Search This Blog

புதன், 8 செப்டம்பர், 2010

நடிகர் முரளி - திடீர் மரணம் - என் நினைவிற்கு வந்தவை...

எனக்கு சினிமா மீதும் நடிகர்களின் நடவடிக்கை குறித்தும் பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் உண்டு.ஆனால் இந்த பதிவில் அவற்றைப் பற்றி எழுதவில்லை.
ஒரு திரைப்பட விழாவில்,நடிகர் சத்யராஜ் "ரொம்ப வருஷமா முரளி காலேஜ் போய்கிட்டே இருக்கார். தமிழக முதல்வரிடம் சொல்லி பாஸ் போட சொல்லணும்ப்பா."என்று கிண்டலாக சொன்னார். இந்த செய்தியைக் கேட்டதும் அனைவருக்கும் சிரிப்புதான் வரும்.

இவர் பெரும்பாலான படங்களில் காதல் ஹீரோவாகவே அறியப்பட்டார்.அதிரடி சண்டைக்காட்சி உள்ள படங்களில் அதிகமாக நடித்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

அதர்மம்

அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்று அதர்மம்.நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது (1994 என்று நினைக்கிறேன்.) வந்த படம். வீரப்பன் கதை, படத்தின் பின் பகுதியில் அடர்ந்த காடுகள்தான் கதைக்களம் என்று இருந்ததால் என்னை அந்த வயதில் அதிகமாகவே கவர்ந்த படம்.
சின்ன பசங்க நாங்க

இந்தப் படமும் என்னுடைய மிகச் சிறிய வயதில் பார்த்ததுதான்.ரேவதி வாயசைக்கும் "என்ன மானமுள்ள பொண்ணு என்னு மதுரையில கேட்டாக..."பாடலும் வலிப்பு நோய் வந்த சார்லியின் கையில் கத்தியைக் கொடுத்து அவர் கையாலேயே அவரை வில்லன்கள் சாக வைப்பதும் அந்தப் படத்தைப் பொறுத்த வரை என் நினைவுக்கு வரும் விஷயங்கள்.
அவர் நடித்த பல திரைப்படங்களை சேட்டிலைட் தொலைக்காட்சி ஒளிபரப்பில் பார்த்ததுதான். சமுத்திரம்,ஆனந்தம் ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் உறுத்தாத நடிப்பு என்று சொல்லலாம்.

பொற்காலம்-1997

இந்தப் படம் எங்கள் ஊர் திரையரங்கம் ஒன்றில் தீபாவளிக்கு ரிலீசாகி, பொங்கல் வரை சுமார் எழுபத்தெட்டு நாட்கள் திரையிடப்பட்டது. அப்போது நான் அந்த திரையரங்கில் ஆப்ரேட்டர் அசிஸ்டெண்ட்டாக இருந்தேன்.
படத்திற்கு இசை தேவா.

சேலையின் பெருமை சொல்லும் சிகப்புக் கலரு பாடல்,

சிற்பமாகும் மண்ணின் வளத்தைக் கூறும் தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல்,
பச்சைப் பசேல் என்று காட்சியளிக்கும் வயல்வெளிகளில் பாடல்கள் படமாக்கப்பட்ட காலகட்டத்தில், வறட்சியின் குறியீடான கருவேலங்காட்டை களமாக்கி கதாப்பாத்திரங்களின் சூழ்நிலையை உணர்த்தும் பாடல், உடல் ஊனம் ஒரு குறையே இல்லை என்று நெத்தியடியாய் சொன்ன பாடல் என்று படத்தில் இருந்த நாலு பாடல்களும் (கேசட்டில் ஐந்து) ஆழமான கருத்துள்ளவை.

பொறுப்பில்லாத தந்தையாக மணிவண்ணன். இப்படி ஒரு அண்ணன் நமக்கு கிடைக்கமாட்டானா என்று எல்லா பெண்களையும் ஏங்க வைத்த கதாபாத்திரமாக முரளி நடித்திருந்த பொற்காலம் படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.

என்னதான் தங்கையின் மீது பாசமழை பொழிந்தாலும் அடி மனதில் அவனும் மற்றவர்களைப் போன்ற மன ஓட்டம் உள்ளவன்தான் என்ற வெளியில் தெரியாத, சாதாரணமாக நாம் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மையை வடிவேலு கதாபாத்திரத்தின் வசனம் மூலமாக சாட்டையடியாய் வெளியே கொண்டு வந்திருந்தார் இயக்குனர் சேரன்.

எனக்குப் பல வாழ்வியல் உண்மைகளை உணர்த்தியதுடன், யதார்த்த உலகத்தையும் மனிதர்களையும் எடைபோட கற்றுக் கொடுத்தது இந்த படம்.

ஒருவன் கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்க்கும் புகழ், சொத்து ஆகியவற்றை அவனது வாரிசுகளும் அனுபவிப்பது இயற்கை. அந்த வகையில், தனது மகனை ஹீரோவாக்கி அழகு பார்த்துக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் மரணமடைதல் என்பது யாரையும் கலங்கடிக்கும் சம்பவம்தான்.
தினக்கூலித் தொழிலாளியாக அல்லது மிகப்பெரிய அதிகாரி என்று எந்த ஒரு மனிதனாக இருந்தாலும், நாற்பத்தைந்து வயது முதல் ஐம்பது வயதுக்குள் மரணமடையும்போது மிக மோசமான அதிர்ச்சியை அளிக்கும். மற்ற வயதில் மரணமடைந்தால் அதிர்ச்சி வராதா என்று நீங்கள் கேட்கலாம். நான் சொன்ன இந்த வயது,மகன் அல்லது மகளின் கல்வி, திருமணம் தொழில் என்று ஒருவனின் வாரிசுகளுக்கு எதிர்காலத்தை தீர்மானிக்கும் அல்லது அதை செயல்படுத்தும் காலகட்டத்தில் ஒருவன் இருக்கும் வயது என்ற காரணத்தால்தான்.
மற்றபடி யார் சொல்லும் ஆறுதல் வார்த்தைகளும் முரளியின் குடும்பத்தாரை முழுவதுமாக சோகத்தின் பிடியில் இருந்து மீட்டு வந்துவிடாது. காலம்தான் அதை செய்யும்.

6 கருத்துகள்:

  1. முதலில் நம்பவே முடியவில்லை.
    ஆர்பாட்டம் இல்லாத நடிகர்...
    ஆவர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல நடிகர் நம்ப முடியாத செய்தி...!!!!!!
    அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்....

    பதிலளிநீக்கு
  3. வருத்தமாகதான் இருக்கிறது.அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு