Search This Blog

வெள்ளி, 27 நவம்பர், 2009

தண்டனை


"உங்க பையன் வகுப்பறையில வேணுன்னே நாற்காலியை தள்ளிவிட்டு உடைச்சுட்டானாம். தலைமையாசிரியர் உங்களை பள்ளிக்கூடத்துக்கு வர சொன்னார். "என்று அவர் சொன்னதும் சேகர்பாபுவுக்கு ஆத்திரமாக வந்தது.


விக்னேஷ் பற்றி அந்த தெருவுக்கே தெரிந்ததுதான். கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று ஏதாவது வாகனம் அல்லது வீட்டின் கண்ணாடியை உடைத்து விடுவான். இதற்காக மாதம் ஐந்து முறையாவது நஷ்ட ஈடு வழங்குவது சேகர்பாபுவுக்கு ரெகுலர் செலவாகவே இருக்கும்.


"தெருக்காரங்களுக்கு குடுத்ததை இப்ப பள்ளக்கூடத்துக்கு தரும்படியா பண்ணிட்டான்...எல்லாம் என் தலை எழுத்து..."என்று புலம்பிக் கொண்டே தலைமையாசிரியரைப் பார்க்கச் சென்றார்.


"சார்...என் பையனைப் பற்றி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். கட்டி வெச்சு நல்லா தோலை உரிங்க. பண நஷ்டத்தை நான் தந்துடுறேன்."என்றவாறு பர்சை வெளியில் எடுத்தார்.


உடனே தலைமையாசிரியர், "உங்க கிட்ட யார் சார் பணம் கேட்டா?... பள்ளிக்கூடத்துல சரியில்லாத பர்னிச்சர்களை எல்லாம் சரிசெய்ய வர்ற சனிக் கிழமை கார்பெண்டர் வர்றாரு. உங்க பையன் அவருக்கு உதவியா இருந்து  வேலை செய்யணும். இந்த தண்டனையில உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே? "என்றார்.


"தண்டனைன்னா ஒருத்தனை மேலும் முரடனாக்காம திருத்தணும்னு நினைக்குற உங்க நோக்கம் சிறப்பானது சார்..."என்று தலைமையாசிரியரைப் பாராட்டி விட்டு மன நிறைவுடன் கிளம்பினார் சேகர்பாபு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக