Search This Blog

வெள்ளி, 11 டிசம்பர், 2009

கதாநாயகன்


"தமிழ் நாடு முழுவதும் அறுபது தியேட்டரை வாடகைக்கு பிடிச்சுடுங்க." என்று சகதேவ் சொன்னதும் மனோகரனுக்கு எதுவும் புரியவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சுகதேவ் நடித்தது எட்டு தமிழ்ப்படங்கள். அனைத்துமே வெற்றி பெற்றது திரையுலகினர் மட்டுமின்றி பலரையும் பொறாமைப்பட வைத்தது. தமிழகம் முழுவதும் நூறு தியேட்டர்களில் வெளியாகி குறைந்தது எண்பது தியேட்டர்களிலாவது அறுபது நாட்களுக்கு குறையாமல் ஓடும்.

ஆனால் ஒரு தியேட்டரில் கூட நூறு நாட்கள் ஓடியதே இல்லை.

சென்னையில் மட்டுமாவது இரண்டு தியேட்டர்களை வாடகைக்குப் பிடித்து நூறு நாட்கள் ஓட்டினால் இமேஜ் உயருவதோடு சம்பளத்தையும் அதிகரிக்கலாம் என்று மேளாலர் மனோகரன் எத்தனையோ முறை சொல்லியும் சகதேவ் கேட்பதாக இல்லை.

"சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாவது தடைபடும்...மின்சாரம் வீணாகும்...நான் நடிச்ச படங்கள் ஆளே இல்லாமல் என் காசுல நூறு நாள் ஓடுறத விட, தன்னால ஐம்பது நாள் ஓடி எல்லாருக்கும் லாபம் சம்பாதிச்சு கொடுத்தால் போதும். என்றெல்லாம் கூறிய சகதேவ் இப்போது தமிழ் நாடு முழுவதும் அறுபது தியேட்டரை வாடகைக்கு பிடிச்சுடுங்க..."என்று சொன்னதும் குழப்பம் தாங்காத மனோகரன்,

"சார்...நான் தியேட்டரை புக் பண்ண சொன்னப்ப எல்லாம் நீங்க கேட்கலை. உங்க படம் ரிலீஸ் ஆக இன்னும் மூணு மாசமாவது ஆகும். இப்ப எதுக்கு சார் தியேட்டர்? "என்றான்.

"நேற்று ஃபோர் ஃப்ரேம் தியேட்டர்ல பார்த்த படம் எப்படி இருந்துச்சு?"

"அருமையான படம்...ஆனா பாவம்... வினியோகஸ்தர்கள் கிடைக்காம திண்டாடுறாங்க..."என்று மனோகரன் வருத்தப் பட்டான்.

"இந்த படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைக்காம போயிடக்கூடாதுன்னுதான் நானே தியேட்டரை பிடிச்சு கொடுக்க முடிவு பண்ணிட்டேன். அன்னதானம் பண்றதும் நாலு பேரை படிக்க வைக்கிறது மட்டும் செய்தால் போதாது. எங்கிட்ட சினிமா பணம் கொடுத்திருக்கு. அது நல்லா இருக்க திரும்பவும் கொஞ்சமா செலவு செய்யப்போறேன்." என்று சகதேவ் சொன்னதைக் கேட்டு சினிமாவில் மட்டுமின்றி நிஜவாழ்விலும் ஹீரோவாகத் திகழும் ஒருவரிடம் வேலை செய்வதை நினைத்து மனோகரன் மகிழ்ந்தான்.

1 கருத்து: