Search This Blog

சனி, 11 செப்டம்பர், 2010

செப்டம்பர் 11 - ஒரே நாள் - எவ்வளவு சம்பவங்கள்?

இந்த நாள் வந்தாலே இளைய தலைமுறைக்கு அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட அந்த பயங்கரம்தான் நினைவுக்கு வரும்.ஒட்டுமொத்தமாக பல ஆயிரம் மனிதர்களைக் காவு வாங்கிய நாள் மட்டுமல்ல இது.
ஒவ்வொரு இந்தியனையும் மன ரீதியாகவும் உடல்ரீதியாகவும் நசுக்கிய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான சுதந்திரப்போராட்டம் தொடர்பான சில சம்பவங்களையும் இந்த நாள் உள்ளே வைத்துக்கொண்டிருக்கிறது.
செப்டம்பர் 11 பயங்கரவாதத்தின் நாள் மட்டுமல்ல. அது வன்முறைக்கு சற்றும் இடமளிக்காத அறப்போரின் நாளும் கூட. 1906ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியரும் அரசிடம் தங்களைப் பதிவு செய்துகொண்டு சான்றிதழ் பெற வேண்டும். அப்படிப் பெறாதவர்கள் குடியுரிமையை இழந்து விடுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் சத்தியாகிரகம்.அந்தப் போராட்டத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று கேட்டு காந்தி தன் 'ஒபீனியன்' பத்திரிகையில் ஒரு போட்டி நடத்தினார்.அந்தப் போட்டியில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல், 'சதாகிரக' என்பது. ஒரு நல்ல விஷயத்தில் உறுதி என்று அந்தச் சொல்லுக்குப் பொருள்.அதை சத்தியாகிரக என்று காந்தி மாற்றினார். சத்தியத்தின் சக்தி என்று பொருள்.அந்த நாள் செப்டம்பர் 11.

விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய தினமும் செப்டம்பர் 11தான்.
தமிழ் நாட்டில் செப்டம்பர் 11ஆம் தேதி பாரதியார்தினமாக கொண்டாடப்படுகிறது. அது அவரது பிறந்த தினமல்ல. இது பாரதி மறைந்த தினம்.

(நன்றி: புதியதலைமுறை - 16.09.2010  இதழ்)
 சென்னை - திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லத்துக்கு நான் ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன்.பா.ஜ பிரபலம் இல.கணேசன் நடத்திவரும் பொற்றாமரை இலக்கிய இதழின் முதலாம் ஆண்டு விழாவில் (2006 ஜூலை மூன்றாவது வாரம்) நானும் கலந்து கொண்டேன். சரித்திர நாவலாசிரியர் கவுதமநீலாம்பரன், கவிஞர் வாலி உட்பட இன்னும் சில பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.
அந்த விழாவில் கவிஞர் வாலி, தான் பாரதியின் இந்த நினைவு இல்லத்திற்குள் நான் இப்போதுதான் வருகிறேன் என்று சொன்னார். இவ்வளவு பெரிய மனுஷர் சென்னையிலேயே பல ஆண்டுகாலம் இருந்தும் எழுபத்தைந்து வயதில்தான் இந்த நினைவு இல்லத்திற்குள் வந்திருக்கிறார்.

 நான் திருவாரூரில் இருந்தாலும் என்னுடைய இருபத்தைந்தாவது வயதிலேயே வந்துவிட்டேனே என்று சின்னபுள்ளைத்தனமா நினைத்ததுண்டு.

பாரதி திரைப்படம் வெளிவந்தபோது தொலைக்காட்சி டிரெய்லர்களில் படக்காட்சிகளின் பிண்ணனியில் "பாரதி.....ஒரு கவிஞனின் கதை..."என்ற குரல் மிகவும் வசீகரமாகவும் ஒரு கம்பீரத்துடனும் ஒலிக்கும். இந்தக் குரலுக்காகவே அந்த டிரெய்லரை நான் அடிக்கடி பார்த்ததுண்டு. அந்தக் குரல், எழுத்தில் நான் படித்த பாரதியின் கம்பீரமான குரலாகவே கற்பனை செய்ய வைத்தது.
******
இன்று விநாயகர் சதுர்த்தி. எனக்கு இறை நம்பிக்கை உண்டு. எங்கள் பகுதியில் இருந்த ஆலயத்தை புதுப்பித்துக் கட்டி வருகிறோம். இந்த ஆலய உருவாக்கத்தில் என்னுடைய பொருள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஆனால் உடலுழைப்பு நிறையவே உண்டு.

சுமார் ஏழு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் துவங்கிய திருப்பணி வேலைகள் எண்பது சதவீத அளவில் நிறைவடைந்து விட்டன. தரை,இரும்புக்கதவு மற்றும் கிரில்கள்,பெயிண்டிங் வேலைகள் மட்டுமே பாக்கி. சிற்ப வேலைகள் அதிவிரைவில் நிறைவடைந்தது எங்களுக்கு மட்டுமல்ல, அந்த வேலைகளை செய்த சிற்பக்கலைஞர்களுக்குமே வியப்புதான்.

பொதுவாகவே எல்லா ஆலயங்களிலும் இம்மாதிரியான திருப்பணி வேலைகள் நடைபெறும்போது சிற்பவேலைகள்தான் நிறைவடையாமல் ஆண்டுக்கணக்கில் இழுத்துக்கொண்டே செல்லுமாம். ஆனால் பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயத்தின் விமானத்தில் மூன்று நிலைகளில் இருபத்தியிரண்டு சிற்பங்கள் வேலைகள் பூர்த்தியாகி விட்டன. ஆனால் சிற்பக்கலைஞர்கள் இல்லாமல் கட்டிடக் கலைஞர்களை மட்டும் வைத்து செய்துவிடக்கூடிய சில வேலைகளால் திருப்பணி தாமதமாகிக்கொண்டிருக்கிறது. (பொருளாதாரமும் ஒரு காரணம்.)

தற்காலிகமாக பிள்ளையாரை வில்வ மரத்தடியில் கொண்டு சென்று வைத்துவிட்டோம். அந்த இயற்கையான குளிர்ச்சி அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது என்று நினைக்கிறோம்.

******
விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான்.
கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர்.

அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, "பிள்ளையார்' என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். "என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா?' எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார்.

அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.

யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத் தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.

விநாயகருக்கு, "சுமுகர்' என்ற பெயருண்டு. "சு' என்றால் மேலான அல்லது "ஆனந்தமான' என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார்.

(நன்றி:தினமலர்-வாரமலர் 5.09.2010)



3 கருத்துகள்:

  1. அருமையான பகிர்வு............
    //
    இந்த ஆலய உருவாக்கத்தில் என்னுடைய பொருள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஆனால் உடலுழைப்பு நிறையவே உண்டு.
    //
    பணம் / பொருள் யார் வேண்டுமென்றாலும் கொடுக்கலாம்... உடலுழைப்பு தருவது கடினம்...

    பதிலளிநீக்கு
  2. அருமையான தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி. படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு