட்டிருந்தார்கள். தொழிலில் ஒரு கவனம் இல்லாததால்தான் இந்த தவறு என்று நான் சொன்னேன்.

சரியாக திருத்தி வாங்காதது அழைப்பிதழ் அச்சடிக்க கொடுத்தவரின் தவறு. வேலை செய்பவர் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்க முடியாது என்று ஒருவர் கோபப்பட்டார்.அவர் அரசுப்பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியர்.

அந்த அச்சகம் இருக்கும் தெருவின் பெயரையே தவறாக அச்சடிக்கிறார்கள் என்றால் தொழிலில் கவனம் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

செப்.15 நாணயம் விகடனில் ஒரு கட்டுரையின் சில வரிகள் என்னுடைய கருத்தை உங்களுக்கு விளக்கும் என்று நினைக்கிறேன்.
எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் ஒருவருடைய வேலையை மற்றொருவர் மேற்பார்வையிடுவது என்பது கட்டாயமாகிவிட்டால் அவர் ஒரு சிறந்த புரஃபஷனல் இல்லை.பதிலாக அவர் ஒரு பயிற்சி பெறுபவர் என்கிற நிலையில்தான் இருக்கிறார் என்று அர்த்தம்.

தனது வேலையை நன்றாகச் செய்து விட்டோம் என தனக்குத்தானே சர்ட்டிஃபை செய்து கொள்ளக்கூடிய திறமை.(எல்லா தொழிலிலும் இது பொருந்தாமல் போகலாம். ஆனால் இந்த குணம் ஒருவர் வாழ்வின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம்.

******

எங்கள் ஊர் இயக்குனர் பாபு K. விஸ்வநாத் இயக்கும் படத்தில் ராஜேஷ் ஆசிரியராகவும் கரண் மாணவனாகவும் நடிக்கிறார்கள். இது ஆசிரியர் மாணவர் உறவு பற்றி எப்படி சொல்கிறது என்று பார்ப்போம்.

3 கருத்துகள்:

  1. அன்பின் சரவணன்

    ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர் - மாணவர்கள் உறவினை மையமாக வைத்து எழுதப்பட்ட இடுகை நன்று. ஆசிரியரின் தவறுகளையும் சுட்டிக் காட்டிய விதமும் நன்று. பயிற்சி நிலைக்கும் - திறமைசாலி நிலைக்கும் உள்ள வித்தியாசத்தினை அழகாக எடுத்துச் சொன்ன நாணயம் விகடன் கட்டுரை ஆசிரியருக்கு நல்வாழ்த்துகள்.

    குஜராத் 2002 கலவரங்கள் - கவிதையும் அருமை - புகைப்படமும் அருமை. சரவணன் பி.காம் - நல்வாழ்த்துகள் நண்பா

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  2. தினமலர்-வாரமலர் சிறுகதைப் போட்டியில இரண்டு முறை ஆறுதல் பரிசு,அமுதசுரபியில முத்திரைக்கதை,இலக்கியச்சிந்தனையின் 2006 ஜனவரி மாத சிறந்த சிறுகதைக்கான பரிசு,(இது தொகுப்பு நூலில் இடம்பெற்றிருக்கிறது.) தமிழ்நாடு அரசு குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மையமும் ராணி வார இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல்பரிசு. மாலைமுரசு வதீபாவளி மலரில் கவிதைக்கான வெள்ளி குங்குமச்சிமிழ் பரிசு என்று 2007ம் ஆண்டுக்குள் நிறையவே எழுதி வந்த நான் இடையில் சில காலம் சோம்பேறித்தனத்தால் மிகக் குறைவாகவே எழுதி வருகிறேன்.

    நாலு பேராவது என்னுடைய எழுத்தைப் படிக்கும் வகையில் எழுதி வருகிறேன் என்றால் இந்த ஆர்வத்துக்கு தூண்டுகோலாக இருந்த தமிழ்ப்பேராசிரியர் முனைவர்.அ.ஜான்பீட்டரும்,புத்தகத்தின் மூலம் ஆசானாக இருந்து கதை என்றால் எப்படி எழுத வேண்டும் என்று எனக்கு சொல்லிக்கொடுத்த ரா.கி.ரங்கராஜனும் என் வாழ்வில் முக்கிய இடம் பிடித்த குருநாதர்கள்.


    ....WOW!!! SUPERB!
    நல்ல திறமை இருக்குதுங்க..... தொடர்ந்து எழுதி, வெற்றி சிகரங்கள் தொட வேண்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு