Search This Blog

வெள்ளி, 29 ஜனவரி, 2010

கலாம் கனவுக்கு நம்பிக்கையூட்டிய புதிய தலைமுறை இளைஞர்

ஜனவரி 6, 2010 அன்று லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது என்ற செய்தி எல்லா நாளிதழ்களிலும் இடம்பிடிக்கக் காரணமான இளைஞருக்கு இந்த துணிச்சலைத் தந்தது லஞ்சம் கொடுக்காமலேயே நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள சட்டத்தில் வழி இருக்கிறது என்ற வல்லுனரின் விளக்கம் புதிய தலைமுறை இதழில் வெளி வந்த கட்டுரைதானாம்.

ராஜ்குமார் என்ற அந்த இளைஞர் பி.பார்ம் படிக்கும் மாணவர் என்ற செய்தி மேலும் நம்பிக்கை அளிக்கிறது. இவர் ஒருவர் மட்டும் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து தவறு செய்யும் அதிகாரியைப் பிடித்துக் கொடுத்துவிட்டால் போதாது. எல்லாரும் இதே மன உறுதியுடன் சட்டத்தின் துணையுடன் போராடினால் மாற்றம் நிச்சயம்.

சில வாரங்களுக்கு முன்பு திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க அதிகாலையில் இருந்து நிறைய பேர் காத்துக் கிடக்க, சில பொது மக்கள் காவலாளிகளுக்கு லஞ்சம் கொடுத்து உள்ளே நுழைய முயற்சித்தபோது தள்ளுமுல்லு ஏற்பட்டு காவல்துறை தடியடி நடத்தும் அளவுக்கு நிலமை மோசமாகிவிட்டிருக்கிறது.

லஞ்சம் கொடுத்து முறைகேடாக உள்ளே நுழைய முயன்றவர்களால் கால்கடுக்க வரிசையில் நின்று தங்கள் உரிமைக்குப் போராடியவர்களுக்கு தடியடி.இந்த மாதிரி கொடுமைக்கும் ஒரு வகையில் மக்களேதான் காரணமாக இருக்கிறார்கள்.மக்கள் திருந்தினால் அதிகாரிகள் தங்கள் கையை லஞ்சத்துக்காக நீட்ட முடியுமா?

சில நாடுகளில் கடமையை மீறுவதற்கு மட்டும்தான் லஞ்சம். இங்கே கடமையை செய்வதற்கே லஞ்சம் என்று இந்தியன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அது எத்தனை உண்மை!
உண்மை பேசுவது பெரிய விஷயம் இல்லை.பேசுபவரும் இதே போல் நேர்மையாக இருக்கவேண்டும். அப்போதுதான் பூரண பலன் கிடைக்கும்.

******
இது குறித்து தினமலர் வார இதழில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது.அதுவும் உங்கள் பார்வைக்கு.



வாரமலர்
அறத்திற்கு அழிவுண்டா? (ஆன்மிகம்)
- ஞானானந்தம்
- வைரம் ராஜகோபால்


உண்மையே பேசு; அறமே செய் என்கிறது வேதம். இந்த கலிகாலத்தில் உண்மையே பேசினால் ஊரெல்லாம் எதிரி; உலகெல்லாம் பகை என்று பலர் பயப்படுகின்றனர். உண்மையைப் பேசுகிறவர்கள், உண்மை பேசினால் மட்டும் போதாது; அறவழியில் வாழ்கிறவர் களாகவும் இருக்க வேண்டும். உங்கள் வாழ்வு, அறவழியில் இல்லாமல் உண்மை பேசுகிறேன் என்று பிறரைப்பற்றி பேசினால் துன்பம் தான் மிஞ்சும்.

பழைய வைத்திய முறையில் மருந்துகள் கொடுக்கும் போது, மருந்து மட்டும் சாப்பிட்டால் போதாது; பத்திய உணவுகள் சாப்பிட்டு, சில மோசமான உணவுகளை சாப்பிடாமல் இருந்தால்தான் மருந்து வேலை செய்யும் என்று சொல்வர். சிலசமயம், பத்தியமற்ற உணவுகள் சாப்பிட்டால் மருந்து விபரீதமாகக் கூட வேலை செய்யும்; அதே மாதிரிதான் உண்மை பேசுவது என்பது மருந்து மாதிரி. அறவழியில் வாழ்வது பத்திய உணவு மாதிரி. இரண்டும் இணைந்து நிகழ வேண்டுமே ஒழிய, உண்மை மட்டும் பேசி அறவழியில் நாம் நடக்கா விட்டால் அடி, உதைதான் கிடைக்கும்.

அறவழியில் நடக்கக் கூட பலர் பயப்படுகின்றனர். அறவழியில் நடந்த ராமர், தருமர் கஷ்டப்பட்டனர். அயோக்கியர்கள் சுகவாழ்வு வாழ்கின்றனர் என்று பலர் புலம்புகின்றனர். இது மாயை; பெரிய பொய். அவர்கட்கு நேர்ந்த சோதனை களைத் துன்பங்களாக கருதுகின்றனர்; ஆனால், அவர்கள் அப்படி இல்லை. நெருப்புக்குக் காகிதம் அஞ்சும்... தங்கம் பயப்படுமா? நீங்கள் அறவழியில் நடந்தால் வரும் அனுபவங்களைத் துன்பம் என்று முத்திரை குத்தாதீர்கள்; அறவழியில் நடப்பவருக்கு ஒருநாளும் துன்பம் வராது. "இன்பமே எந்நாளும்... துன்பம் இல்லை' என்கிறது நாவுக்கரசர் தேவாரம்.

ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு திருட்டுப் போய்விட்டது. அரசனுக்குக் கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை ஏவினான்; பயன் இல்லை."ஒரு மாதத்திற்குள் சிலம்பைக் கொண்டு வந்து தருபவர்கட்கு பெரும் பரிசுத் தொகை...' என்று அறிவித்தான். கூடவே, மக்களை மிரட்ட, அதற்கு பிறகு, அது யாரிடம் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டால் மரண தண்டனை என்று அறிவித்தான்.

அந்த ஊருக்குத் தம் சீடர்களோடு வந்து கொண்டிருந்தார் துறவி ஒருவர். வழியில் கீழே கிடந்த சிலம்பு இவர் கைக்கு அகப்பட்டது. விசாரித்தபோது, "இது ராஜாவின் சொத்து; அதை உடனே கொண்டு போய் கொடுத்தால் பரிசு உண்டு. குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு கொடுத் தால், மரண தண்டனை!' என்று துறவிக்குத் தகவல் கிடைத்தது.

அதை கொடுக்கவில்லை துறவி; வைத்துக் கொண்டார். சீடர்களுக்கு ஒன்றும் புரியவே இல்லை. சரியாக எந்த நாளுக்குப் பிறகு, கொடுத்தால் மரண தண்டனை என்று ராஜா அறிவித்தாரோ, அதற்குப் பிறகு, அரசரிடம் சிலம்பைக் கொடுத்தார். "இப்போது உமக்கு மரண தண்டனை நான் விதிக்க வேண்டி இருக்குமே, ஏன் கிடைத்ததும் தரவில்லை?' என்று சீறினான் அரசன்.

"ஒன்று... கிடைத்ததும் ஓடோடி வந்திருந்தால் பரிசுக்கு நான் ஆசைப்பட்டதாக அர்த்தம்; நான் பரிசை விரும்பவில்லை. இரண்டு, மரண தண்டனை கிடைக்கும் என்று அஞ்சி கொடுக்காமலேயே வைத்திருந்தால் நான் சாவுக்குப் பயந்தவன் என்று அர்த்தம்; நான் மரணத்திற்குப் பயப்படுபவன் இல்லை. சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவன் என்று ஆகிவிடும்; நான் பிறர் பொருளை விரும்புவதே இல்லை. அதனால், இப்போது கொடுத்து விட்டேன்!' என்றார் துறவி. "இப்போது உமக்கு மரணதண்டனை கிடைக்குமே!' என்றான் அரசன். அவனைப் பார்த்து, "அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தர்மம், உன் சட்டத்தை விட மேலானது... விடு வழியை...' என்று கூறியபடி கம்பீரமாக நடந்தார் துறவி. தலை வணங்கி வழிவிட்டான் அரசன்.
அறம் அழிவற்றது.
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக