Search This Blog

வெள்ளி, 11 டிசம்பர், 2009

தண்ணீர்


"ராஜவேலு...அவங்க எவ்வளவு பெரிய குடும்பம்னு தெரியுமா? வசதியை எல்லாம் எதிர்பார்க்காம ஜாதகம் சரியா இருந்த ஒரே காரணத்துக்காக நம்ம வீட்டுப் பொண்ணைக் கேட்டு வந்துருக்காங்க. நீ எதனால குடுக்க வேண்டாம்னு சொல்ற?"

"மாப்பிள்ளை வீடு நமக்கு தூரத்து சொந்தம் வேற. அந்த விஷயமே இப்பதான் தெரிஞ்சது. நாம தேடி அலைந்தாலும் இப்படி ஒரு சம்மந்தம் அமையாதுடா..." என்றாள் வசந்தா.

"அம்மா...போன வருஷம் சென்னையில இருக்குற இவங்களோட கம்பெனி நேர்காணலுக்காக போனேன். அங்க எனக்கு வேலை கிடைக்கலை. அதைப் பற்றி எனக்கு வருத்தம் கிடையாது.

நானூறு கிலோமீட்டர் பயணம் பண்ணி நேர்முகத்தேர்வுக்கு என் சொந்த செலவுல போனேன்...சரி...பரவாயில்லை.

நாங்க நாலே பேர் உச்சி வெயில் நேரத்துல போயிருந்தோம். நாங்க குளிர் பானமெல்லாம் கேட்கலை. தாகத்துக்கு தண்ணீர் கேட்டோம்.

கம்பெனிக்கு வெளியில டீக்கடை இருக்குன்னு வழிகாட்டுறாங்க. அங்க உள்ள பணியாளர்கள், பார்வையாளர்களுக்கு தண்ணீர் வசதி இல்லாம இருக்காது.

இவங்களை வேலைக்கு எடுக்கலை. அப்புறம் ஏன் தண்ணீர் கொடுக்கணும்னு நினைக்குற அளவுக்கு குறுகிய மனப்பான்மை கொண்ட அந்த கம்பெனி முதலாளி குடும்பத்துல என் தங்கை நிம்மதியா வாழ முடியும்னு எனக்குத் தோணலைம்மா."என்றான்.

அவன் பேச்சில் இருந்த உண்மை வசந்தாவையும் காயப் படுத்தியது. இப்போது அவளுக்குள்ளேயும் இந்த சம்மந்தம் வேண்டாம் என்ற தீர்மானம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக