Search This Blog

வியாழன், 15 ஜூலை, 2010

திருவாரூரில் திருவிழா

வீட்டுக்கும் நாட்டுக்கும் திருவிழா என்பது அவசியம்.சில துறைகளில் பணி புரிபவர்கள் வேலை முடிந்தால் உறக்கம், பாதி உறக்கத்தில் சிரமப்பட்டு எழுந்து மீண்டும் வேலை என்ற இயந்திரத்தனமான வாழ்க்கை சூழலில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.இதனால் உறவுச் சிக்கலில் இருந்து உடல்நலம் வரை எவ்வளவு பாதிப்பு என்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
உறவினர் வீட்டில் விசேஷம் அல்லது அவர்கள் இருக்கும் ஊரில் திருவிழா என்ற ஒரு சில காரணங்களால்தான் நாம் மற்றவர் வீட்டுக்குச் சென்று சில மணி நேரங்களாவது இருந்துவிட்டு வருகிறோம்.(அடுத்தவர் வீட்டில் முகாமிட்டே வாழ்க்கையைக் கழிப்பவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.)

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் அடிமையானபிறகு யார் வீட்டுக்காவது செல்லலாம் என்று யோசிப்பதற்கே தயக்கமாக இருக்கிறது.நிழல் கதாபாத்திரங்களின் மேல் உள்ள ஆர்வத்தில் நிஜ வாழ்க்கையின் உறவுகளை உதாசீனப்படுத்தும் போக்கு பலரிடம் இருப்பதை மறுக்கமுடியாது.
மனிதர்கள் தனித்தீவாகி விட்ட இன்றைய காலகட்டத்தில் ஓரளவாவது சக மனிதர்களிடம் சற்று ரிலாக்சாக பழக முடிகிறது என்றால் அது மிக நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் இல்ல விழாக்களில் மட்டும்தான்.

அதிலும் பல விசேஷங்களுக்கு மிகச் சரியாக விழா நேரத்தில் சென்றுவிட்டு யாரும் கவனிக்கவில்லை என்று புலம்புவது பலருக்கும் வாடிக்கையாகிவிட்டது.ஒரு விழா என்றால் குறைந்தது ஆறுமணி நேரம் முன்பாகவாவது சென்று அங்குள்ள பணிகளை கொஞ்சமாவது பகிர்ந்து கொண்டால் அனைவருக்கும் கொண்டாட்டமாக இருக்கும்.

எல்லாரும் இப்படி வருவது சாத்தியமில்லைதான்.விழாவுக்கு அழைத்தவர்களில் ஒரு சதவீதம் பேர் அந்த பொறுப்புகளை பகிர்ந்துகொள்ள வந்தாலே போதும்.விழா நடத்தும் வீட்டில் உள்ளவர் மற்ற அனைவரையும் ஒரு புன்னகையுடனாவது எதிர்கொண்டு அழைக்க முடியும்.

(இந்த அவசர யுகத்துல இதுக்கெல்லாம் சாத்தியமில்லை அப்படின்னு நிறைய பேர் கண்டிப்பா சொல்லத்தான் போறாங்க.)
ஒவ்வொரு நாளும் மற்றுமொரு நாளே அப்படின்னு போய்கிட்டு இருந்தா அதுல எந்த சுவாரஸ்யமும் இல்லை.பண்டிகை, திருவிழா இதெல்லாம் ஊருக்கும் நாட்டுக்கும்னா, பிறந்தநாள், திருமணநாள் கொண்டாட்டங்கள் வீட்டுக்கு.இதெல்லாம் என்ன தெண்ட செலவுன்னு உங்கள்ல பலர் நினைக்கலாம்.
அதுக்கு ஆகுற செலவை ஆதரவற்றோர்,முதியோர் இல்லங்களுக்குப் போய் செலவழிக்கலாம்னு நினைக்கிறீங்கன்னா இன்னும் சந்தோஷம்.நம்மள்ல நிறையபேர் இப்படி போய் உதவி செய்யணும்னு நினைச்சுகிட்டே இருப்போம். ஆனா இப்ப போவோம்னு நினைக்கிறவங்க ரொம்ப குறைவு.நாளைக்குப் போவோம், அடுத்த வாரம் போவோம்னு ஆயுள் பூராவும் நினைச்சுகிட்டே இருக்குறவங்கதான் நிறைய பேர்.



இதுவே பிறந்தநாள்,திருமணநாளில் போய் அவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைச்சா கண்டிப்பா செய்வோம்.அது அந்த நாளின் சந்தோஷத்தை இன்னும் அதிகமாக்கும்.இது மாதிரியான ஒரு நாளில் நம்மைச் சுற்றி இருக்குறவங்ககிட்ட இருந்து வாழ்த்து கிடைச்சாலே அது எவ்வளவு சந்தோஷம் தரும்னு நான் சொல்லத் தேவை இல்லை. நம்மளுக்கு அறிமுகமில்லாத ஒருத்தர்கிட்ட இருந்து நமக்கு வாழ்த்து கிடைக்கிறது எந்த மாதிரியான மகிழ்ச்சியைத் தரும்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க.

திருவாரூர் பற்றி ரெண்டு விஷயம் நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கலாம்.தேர்த் திருவிழான்னா  திருவாரூர்தான் நினைவுக்கு வரும்.தேரோடும் நாலு வீதிகளிலும் இப்போ கிட்டத்தட்ட ரெண்டு அடி உயரத்துக்குமேல கான்கிரீட் தளம் அமைச்சிருக்காங்க. முன்னால தார்ச்சாலையில அங்கங்க மேடு பள்ளம் இருக்கும்போதே தேரை சரியான திசையில செலுத்த முட்டுக்கட்டை கொடுத்து திசை திருப்புறவங்க மிகவும் சிரமப்பட்டுதான் வேலை செய்வாங்க.அந்த பணிகள்ல தேர்ச்சி பெற்ற பழைய ஆளுங்க பல்வேறு காரணங்களால இப்போ இந்தப் பணிகள்ல ஈடுபடுறது இல்லை.(இந்த அரசியலைப் பற்றி எழுதுனா என் வீட்டுக்கு ஆட்டோ கன்பார்மா வரும்.)

புது ஆளுங்கதான் சில ஆண்டுகளா தேர் கட்டுமானப்பணிகள் செய்து திருவிழாவை நடத்தி முடிக்க உதவியா இருக்காங்க.அதனால கடந்த சில வருஷமா சின்ன சின்ன பாதிப்புகள் வந்தது உண்மைதான்.ஆனால் இந்த வருஷம் இதுமாதிரியான எந்த பாதிப்பும் இல்லாம நல்லபடியா திருவிழா நடந்து முடியணும்னு நான் கடவுள்கிட்ட வேண்டிக்குறேன்.(எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.)

2001ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்போறாங்க. இந்த காரணத்தால அடுத்த ஒரு சில ஆண்டுகளுக்கு தேர்த்திருவிழா நடக்க வாய்ப்பில்லை.அதனால நீங்க 16.07.2010 (வெள்ளிக்கிழமை) நடக்க இருக்குற தேர்த் திருவிழாவுக்கு வாங்க.

வர்றவங்களை உபசரிக்க திருவாரூர் மக்கள் நிறையபேர் இருக்கோம்.

திருவாரூர் என்றால் சட்டுன்னு நினைவுக்கு வர்ற தேர் திருவிழா பற்றி சொல்லியாச்சு.

அடுத்த விஷயம், மனுநீதிச்சோழன்.தேர் ஓட்டும்போது தவறுதலா கன்றுக்குட்டியை சாகடிச்ச மகனை அதே மாதிரி சாகடிச்ச மன்னனின் கதையும் உங்கள்ல பலருக்கு தெரிஞ்சிருக்கும்.

மனித உரிமை பற்றி பேசுற பலர், இது என்ன காட்டுமிராண்டித்தனம்! வண்டி போகும்போது யாராச்சும் அடிபட்டு சாகுறது சகஜம்தான்.(சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு?) அப்படின்னு வம்புக்கு வருவீங்க.

இப்படி நினைச்சு அலட்சியமா விட்டதாலதான் சாலைவிதிகளை மதிக்காம வாகனம் இயக்கி தினமும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்னு குவிச்சுகிட்டு இருக்குறவங்க திருந்துறதா இல்லை.

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் அப்படின்னு தண்டனை இருந்தா நிச்சயமா பயம் இருக்கும்.ஆனா அப்பாவிகளைப் பழிவாங்க இந்த சட்டத்தைப் பயன்படுத்திக்கிற தேசத்துரோகிங்க நிறையவே உண்டு.
அதாவது அப்பாவிகள் மேல இருக்குற அக்கறையாலதான் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடிய ஓட்டைகள் இருக்குன்னு நினைக்கிறேன்.

எங்கயோ ஆரம்பிச்ச விஷயம் இங்க வந்துடுச்சு. 16.7.10 திருவாரூர்ல திருவிழா...எல்லாரும் வந்துடுங்க.

5 கருத்துகள்:

  1. பதிவு நல்ல இருக்கு....வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. நல்லா சொல்லியிருக்கீங்க சரவணன்.

    திருவாரூர் கோவில் மற்றும் தேருடன் படங்களும் அருமை. இன்று சிறப்பாக நடந்திருக்குமென நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு. நல்லபடியா தேரோட்டம் நடந்து முடிந்ததாக கேள்விப்பட்டேன். பக்கத்தில் இருந்தும் வரமுடியவில்லை. அடுத்தடுத்த முறை பார்ப்போம் சரவணன்.

    பதிலளிநீக்கு
  4. சட்டம்ங்கறீங்க.... ஓட்டைங்கறீங்க.... தப்பிக்கிறதுங்கறீங்க.... என்னவோ போங்க.... மொத்தத்தில, ஒண்ணும் புரியல.

    அதை விடுங்க.... திருவிழா எப்படி நடந்தது? அடுத்த கட்ட போட்டோஸ் - பதிவு எப்போது?

    பதிலளிநீக்கு
  5. தேரை பிரித்து போட்டச்சு...இனி எப்பன்னே தெரில...

    பதிலளிநீக்கு