Search This Blog

சனி, 28 நவம்பர், 2009

தட்சணை


"ஏம்மா...நான் அவ்வளவு தூரம் சொல்லியும் என் பேச்சைக் கேட்காம உன்னை யார் வரதட்சணை கேட்கச் சொன்னது? " என்ற சந்திரனின் குரலிலேயே கோபம் தெரிந்தது.

"அடப்பாவி...இதுக்காகவா பொண்ணு வீட்டுல இருந்து இங்க வந்து சேர்ற வரைக்கும் மூஞ்சியை உம்முன்னு வெச்சுகிட்டு இருந்த?...மண்டு...பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட இத்தனை பவுன் நகை போடணும்...அவ்வளவு சீர்வரிசை சாமான் வேணுன்னு கண்டிச்சுக் கேட்டாதாண்டா அதுக்குப் பேர் வரதட்சணை. உங்க சக்திக்கு என்ன செய்ய முடியுமோ அதை உங்க பொண்ணுக்கு செய்யுங்கன்னு நான் சொன்னதுக்கு காரணம் என்னன்னு தெரியுமா?

புகுந்த வீட்டுக்கு பொண்ணு வர்றப்ப அவ வீட்டுல இருந்து எதுவுமே கொண்டு வரலைன்னு வெச்சுக்கோயேன்...நாம இந்த வீட்டுக்கு வேண்டாத விருந்தாளியோ அப்படின்னு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துட வாய்ப்பு இருக்கு.அவ கல்யாணமாகி ஓரளவு அத்தியாவசியமான பொருட்களோட வந்தா இது நம்ம வீடு...இது நாம கொண்டு வந்த பொருள்...அப்படின்னு ஒரு அக்கறை வரும். மனசுல எந்த வித விகல்பமும் இல்லாம புகுந்த வீட்டோட ஒட்டிக்குவா.

நான் பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட ஏதாச்சும் செய்யுங்கன்னு சொன்னது அவங்களை கஷ்டப்படுத்துறதுக்காக இல்லை. அந்தப் பொண்ணு மனசு சங்கடப்படாம இங்க வந்து வாழ்றதுக்காகன்னு இப்ப புரியுதா?"என்று சந்திரனின் அம்மா சொன்னதும் அவன் மனதில் இருந்த மிகப் பெரிய பாரம் நீங்கி லேசானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக