Search This Blog

வெள்ளி, 25 டிசம்பர், 2009

மிரள வைத்த வெற்றி - இளைய பாரதத்துக்கு வேட்டைக்காரன் விஜய், ரஜினி, கமல் மற்றும் தமிழ்மணம் தந்த பிரமாண்டமான ஓப்பனிங்

23 டிசம்பர் அன்று வேட்டைக்காரன் திரையிடப்பட்டிருந்த திரையரங்கம் ஒன்றில் ஒருவர்

மொக்கையாகிப் போனதைப் பற்றி எழுதியிருந்தேன். அதற்கு வேட்டைக்காரன் என்ற வார்த்தை வரும்படி தலைப்பு அமைத்திருந்தது எதேச்சையாகத்தான் அமைந்தது. அந்த பதிவில் நான் சொல்ல வந்த விஷயம் படம் சம்மந்தப்பட்டது என்பதால் வேறு தலைப்பை யோசிக்க வில்லை.

அன்று நான் இட்ட மற்றொரு பதிவில் ஃபாலோயர்ஸ் விட்ஜெட் சேர்க்க வேண்டும் என்ற காரணத்தால்  இளையபாரதம் URL முகவரியை மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்ததைப் பற்றி எழுதியிருந்தேன். எதற்காக அந்தப் பதிவுக்குரிய தலைப்பில் குசேலன், ஆளவந்தான், குருவி ஆகிய படங்களின் தலைப்பை சேர்த்திருந்தேன் என்று பலருக்கும் புரிந்திருக்காது.

அந்தப் புதிரை 01.01.2010 அன்றுதான் விடுவிப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

இப்போது என்னை மிரள வைத்த விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு தலைப்பும் இருந்ததைப் பார்த்து அன்று ஒரே நாளில் இளையபாரதத்துக்கு 1194 ஹிட்ஸ்  கிடைத்தன. அன்று முழுவதும் நான் இளைய பாரதத்தில் நுழைந்த சமயங்களில் எல்லாம் குறைந்தது முப்பது பேராவது ஆன்லைனில் இருந்தார்கள். கிடுகிடுவென ஹிட்ஸ் ஏறிக்கொண்டே போனதில் நான் மிரண்டு போனது உண்மை.

சினிமா ஹீரோக்களை விரும்பாதவர்கள் பலர் இருந்தாலும் அவர்கள் சம்மந்தப்பட்ட விஷயம் மக்களிடையே ஏற்படுத்தும்  தாக்கத்தைப் போல் வேறு எதுவுமே செய்வதில்லை.

நடிகர்களை மக்கள் மிகப்பெரிய உயரமும் செல்வங்களும் கொடுத்து வைத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள், இந்த மக்களுக்காகவும் அந்த சினிமாவுக்காகவும் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

நான் ஒன்றும் நடிகர்கள், தாங்கள் சம்பாதித்த பணத்தை அப்படியே கருணை இல்லங்களுக்கு கொடுத்துவிட்டு காந்தி மகான் போல அரையாடை உடுத்தி எளிய உணவு உண்ண சொல்லவில்லை.

அதுதான் அவர்கள் ஏழைகளுக்கு நிறைய உதவிகளை உலகிற்கு தெரிந்தும் தெரியாமலும் செய்கிறார்களே...என்று சொல்லும் கட்சியாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு ஒரு விண்ணப்பம்.

ஒன்றுமே செய்ய இயலாதவர்களுக்குதான் நீங்கள் பொருளுதவி செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு அவர்களே பொருளைத் தேடுவதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தி தருவதே சமூகத்துக்கு செய்யும் உண்மையான உதவியாக இருக்க முடியும்.

பாபா படத்தின் வெற்றி பற்றிய பேச்சு எழுந்தபோது யானை படுத்தாலே குதிரையின் உயரம். நான் ஜெயிக்கிற குதிரை என்று தன்னம்பிக்கையுடன் பேசினார். அடுத்த படத்திலேயே செய்தும் காட்டினார்.


அவருடைய படத்தில் பணியாற்றுபவர்களும், திரையரங்க உரிமையாளர்கள்,  விநியோகஸ்தர் என்று பலன் பெறுபவர்களின் எண்ணிக்கை எவ்வளவோ என்று அவரது ஆதரவாளர்கள் சொல்வார்கள்.

அவருடைய திறனுக்கு அவரால் வாழ்பவர்கள் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஆலமரம். ஆனால் அவரது படங்களால் ஒரு புங்க மரத்தடியில் மழைக்கு ஒதுங்கி நிற்பவர்களின் அளவுக்குதான் பலன்பெறுபவர்களின் எண்ணிக்கை இருக்கிறது என்று சொல்கிறேன்.

தமிழில் பிரமாண்ட இயக்குநர் என்று தனிப் பாதையில் செல்லும் ஷங்கர், புதுமுகங்களைக் கொண்டு ஈரமான ரோஜாவே என்ற மெகா ஹிட் படம் தந்த கேயார் ஆகிய இருவரையும் முன்னுதாரணமாகக் கொண்டு நான் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு காலுடன் நடனமாடி தன் திறனை நிரூபித்த குட்டி என்ற இளைஞரை வைத்து படம் எடுத்த கேயாருக்கு லாபம் கிடைப்பது கடினம்தான் என்பது நன்கு தெரியும்.. ஆனால் அந்த சினிமாவின் மூலம் குட்டிக்கு நிறைய கச்சேரி வாய்ப்புகள் கிடைத்தன. இன்னும் பெரிய சிகரம் தொட்டிருக்க வேண்டிய அந்த இளைஞர், அகால மரணம் அடைந்தது என்னைக் கலங்க வைத்த விஷயம்.

கேயார் நினைத்திருந்தால் தனக்கு தெரிந்த இடங்களில் நடனவிழா நடத்த குட்டியை அறிமுகம் செய்திருந்தால் போதும். ஆனால் அவரது திறமை உலகிற்கு பளிச்சென்று தெரிந்து அவரை நடனம் ஆட நாலு பேர் தேடி வரச்செய்ய வேண்டும் என்று முடிவு செய்ததால்தான் லாபம் எதிர்பார்க்காமல் டான்சர் என்ற படத்தை அவரால் எடுக்க முடிந்தது.

காதல், இம்சைஅரசன் 23ம் புலிகேசி, ஈரம் போன்ற படங்கள் ஷங்கர் தவிர வேறு யாரும் தயாரிக்க ரொம்பவே தயங்கியிருப்பார்கள். தமிழில் உச்சம் தொட்ட இயக்குநர்கள் பிறருடைய தயாரிப்பில்தான் சிறந்த படங்களை மிக அதிகமாக தந்திருக்கிறார்கள். அந்த இயக்குநர்கள் தயாரிப்பாளர்களாக மாறியிருந்தாலும் ஷங்கர் போல் புதிய முயற்சிக்கு ஆதரவு தரவில்லை.

ரஜினி தயாரித்து இயக்கிய வள்ளி தவிர வேறு முயற்சியில் அவர் ஈடுபடவில்லை.

மிகச் சிறிய முதலீட்டில் சிறப்பான படம் எடுக்க இப்போதும் பலர் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அச்சுறுத்தும் விஷயம் தியேட்டர் வாடகை. மீண்டும் கடன் வாங்கி படத்தை வெளியிட்டால் மீடியா மூலமாக படம் பற்றி நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டு தியேட்டருக்கு கூட்டம் வருவதற்கு இரண்டு வாரங்களாவது ஆகிவிடும். அதுவரை தியேட்டரில் படத்தை ஓட்ட வேண்டும் என்றால் வாடகை கொடுக்க தயாரிப்பாளரால் முடியாது.

அப்படியே அவர் வாடகை தரத் தயாராக இருந்தாலும் பெரிய நடிகர்கள் படம் ரிலீசானால் வலுக்கட்டாயமாக சிறிய படங்கள் வெளியேற்றப்படும். என்னுடைய வலைப்பதிவுக்கு ஒரே நாளில் 1194 ஹிட்டுகள் கிடைத்ததற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா?

அன்று நான் பதிவிட்ட பிறகு சிறிது நேரம் கழித்து ஏதோ தொழில் நுட்பக்காரணங்களால் இரவு வரை சில பதிவுகள் மட்டுமே தொடர்ந்து முகப்பு பக்கத்தில் இடம்பெற்றன. அதனால்தான் அவ்வளவு ஹிட்ஸ்.

இதைக் கண்டு நான் மகிழலாம். ஆனால் என்னை விட சிறப்பாக, பயனுள்ள பதிவுகள் எவ்வளவு இடப்பட்டிருக்கும்?. அவை வாசகர்களைச் சேராததால் எவ்வளவு பேருக்கோ

வருத்தமும், நிறைய நல்ல செய்தி பயன்படாத நிலையும் ஏற்பட்டிருக்கலாம்.

இது தவிர்க்க இயலாத தொழில் நுட்பக் கோளாறாக இருக்கும்.

ஆனால் பெரிய பட்ஜெட் படங்களால் சிறிய படங்கள் இப்படித்தான் பார்வையாளர்களை அடையாமல் நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

பெரிய நடிகர்கள் ஒன்றும் இந்த மாதிரி படங்களைத் தயாரிக்க கூட வேண்டாம். அவர்கள் இந்த மாதிரியான நல்ல படங்களை நியாயமான விலை கொடுத்து வாங்கி திரையிட்டால் அவர்களின் பாப்புலாரிட்டியால் முதல் சில நாட்களிலேயே   காதல், இம்சைஅரசன் போன்ற படங்கள் குறிப்பிட்ட சதவீதம் லாபம் ஈட்டும். சேது படமே இப்படி ஒரு பெரிய ஆள் வாங்கி வெளியிட்டிருந்தால் எவ்வளவோ நாட்களுக்கு முன்னாலேயே வெளியாகியிருக்கும்.

இந்தப் படங்களால் நிச்சயம் நஷ்டம் வரப்போவதில்லை. இதை மையமாக வைத்து நான் எழுதிய ஒரு பக்க கதையைப் படிக்க இங்கே அமுக்கவும்.

பெரிய நடிகர்கள் செய்யும் உதவி பாத்திரத்தில் உள்ள தண்ணீராக ஒரு சிலருக்கு மட்டுமே பயன் தரும்.  கிணற்று நீராக இருந்தால் இரைக்க இரைக்க தொடர்ந்து ஊறி நிறைய பேருக்கு பலன்  தருவதாக அமையும். இப்படி நன்மை அடைந்தவர்கள், தங்களால் இயன்ற அளவு பிறருக்கு உதவலாம். இது சங்கிலித் தொடராக அமைந்தால் திரைத் துறைக்குதான் நல்லது.

ரியல் எஸ்டேட், திருமண மண்டபம், வணிக வளாகம் போன்றவற்றில் முதலீடு செய்வதோடு, திரைத்துறையிலும் அவர்கள் கவனமாக முதலீடு செய்தால் திரையுலகம் ஆரோக்கியமான பாதையில் செல்லத் தொடங்கும்.

2 கருத்துகள்:

  1. m athelam heroism nambinathu athe mathri unga website mmm ithu correctah any clue pls

    பதிலளிநீக்கு
  2. mksaravanavelu@yahoo.com

    ஹீரோவை நம்பினது கூட தப்பு இல்லை. ஆனா விஷயம் இல்லாம ஓவரா பில்ட் அப் கொடுத்தா கோவிந்தா கோவிந்தாதான். முதல் படியிலிருந்து கீழ விழுந்தா அடிபடாது. ஆனா ஐம்பதாவது படியிலிருந்து விழுந்தா மாவுகட்டு இல்லன்னா போஸ்ட் மார்ட்டம்தான். விழாம தப்பிக்கிறது எப்படி? உயரமா பறக்குற அளவுக்கு இல்லன்னாலும் கீழ விழாம மேல ஏறி போற அளவுக்கு விஷயம் இருக்கணும்.

    நான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்தாலும், அடப்பாவின்னு நீங்க சொல்ற மாதிரி ஒரு மொக்க இருக்கும். ஆனாலும் எழுதப்போற விஷயத்துல என்னைய திட்டுறதா மறந்துடுவீங்க.

    ரொம்பவே ஆர்வமாக்கிட்டேனா?

    புது தளத்துக்கு பேனர், வேறு சில டிசைன், பிரமாண்டமான ஒப்பனிங் போஸ்ட் தயாரிப்புன்னு வேலை அதிகமாத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு