Search This Blog

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

ஒரு ரேஸ் பாதை சுரங்கப்பாதையாய் ஆனதே!

திருவாரூரின் பெரிய கோயிலைச்சுற்றி உள்ள நான்கு பிரமாண்டமான வீதிகளிலும் ஆண்டுக்கு இரண்டு முறை மிகப்பெரிய அளவில் கூட்டம் சேரும். உலகத்துக்கு திருவாரூரை அடையாளம் காட்டும் தேர்த்திருவிழாவின்போது மக்கள்வெள்ளத்தால் களைகட்டுவதுபோல் இல்லை என்றாலும் பிரமிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு காணும்பொங்கல் அன்றும் கூட்டம் சேரும்.

எனக்குத்தெரிந்து இருபது ஆண்டுகளில் சுனாமி ஏற்படுத்திய வடுவால் 2005ம் ஆண்டு மட்டும்தான் விளையாட்டுவிழா அஞ்சலி செலுத்தும் நிகழ்வாகிப்போனது.மற்றபடி கடந்த ஆண்டு வரை விளையாட்டுப்போட்டிகளைக்காண சுற்றி இருக்கும் ஊர்களில் உள்ள மக்கள் அனைவரும் திருவாரூரில் வந்து குவிந்துவிடுவார்கள்.


முப்பது ஏக்கருக்குமேல் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான கோயில் குளமான கமலாலயத்தில் நீச்சல் போட்டியுடன் விளையாட்டுப்பந்தயங்கள் தொடங்கும்.ஓட்டப்பந்தயம்,சைக்கிள், குதிரை வண்டி, மோட்டார்சைக்கிள் உட்பட பல போட்டிகள் நடைபெற்றாலும் மக்கள் அனைவரும் காணவிரும்புவது மோட்டார்சைக்கிள் பந்தயம்தான்.

பொதுக்கூட்டத்தில் பேச வேண்டிய சிறப்புப் பேச்சாளருக்கு மைக்கைக் கொடுக்கும் முன்பு மற்ற எல்லாரும் ஆசைதீர பேசி முடிப்பதைப்போல்தான் இங்கும் நடக்கும்.மோட்டார்சைக்கிள் ரேசுக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்து காரணமாக போட்டிகளின் நிறைவாகத்தான் மோட்டார்சைக்கிள்கள் வர்ர்ர்ர்ரூம்.

இதேபோல் கூட்டம் கூடும் இடங்களுக்கே உரிய நாளைய பெருசுகளின் கடைகண் பார்வை, நேற்றைய இளசுகளின் சுட்டெரிக்கும் பார்வை, கேலி, கிண்டல், விசில், அடிதடி எல்லாம் இருக்கும். ஆனால் மோசமான விளைவை ஏற்படுத்தும் அளவுக்கு எதுவும் இருக்காது.

புதை சாக்கடைப்பணிக்காக திருவாரூர் நகர் முழுவதும் சாலைகளில் ஏர்கலப்பை இல்லாமலேயே உழுதுவிட்டதால் இன்னும் இயல்பு நிலைக்கு சாலைகள் திரும்பவில்லை.நடுவில் முதல்வர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்துக்காக தெற்குவீதி முழுவதும் தங்கநாற்கரசாலையைப்போல் போட்டார்கள். அடுத்த மழை வந்ததும்தான் இது ரோடு மாதிரி, ரோடு இல்லைன்னு புரிந்தது.


ரேஸ் பாதை இந்த மாதிரி சுரங்கப்பாதையாக தயாரா நின்னா எப்புடி போட்டிகளை நடத்துவாங்க?


அதான் இப்படி இருக்கவேண்டிய கூட்டம்,

இப்படி ஆயிடுச்சு.

ஒரு மாசத்துக்குள்ள மூணு பேர காவு வாங்கியிருந்தாலும் வழக்கமா கலந்துக்குற அளவுக்கு இந்த ஆண்டும் நீச்சல் போட்டியில வீரர்கள் பங்கேற்றதுதான் ஒரே ஆறுதல். ஓட்டப்பந்தயம் தேரோடுற நாலு வீதியில இருந்து ஷிப்ட் ஆகி குளத்துடைய நாலு கரையையும் சுத்தி உள்ள சாலைக்குப் போயிடுச்சு.


இந்தப் போட்டி ஆரம்பமானப்ப ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா ஃபினிஷிங்க் சரியில்லைங்க. எப்படி இருந்தாலும் நம்பிக்கையோட கலந்துகிட்ட வீரர்களுக்கும் வெற்றி பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்.


இது முழுக்க தனியார் நடத்துற விளையாட்டுப்போட்டி. இனி வர்ற ஆண்டுலயாவது அரசு இன்னும் ஊக்கம் கொடுத்து இந்த விளையாட்டுவிழாவை ஒரு பிரமாண்டமான நிகழ்வா மாத்தணும். சுதந்திரதினம், குடியரசுதினம் ஆகிய ரெண்டு நாட்கள்லயும் திருவாரூர் நகரத்தை விட்டு நாலுகிலோமீட்டர் தள்ளி இருக்குற மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்துல பள்ளி மாணவர்கள் கலந்துக்குற விளையாட்டுவிழா நடத்துறாங்க.


ஆனா அதுக்கு பொதுமக்கள் கூட்டம் குறைவாத்தான் போகுது. ஆனா நகரின் மையப்பகுதியில இந்த பொங்கல் விளையாட்டுவிழா நடக்குறதால கலந்துக்குறதுலயும் சரி, பார்க்க வர்றவங்கள்லயும் சரி பொதுமக்கள்தான் அதிகம்.

புதுசா எதையும் அரசாங்கம் தொடங்குறதுதான் தலைகீழா நின்னு தண்ணி குடிக்கிற மாதிரி இருக்கு. 27 வருஷமா ஆரூரான் விளையாட்டுக்கழகம் நடத்திட்டு வர்ற இந்த போட்டிகளை இன்னும் மெருகேத்தி நிறைய விளையாட்டு வீரர்களைக் கண்டெடுக்கும் களமா ஏன் மாத்தக்கூடாது?

இன்னும் நல்ல முறையில செய்தா உள்ளூர் வணிக நிறுவனங்கள் பொருளாதார ஒத்துழைப்பு கொடுக்க தயாராவே இருக்காங்க.

முதல்வர் பொதுக்கூட்டம் என்றதும் வழவழ சாலை போட்டவங்க, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விளையாட்டுப்போட்டிகளை நடத்த சாலையை சீரமைக்கலை. இதைப் பார்த்த ஒரு நண்பர்,"போறபோக்கைப் பார்த்தா, அதிகாரிங்களும் நாம ஜெயிக்கவெச்சவங்களும் தன் மனைவியோட தான் சந்தோஷமா இருக்கவே நம்மகிட்ட லஞ்சம் கேட்பாங்க போலிருக்கே."ன்னு கிரீன் கலர்ல ஒரு கமெண்ட் அடிச்சார்.(அதாங்க பச்சையா பேசினார்.)

இந்த வரிகள் உங்களுக்கு கோபத்தை வரவழைக்கலாம். ஆனா போற போக்கைப் பார்த்தா இப்படி ஆயிடுமோ?


(ஒளிப்படங்கள் எல்லாம் நண்பரின் சாதாரண மொபைல்போன் கேமராவில் எடுத்தது. அதனால் தரத்தை எதிர்பார்க்காதீர்கள்.)

4 கருத்துகள்:

  1. மொபைல் போனில் எடுத்த படங்களுக்கு இவ்வளவு காரமா?

    பதிலளிநீக்கு
  2. மொபைல் போனில் எடுத்த படங்கள் எல்லாம் அருமை. உங்கள் பதிவின் தொகுப்புக்கு கார சாரமான சுவை சேர்த்து ருசிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. @ Chitra

    விளக்கத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. போட்டோஸ் ஆர் ரியலி நைஸ்... திருவாருரை சுற்றி வந்தது போலிருந்தது உங்க பதிவு.

    பதிலளிநீக்கு